Monday, October 17, 2016

கடலோரம் அழியாக் காலடிச் சுவடு மற்றும் முதல் சந்திப்பு.

கடலோரம் அழியாக் காலடிச் சுவடு


’எழுதணும்ன்னு ஆசைப்படுறேன் சார்..’ இரண்டாவது சந்திப்பின் போது சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். ’நல்ல ஆசை தானே’ என்றார். சிரித்தேன். அவர் சிரிக்காமல் ஆமாம் என்பது போல தலையசைத்தார். சிறு இடைவெளி விட்டு ‘பயமா இருக்கு’ என்றேன். இப்போது மெல்ல சிரித்தார். ’என்ன பயம்..எழுத்து மேலயா..?

’இல்ல. எழுதுவது நல்லா வருமான்னு’

’ஓ..அது இன்னும் விஷேசம் ஆச்சே.! ஆனா எழுத்து மேல பயம் இருந்தா ஒண்ணுமே செய்ய முடியாது. காலம் ஓடிடும்’ மேலும் மனதளவில் நெருங்கி அமர்ந்தேன். ‘எழுதுகிற வரைக்கும் அப்படியெல்லாம் பலதும் தோணும். ஆனா உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சிடணும். இப்போ எழுதுறதுக்கே பயந்தா பின்னாடி எல்லாம் இன்னும் பயம் வந்திடும். நாளைக்கு எழுதற பத்தி இன்னைக்கே ஆசை படணும். என்னென்ன திட்டம் இருக்கு. எப்படி அதை செயல் படுத்துறதுன்னு யோசனை ஓடணும்.’ 

பெரிய விஷயமெல்லாம் சின்ன பையனிடம் பேசுவதாகத் தோன்றியது. ஆனால் அவர் சம அளவில் வைத்தே எப்போதும் உரையாடுபடுவராக இருந்தார். ‘ரைட்டிங்கிறது ஒரு ட்ரீம் இல்லையா.. ஆனா அது பகல் கனவா போயிடமா பாத்துக்கணும்’ என்று கூறி கண்ணாடிக்குள் உருளும் கண்மணிகளை மேலும் சிறியதாக்கி பற்கள் தெரியாமல் உதடு விரித்தார். அந்த ’ட்ரீம்’ என்னும் சொல் ஏனோ அந்தச் சூழல், சொன்ன தொனி போன்றவற்றால் மனதில் அப்படியே தங்கிவிட்டது. ‘ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா பிரசுர நோக்கத்தில கவனமா இருக்காம எதையாவது எழுதிப்பார்த்துக்கிட்டே இருங்க. சொல்ல வந்ததை சரியா சொல்ல முடியுதான்னு பார்த்தா உங்களுக்கே தெரியும்.’ என் முகத்தை பார்த்த பிறகு இன்னும் பொறுமையாக ’நீங்க வழியில பார்க்கிற மனிதர்கள், இயற்கை, பாதிக்கிற சம்பவம்ன்னு எழுதிப் பார்க்கலாம். அப்பறம் இதழ்களுக்கு கடிதம் எழுதறது, படிச்ச புத்தகத்தை பத்தி மதிப்புரை மாதிரி எழுதப்பார்க்கறது எல்லாம் நல்ல பயிற்சி’. அவரைச் சந்தித்து திரும்பும் போதெல்லாம் இது போன்ற சொற்களை எடுத்து வந்திருக்கிறேன். கைகளில் கூழாங்கற்களை உருட்டுவது போல பயணம் தோறும் அவற்றை மனதிற்குள் உருட்டுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

