Monday, July 14, 2014

பா.திருச்செந்தாழையின் ”வெயில் நண்பன் பிராத்தனை ஒரு பிரதேசம் ”




மதிப்புரை                




               

                                                      படைப்புக்கலையில் ஆக நுட்பமானதும் கூடுதல் கவனத்தைக் கோருவதுமான கலைவடிவம் சிறுகதையே.ஏனெனில் இங்கு தான் சில,  பல          பக்கங்களுக்குள் வாழ்க்கையின் சாரத்தை அதன் நெருக்கடியை       படைப்பாளி தான் கைகொள்ளும் மொழியின் வழியே வாசகனுக்கு    விளக்கிக்காட்டாமல்    உணர்த்திக்காட்ட      வேண்டிய கட்டாயத்தில்   இருக்கிறான்.  நவீன   தமிழில்   வளமான  சாதனைகள் நிகழ்ந்துள்ள வடிவமும் சிறுகதைதான்.முன்னோடிகள் அவர்களின் தனித்த வாழ்க்கைப்  பார்வையின்  மூலம்  உருவாக்கி    விட்டுச்சென்றிருக்கும் சிறுகதைகள் எந்த உலகமொழியின் சாதனைக்கதைகளுக்கும் நிகரானவை. இன்று எழுத வருபவனின்  முன் நிற்கும் சாவல்களில் முதன்மையானது அவற்றை எதிர்கொள்வதும்தன் படைப்பாற்றலால் அதை முன்னெடுத்துச் செல்வதும்  தான்.   மாறாக  அவர்கள்  கட்டியெழுப்பிய  கோட்டையின் பாதிப்பில் அதையே  போலச்செய்வதும்   அவற்றின் சுவர்களுக்கு  நமது புதிய  சாயத்தை  அடித்து  நம்முடையது      எனக்காட்டிக் கொள்ளவும் துவங்கினால் அவை வெளிறிப் போக நீண் நாட்கள் ஆகாது.எனவே தான் கருப்பொருள்  சார்ந்து  தேர்ந்த  பார்வையும்  மொழி மேல் ஆளுமையும் விரிந்த கனவும் கொண்டவனையே நாம் படைப்பாளி என அழைக்கிறோம்.
              

               


          இரண்டாயிரத்துக்குப் பின் எழுத வந்தவர்களில் நம்பிக்கையளித்த இளம் படைப்பாளியான பா.திருச்செந்தாழையின் 12 கதைகள் கொண்ட முதல் தொகுப்பு “வெயில் நண்பன் பிராத்தனை ஒரு பிரதேசம்”. யதார்த்தபாணிக் கதைகளும் அதை மீறிச் செல்ல ஆசை கொண்ட கதைகளுமுள்ள குறிப்பிடத்தகுந்த தொகுப்பு இது.
              


                   மரபிலிருந்து வேர்விட்டு காலப்போக்கில் பக்கவாட்டில் (செங்குத்தாக அல்ல)கிளைத்து பரவி நவீனமாக ஆகிய மொழியில் தன் கதைஉலகை பின்னத் தொடங்கும் படைப்பாளிக்கு கதையின் கூறுமுறை சார்ந்த நுட்பங்கள் வசப்படும் போதும் வசப்படாத போதும்  அவனுள் நிகழும்  பிரதானமான போராட்டம்  தன் முன் புன்னகையுடன் நிற்கும் மொழியை தன் உலகிற்க்குள் சப்பைக்கட்டு கட்டாமல் நிமிர்ந்தெழச் செய்து ஒளியூட்டுவது தொடர்பானது தான்.செந்தாழையின் கதைகளில் மொழி சார்ந்த நகர்வைக் கொண்ட கதையென ‘ஓவியத்தை வனைந்து பார்ப்பவள்கதையைச் சுட்டலாம்.மொழியின் துணை கொண்ட புதுமையான விவரிப்புகளையும் மீறி அவை அனுபவத்தின் மேல் கட்டியெழுப்பபட்டிருக்கவில்லையெனில் அவை வாழும் காலத்திலேயே பின்னகர்ந்து விடும்.அது போலவே இன்னும் சற்று முனைந்திருந்தால் நன்றாக வந்திருக்க கூடும் என்ற எண்ணத்தை தரும் கதை ‘மழை மஞ்சள் மரணம்’.கதை நிகழும் மையம் சார்ந்த ஓட்டம் குறுகி விடுவதாலேயே அது சென்று சேர வேண்டிய இடத்திற்கும் முன்பாகவே நின்று விடுகிறது.வாசகன் இட்டு நிரப்பிக் கொள்ள மெளன இடைவெளிகள் அவசியமானது தான்.அந்த  இடைவெளியின் தூரம் வாசகன் தன் மனதால் ஓடிக் கடக்கும்படி இருந்திருந்தால் இக்கதை மேலதிகத் தரத்துடன் வந்திருக்கும்.மேலும் “மரணத்தின் இதழ்களை ஒவ்வொன்றாக கிழித்து அவர்களுடைய இன்றைய தினத்தின் மீது மிதக்க விட்டான்”(பக்.81.)போன்ற வரிகளை செந்தாழை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.