பின்னால் இருக்கும் இரண்டை எடுத்துக் கொண்டேன். இலக்கிய இதழ்களுக்கு கடிதங்கள் -குறிப்பாக அவற்றில் வெளியான சிறுகதைகள் குறித்து- அவ்வப்போது எழுதினேன். நூல்களை மதிப்பிட்டு எழுதியதும் நல்ல பயிற்சியாக அமைந்தது. மேலும் ஒன்று சொன்னார் ‘விடாம வாசிக்கணும். எழுத்தாளனுக்கு இலக்கியம் வாசிச்சா மட்டும் போதும்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அப்படியில்ல. அறிவுலகத்தில் இது தான் வாசிக்கணும்ன்னு இல்லை. வேற வேற துறையில் இருக்கிறதையும் வாசிக்கலாம். அது எப்போ எங்கே உங்களுக்கு யூஸ் ஆகும்ன்னு சொல்லவே முடியாது.’ கொஞ்சம் இடைவெளி விட்டு ‘அப்படி யூஸ் ஆகாம போனத் தான் என்ன? ஒண்ணைக் கத்துக்கிட்டீங்க இல்லயா.! பிறகு எதைப் படிக்கணும்ங்கறது அவங்க அவங்க டேஸ்ட்டைப் பொறுத்தது. ஆனா படிக்கணும். தொடர்ச்சியா வாசிக்காத ஒருத்தன் நல்லா எழுதறான்னு சொன்னா அதை நம்ப மாட்டேன்.’ என்று நிறுத்தினார். அவர் தேர்ந்த உரைநடையாளர்(Stylist) என்ற போதும் மனதையும் மொழியையும்  புத்துணர்வு கொள்ளச் செய்வது கவிதையே என்று சொல்லிவந்தார். அவரது பல உரைநடைகள் இன்று எழுதப்படும் கவிதை போலவே இருப்பதைக் காணலாம். ஆனால் அவர் எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தவிர்த்து மீதியுள்ளவைகளில் தன் உரைநடையில் தொட்ட இடங்களை விடவும் குறைவே. அதை அ.கா.பெருமாளுக்கு அளித்த நேர்காணலில் அவரே ஒப்புக் கொள்ளவும் செய்திருக்கிறார். ஆனால் உரையாடலிலும் கடிதங்களிலும் அக்கவித்துவத்தை அவர் விட்டுவிடவேயில்லை. ஒரு இசை ஆல்பத்தைக் கேட்ட பிறகு அது குறித்து தன் நண்பரிடம் சொல்லும் போது ‘அது மனதைப் பிடுங்கி ஆகாயத்தில் எறிந்தது’ என்று சொல்லியிருக்கிறார்.  

நான் போய் சந்தித்த ஆண்டுகளில் அவருக்கு நேரம் என்பது குறைவானதாக போதுமானதாக இருக்கவில்லை. ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இருப்பார். அவருடைய பழைய நண்பர்கள் அவரை விட்டு விலகியிருந்த நாட்கள் அவை. அப்போது அவருடன் தொடர்ச்சியான கடித தொடர்பில் மூவர் மட்டுமேயிருப்பதாக ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.  மூவரில் மற்ற இருவரும் நல்ல வாசகர்களே. ’பொள்ளாச்சி’ கோபாலகிருஷ்ணன், ’தடா’ சிறைக்கைதி ஏழுமலை. இவர்களில் கோபாலையும் என்னையும் அறிமுகப்படுத்தி வைத்து கடிதத்தொடர்புக்கு வழிகோலினார். நாங்கள் இருவரும் கடிதங்கள் எழுதிக் கொண்டோம். அந்த வயதில் ஒன்று நினைவுக்கு வந்தது. சு.ராவைக் க.நா.சுவின் பாத்திரத்திலும் எங்கள் இருவரையும் சு.ரா கிருஷ்ணன் நம்பி பாத்திரத்திலும் இருப்பதாக கருதினேன். என்னை விட வயதில் மூத்தவர் என்பதால் நான் கிருஷ்ணன் நம்பியாக இருந்து கொள்கிறேன், கோபால் சு.ராவின் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளட்டும் என நினைத்தேன். ஆனால் தலைகீழாக சு,ரா நம்பியைப் பார்க்க அவிநாசிக்கு வந்திருந்தார். கையில் க.நா.சு எழுதிய கடிதம் இருந்தது. பேசிய பிறகு கடிதத்தை கோபால் தந்தார். அதில் சு.ரா ‘உங்களுக்குள் நட்பு மலர்ந்தது சந்தோஷத்தைத் தந்தது. நேரம் இருக்குமென்றால் இருவருக்கும் மத்தியில் இருக்கும் ஊரில் பத்து நாட்கள் தங்கி இருந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்னும் பொருளில் அவருக்கு எழுதியிருந்தார். அவரது பணிகளுக்கு இடையே அது சாத்தியமேயில்லை தான். ஆனால் அப்படியொன்று அவருக்குத் தோன்றியதே..! முடியுமென்றால் அதை செய்துமிருப்பார். ’அவராகவெல்லாம் ஆக முடியாது’ என்று இருவரும் பேசிக் கொண்டோம். ’ஆகாமல் போனால் தான் என்ன?’ என்று தோன்றுவதற்கு மேலும் சில ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் அது வேறு தலைமுறை. கசப்புகள் எல்லா காலகட்டங்களிலும் இலக்கியத்திற்குள் இருந்து கொண்டு தான் இருந்தன. அதைக் கடந்து அவர் பாஷையில் சொல்வதென்றால் அப்போது ‘கொஞ்சம் சொரணை இருந்தது’.   