             
   இத்தொகுப்பின் சிறந்த கதைகளென கோடைப்பகல்,பிம்பச்சிதைவு,ஆண்கள் விடுதி எண்.12 ஆகிய மூன்று கதைகளையும் குறிப்பிடத் தகுந்த கதையென ஜேசுதாஸின் காதலி கதையையும் சுட்டுவேன்.வாழ்வின் இல்லாமை சார்ந்த துக்கத்தை அதன் கோலங்களை கலைப்பூர்வமான கதைகளாக ஆக்கியவர் வண்ணநிலவன்.அவரது எஸ்தர்,மிருகம் போன்ற கதைகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.திருச்செந்தாழையின் ‘கோடைப்பகல்கதையில் வெக்கையும் வறுமையும் பற்களைக் காட்டித் திரியும், காலியாகிக் கொண்டிருக்கிற ஊரில் அழகுவை தன் அன்பாலும் காமத்தாலும் திணறடிக்கிற சங்கிலி ஒரு நாளில் அவளை விட்டுச் சென்று விடுகிறான்.பசியின் பொருட்டு “செத்துக் கிடக்கின்ற பல்லியின் சாயலாய் தோன்றுகின்றவனை கவனிக்கும் வேலையை அவளாக முன்வந்து ஏற்கிறாள்.அவர்களுக்குள் காமம் இடைகலக்கிறது.ஆனால் இருவருக்குமான காமம் சார்ந்த அர்த்தங்களோ வெவ்வேறானவை.பசியின் வலியில் அவனை நோக்கி வீசிச் செல்லும் சொல்லில் அக்காமம்,தன்னை தோலுரித்துக் காட்டுகிறது.அதனை சட்டெனக் கடந்து விடுவதாலேயும் மனதில் உள்ளோடியிருக்கும் கூறுகளை நுட்பமாக உணர்த்தி விடுவதாலேயும் இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.
                          
           யதார்த்தச் சித்தரிப்பின் ஊடாக விரியும் ‘பிம்பச்சிதைவுகதையை கசாப்புக்கடையை பின்னணியாகக் கொண்டு படைத்திருக்கிறார்.காந்தத்தின் இயலாமை சார்ந்த கோபங்கள் அதனால் மனதில் எழும் பழி வாங்குதல் சார்ந்த உணர்வு அது வேறோரு இடத்தில் வெளிபடும் விதம்,அதன் சீற்றம் போன்றவை கச்சிதமாகச் சொல்லப்படுதிறது.செந்தாழை விட்டுச் செல்லும் இடங்களை உளவியலின் துணையோடு வாசித்து நம்மால் இக்கதையை மேலும் நெருங்க முடியும்.
             
                   அறைத் தனிமையின் வெக்கை பீடித்த பொழுதுகள்,அதை எதிர்கொள்கையில் நேரும் தடுமாற்றம்,அடிவயிற்று பிரசவத்தழும்புகளைமுத்தமிடுமளவிற்கு மனதை நிறைக்கும் பெண்ணுடனான உடலுறவு,பின் மீண்டும் அதே தகிக்கும் அறையென கதையின் பயணத்தில் நம் மனதில் குமிழியிடும் எண்ணங்கள்,செந்தாழையின் சில நுட்பமான அவதானிப்புகள்,அதன் மூலம் கதை கொள்ளும் சலனம் ஆகியவை “ஆண்கள் விடுதி: அறை எண்.12கதையை மேலே கொண்டு செலுத்துகிறது.
            