’வழவழப்பு மட்டும் இல்லாம பாத்துக்கணும்’ என்று எழுத்து பற்றிய வேறொரு உரையாடலில் சொன்னார். ‘கச்சிதம் பத்தி சொல்றீங்களா’ என்றேன். ‘அதுவெல்லாம் எழுதி முடிச்ச பிறகு..ரைட்டிங்குள்ளயே அது வராம இருக்கிறது நல்லது. அதுவும் ஆரம்பத்துலயே அதுல கவனமா இருந்தா பின்னால சிரம படவேண்டியதேயில்லை’ என்றார். அவருக்கு எழுதும் கடிதங்களில் வாசித்த நூல்கள் அது பற்றிய என் கருத்துக்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதில் தவறாமல் சென்று வந்த இலக்கிய கூட்டங்களைக் குறிப்பிடுவேன். ஒரு பதிலில்  ’அதையெல்லாம் தெரிவு செய்து தான் செல்ல வேண்டும். அது தான் ஆரோக்கியத்துக்கு நல்லது’. என்றிருந்தார். அன்று அவ்வரிகள் புரிந்த  உதவி மிகப் பெரிது.

சுந்தர ராமசாமியிடம் பேசும் போதும் கடிதத்திலும் முதலில் எப்போதும்  அவர் கேட்கும் கேள்விகள்  ’சமீபத்தில் என்ன புத்தகம் வாசித்தேன்?’ ’ஏதேனும் புத்தகம் வேண்டுமா? தேவையெனில் நூலகத்திலிருந்து அனுப்பச் சொல்கிறேன்.’ என்பதாகவும் தான் இருந்திருக்கிறது. அவர் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் அவருக்கு எழுதிய கடிதத்தில் அதே கேள்வியைக் கேட்டிருந்தேன். ’நேரம் குறைவு. பல மரத்தைக் கண்ட தச்சன் ஒன்றையுமே வெட்ட மாட்டான்’ என்பது போல போய்க் கொண்டிருக்கிறது’ என அமெரிக்காவில் இருந்து பதில் எழுதினார். ஆனால் அவர் முன்னர் வெட்டிச் சீராக்கி வைத்திருக்கும் மரங்கள் கண் முன்னே ஆயிரக்கணக்கான பக்கங்களாக விரிந்திருக்கின்றன. நாம் ஆசைப்பட்டு ஆனால் வெட்டப்படாமல் இருக்கும் மரங்கள் நம் நினைவை ஊடறுக்கின்றன. இவையே இந்த நினைவுக் கட்டுரையின் செய்தியாக இறுதியில் எஞ்சி இருப்பதாகக் கருதுகிறேன்.   

நன்றி : தி இந்து நாளிதழ்

16.10.2016 அன்று நாளிதழில் இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
--------------------------------------------------------------------------------------------------------------------

முதல் சந்திப்பு

சுந்தர ராமசாமி மறைவுக்குப் பின் அவர் குறித்து எழுதப்பட்ட நினைவுக் கட்டுரைகளில் அவரை முதன் முதலில் சந்திக்கச் சென்றது பற்றிய குறிப்பு பெரும்பாலும் இடம்பெற்றிருந்தது. அவற்றில் ஏழோ எட்டோ கட்டுரைகளில் ஒரு பகுதி ஒன்று போலவே இருந்ததைக் கண்டிருக்கிறேன். நேராக நாகர்கோவில் கிளம்பிச் செல்வார்கள். பிறகு சுதர்சன் கடையைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் பலரும் உள்ளே போக மாட்டார்கள். கடையின் முன் கொஞ்ச நேரம் அப்படியே நடப்பார்கள். வந்து பார்த்தால் கண்ணாடி ரேக்கிற்குப் பின் சு.ரா அமர்ந்திருப்பதைக் காண்பார்கள். பிறகும் நடந்து பார்த்து விட்டு வந்தால் அப்போதும் உள்ளே உட்கார்ந்திருப்பார். ‘என்ன இது?’ என்னும் தயக்கத்துடன் திரும்பி சென்று விடுவார்கள். பிறகொரு நாள் தான் அச்சந்திப்பு நிகழ்ந்ததாக எழுதியிருப்பார்கள். மலையாள எழுத்தாளர் சி.ஜே.தாமஸை காணச் சென்றதை ‘என் கடவுள் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்துத்’ திரும்பி வந்து விட்டதாக சு.ரா எழுதியிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. அது போலவே எம். கோவிந்தனைப் பார்க்கப் போய் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த போது காகத்தின் எச்சம் மேலே விழுந்ததை சாக்காக வைத்துக் கொண்டு திரும்பி விட்டதாக சு.ரா எழுதியிருப்பார். மேற்கண்ட கட்டுரைகளில் ஒன்றிரண்டு பேர் உண்மையைத் தவிர எழுத்தில் வேறெதுவும் பேசாதவர்கள். அவர்களைத் தவிர பிறர், கட்டுரை ‘அப்படியே ஸ்டைலாக’ வர வேண்டும் என்பதற்காக ’அப்படி’ எழுதியிருப்பார்களோ என்னும் ஐயம் எனக்கிருக்கிறது. அது ஐயம் தான் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

கடிதம் எழுதிக் கேட்ட பின்பு, சுமார் ஆறு மாதக் கடிதத் தொடர்புக்கு பின்(வாரத்துக்கு இரண்டு கடிதங்கள் வீதம்) அவரைக் காண என் இருபத்தியொன்றாவது வயதில் கிளம்பினேன். அப்போது கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு இரவு இரயில் கிடையாது. ’பகல்நேர பாசஞ்சரில்’ தான் போக வேண்டும். சுமார் 12 மணிநேரப் பயணம். போய் இறங்கியதும் அழைக்கச் சொல்லி எழுதியிருந்தார். குரல் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன் ரயிலடியிலிருந்து தொலைபேசினேன். மென்மையான குரலில் அவர் பெயரைச் சொல்லாமல்  பக்கத்து வீட்டு டாக்டர் பெர்யரையும் எதிர்புற அடையாளத்தையும் சொல்லி முகவரி சொன்னார்.  ஆட்டோக்காரர் இறக்கி விட்ட போது இரவு ஒன்பது இருக்கும். நானும் உள்ளே எட்டிப்பார்த்து அந்த ரோட்டில் ’கேட் வாக்’ செய்திருக்கலாம் தான். ஆனால் அது போல இந்த கே.பி.சாலை இருக்கவில்லை. ‘உன்னப்புடி..என்னப்புடி’ வேகத்தில் வாகனங்கள் குறுக்கு மறுக்காக பாய்ந்து கொண்டிருக்கும். நானும் போகலாமா வேண்டாமா என்னும் யோசனையில் அங்கு முன்னும் பின்னும் நடந்திருந்தால் என் உயிரை அவர் வீட்டின் எதிரேயிருக்கும் வேட்டாளி அம்மனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது.

’சாப்பிட்டேனா’, ‘பாத்ரூம் போகிறீர்களா’ என்றெல்லாம் கேட்டுவிட்டு ’பயணமெல்லாம் எப்படி இருந்திச்சு..ரொம்ப நேர உட்கார்ந்துக்கிட்டே வரணுமே’ என்றார்.

’ஆமா சார்..ஆனா டிக்கெட் விலை ரொம்ப கம்மி சார். திருப்பூர்ல இருந்து இங்க வர வரைக்கும் முப்பத்தி மூணு ரூபா தான் சார்” (முப்பத்தி மூணா அறுபத்தி ஆறா எனக் குழப்பமாக இருக்கிறது)

”ஓ..அதனால் தான் இதுல வந்தீங்களா..”

‘அதுவும் ஒரு காரணம் தான் சார்..ஆனா சார்..”

”யென்ன?”

”நாகர்கோவில் வர்றதுக்கு முப்பத்து மூணு ரூபா..ஆனா ஸ்டேசன்ல இருந்து இங்க வர்றதுக்கு ஆட்டோக்கு இருபது ரூபா சார்”

’கொடுத்துட்டீங்க இல்லயா..’