                 பொருத்தமற்ற இரு மனங்களின் இணைப்பில் ஒரு மனதின் அபிலாஷைகளை,ரசனைகளைக் கண்டு கொள்ளும் சூட்சமமற்ற மற்றோரு மனதால் அந்த “ஜேசுதாஸின் காதலிகாயமுறும் போது குரூரமான எண்ணத்துடன் ஆனால் நிதானமாக அவனைச் சீண்டுகிறாள்.அப்போதும் அவனிடமிருக்கும் அமைதி அவளை மேலும் உசுப்ப குற்ற உணர்ச்சி கலந்த தொனியில் எரியம்பு போல கேள்வியை எறிய அவர் அதை முன்பை விடவும் நிதானமாக கடந்து செல்வது நன்றாக வந்துள்ளது.ஜேசுதாசுக்கும் அவளுக்குமான உறவின் நிலைகள் போல அவருக்கும் அவளுக்குமான உறவின் நிலைகள் இன்னும் விரிந்திருந்தால் கதை கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கும் எனத் தோன்றுகிறது.தொகுப்பில் குறிப்பிட்டுக்கூற வேண்டிய மற்றோரு கதை “அத்தை”.



            
                   ஏற்கனவே வாசித்த அனுபவத்தை தரும் கதையாகவே “மழைப்பொழுதில்இருக்கிறது. முக்கோணம்,பெயரற்றவன்,வெயில் நண்பன் பிராத்தனை ஒரு பிரதேசம் போன்ற கதைகளும் தொகுப்பில் உள்ளன.தொகுப்பிற்கு இவ்வளவு நீளமாக தலைப்பு வைப்பது பற்றியும் செந்தாழை யோசிக்க வேண்டும்.வாசகன் அதை எவ்வாறு தன் நினைவில் வைத்திருப்பான்? 
         

                 
                 திருச்செந்தாழையின் சிறுகதைகளை வாசிக்கையில் அவர் பல இடங்களில் உரைநடையை கவிதையாக மாற்ற , சற்றே பூடகமாகக் கூற முன்னுகிறாரோ எனத் தோன்றுகிறது. தோலுரிக்கப்பட்ட பிரியத்தின் நாற்றத்திலுருந்து...”(பக்.59)போன்ற சொற்ச்சேர்க்கைகள் ஆயாசத்தையே தருகின்றன.உரைநடையில் கவித்துவ உச்சத்தை அடைந்தாலும் அப்போதும் அது உரைநடை தான்.ஏனெனில் கவிதையின் அலகுகள் வேறு.உரைநடையின் வீச்சு வேறு.மொழியை அதன் ஜடத்தன்மையிலிருந்து மீட்டு தீவிரத்தன்மைக்கு கொண்டு செல்ல மெய்யான படைப்பாளி முழுஈடுபாட்டுடன் நிகழ்மொழியின் மீது குறுக்கீட்டை நிகழ்த்தி அதை திசைமாற்றம் செய்ய  எப்போதும் முயன்றபடி இருப்பான்.நவீன தமிழில் அது கவிதையில் பிரமிள் மூலமும் உரைநடையில் சுந்தர ராமசாமி மூலமும் நிகழ்ந்தது.இத்தலைமுறை சார்ந்த திருச்செந்தாழைக்கு சில திணறல்கள் இருக்க்க்கூடும்.அது இயல்பானதும் கூட. திருச்செந்தாழை தன் அடுத்தடுத்த கதைகளில் அதை தாண்டிச்செல்வார் என நம்புவதற்கான தடயங்களை இத்தொகுப்பு கொண்டிருக்கிறது.
           
            முதல் தொகுப்பிற்குப் பின் எங்குமே செந்தாழையின் கதைகளை காணவோ வாசிக்கவோ வாய்க்கவில்லை.மீண்டும் அவர்  தன் கதை உலகை நம்பிக்கையுடன் உருவாக்க வேண்டும்.

நன்றி : கல்குதிரை வேனிற்காலங்களின் இதழ்


வெயில் நண்பன் பிராத்தனை ஒரு பிரதேசம்- பா.திருச்செந்தாழை-காலச்சுவடு பதிப்பகம்

No comments:

Post a Comment