அது கிண்டல் எனத் தெரியாமல் ‘ஆமா சார். கொடுத்துட்டு தான் கீழே இறங்கினேன். ஆனா அவர் கிட்ட நீங்க சொன்ன அட்ரஸ சொல்லல. ராமவர்மபுரத்துல சுந்தர ராமசாமி வீடுன்னு தான் கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டார் சார். இவ்வளவு வருஷமா எழுதிக்கிட்டு இருக்கீங்க..” சட்டென இடைமறித்து அதில் அக்கறை காட்டாதவராக மீண்டும்

”சாப்பிட்டீங்களா..” என்றார். அப்போது ஒல்லியும் உயரமுமாக குச்சி மாதிரி இருப்பேன். எனக்கு முன்னரே பொள்ளாச்சியிலிருந்து கோபாலகிருஷ்னன் என்னும் என்னை விட ஆறேழு வயது மூத்தவர் அவருக்கு அறிமுகமாகி நட்புடனும் கடிதத் தொடர்புடனும் இருந்தார். கோபாலுக்கு திக்குவாய் இருந்தது. அதற்கு சில ஆண்டுகள் கழித்து சு.ரா எழுதிய ’ஒரு ஸ்டோரியின் கதை’யில் வரும் இரு வரிகள் எங்களுக்கானது என நம்புகிறேன். ‘மூங்கில் கழி போல வளர்ந்திருந்த அந்த வயசாளி’ என்பது எனக்கானதாகவும் ‘பிறவியிலிருந்தே திக்கத் தொடங்கியிருந்த வயசாளி’ என்னும் வரி (வரிகளை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன்) கோபாலுக்கானதாகவும் கருதினேன். இதை கோபாலிடம் சொன்னேன். சு.ராவிடம் ’சரி தானா சார்? எனக் கேட்க கூச்சமாக இருந்தது. எனவே கேட்கவேயில்லை.


அதுவரை இருந்து கொண்டிருந்த கூச்சம் புதிய இடம் பற்றிய தயக்கம் எல்லாம் சிறிது சிறிதாக அகன்று கொண்டிருந்தது.

”திருநெல்வேலில டிரெயின் அரைமணி நேரம் நின்னுச்சு சார். அந்த ஸ்டேசன்ல புரோட்டா சாப்பிட்டேன்.”

’ஆனா அவருக்கு உங்க பேரு தெரியாதது வருத்தமாக இருந்துச்சு சார்…’ என்றேன் மீண்டும்.

சட்டென தலையை நேர் தூக்கிப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்து தானாக தலையை அசைத்த பிறகு ”காலேஜ் ப்ரோபசர்களுக்கே என் பேர் தெரியாது. என்னையும் தெரியாது..” என் முகத்தைப் பார்த்த பின் ”அதிர்ச்சியா இருக்கா.. போக போக இதெல்லாம் உங்களுக்கே தெரியவரும்” என்றார்.

உள்ளே இருந்து கமலாம்மா வந்தார். அறிமுகப் படுத்தினார். எழுந்து நின்று வணக்கம் சொன்னேன். சுரா பற்கள் தெரியாமல் சிரிக்க கமலாம்மா ‘மோர் குடிக்கறேளா’ என்றார்.

‘என்னது மோரா..! நைட் ஒன்பது மணிக்கா..! வெயிலுக்குத் தானே மோர் குடிப்பாங்க.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அப்படி ஒரு அம்மா வந்து கேட்டால் எப்படி வேண்டாமென்பது? தலையாட்டினேன்.

அதிர்ச்சியாகும் விதமாக சு.ரா கேட்டார் ‘வீட்ல சொல்லீட்டுத் தானே வந்தீங்க’

பயந்த முகத்துடன் ’ஆமா.. ஏன் சார்?”

’இல்ல. அவ்வளவு தூரத்துல இருந்து என்னப் பார்க்க மட்டும் தான் வந்தீங்களா? வீட்ல எதுவும் சொல்லலயா’  என அடுத்த கேள்வியைக் கேட்டார்.

மேலும் பயமாகி ’உங்க லெட்டர் எல்லாம் வருதே சார். அவங்களுக்குத் தெரியும். போற வர்ற இடமெல்லாம் சொல்லீட்டு தான் வருவேன். உங்களப் பத்தியெல்லாம் அவங்க கிட்ட சொல்லியிருக்கேன் சார்’ என்றேன். ஆனா ஏனோ அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்டார். அப்போது புரியாமலும் குழப்பமாகவும் இருந்தது. மேலும் சில ஆண்டுகள் கழித்து பிற எழுத்தாளர்கள் எழுதியிருந்ததை வாசித்த பின்பே தெளிவு பிறந்தது. இரண்டாவது முறையும் ’என்னைப் பார்க்கத் தான் இந்த வயசுல அங்க இருந்து வந்தீங்களா?’ எனக் கேட்ட போது ’ஆமாம்’ என்று சொன்னதில் இருந்த உறுதி இன்றும் நினைவில் அசைகிறது.

என்னை ஒரு மாதிரி சகஜநிலைக்கு கொண்டு வந்துவிட்டிருந்தார். நானும் பயணத்திலும் வீட்டிலும் ”அவரிடம் என்ன பேச வேண்டும்?” ”என்ன கேட்க வேண்டும்” என்பதையெல்லாம் யோசித்தபடியே இருந்ததை நினைவுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தேன். யாரும் அவரிடம் அவர் படைப்பைப் பற்றிக் கூறாத ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் துடிப்புடனும் உற்சாகத்துடன் அந்த வயதிற்கேயுரிய முதிர்ச்சியில்லாத உடல் அசைவுகளுடன் தயார் ஆகிக் கொண்டிந்தேன். இலக்கியம் பேசுவதென்றால் அவர் படைப்பைப் பற்றித் தானே இருக்க முடியும் என்னும் நம்பிக்கையில் மூளையில் திரட்டிக் கொண்டிருந்தேன். இலக்கியம் சம்பந்தமாக முதல் கேள்வியை, நேரடியான உரையாடலைத் தொடரும் பொருட்டான முதல் கேள்வியாக

‘புதுமைப்பித்தனைப் படிச்சிருக்கேளா?’ என்றார்.

Wednesday, July 13, 2016

விழித்திருப்பவனின் கனவு நூல் - மதிப்புரை



புனைவின் ரகசியக் கதவுகளைத் திறக்கும் பணி


-த.ராஜன், அர்ஜுன்





பிறகு மீண்டும் தொடரும்… ஒரு
தமிழின் நவீன விமர்சனத்தில் ஏற்கனவே உருவாகிவிட்ட தராசுத்தட்டுகளில் படைப்பை நிறுத்தி, அவற்றைப் பழைய எடைக்கற்களால் அளவிடுவதல்ல விமர்சகனின் பணி. அதற்கு படைப்பு, பண்டமோ சரக்கோ அல்ல. புதிய வெளிச்சங்களைப் படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் வழங்குவதோடல்லாமல் பின்தங்கிய படைப்புகளை நிர்த்தாட்சண்யமாக ஒதுக்கிவிடுவதுமே அவன் செய்யக்கூடிய முதன்மையான, தலையாய காரியமாக இருக்கும். 
                                    – கே.என்.செந்தில்.

இக்கூற்றிலிருந்து கடுகளவும் விலகாமல்,தன்னைப்பாதித்த முன்னோடிகளின் படைப்புகள் மற்றும் தன்மனதிற்கு நெருக்கமான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனநூல் குறித்த தனது விமர்சனங்களும் மதிப்புரைகளும் அடங்கிய விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதுபோன்ற விமர்சனக்கட்டுரைகள் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் வெவ்வேறுவகையில் தனது பங்களிப்பை ஆற்றுகின்றன. ஒருபடைப்பாளி தன்படைப்பின் பல்வேறு வாசக பரிமாணங்களை அறிவதற்கும் அதன்மூலம் தன்னெழுத்தை மெருகேற்றிக்கொள்ளவும் இம்மாதிரியான கட்டுரைகள் உதவுகின்றன.
                                                                      த.ராஜன்

                                                                         அர்ஜுன்

மேலும் இம்மாதிரியான சார்பற்ற சுயபிரக்ஞையோடு எழுதப்பட்ட விமர்சனங்கள், படைப்பாளிகள் தங்களின் அடுத்தடுத்த படைப்புகளில் தங்களை சுயமதிப்பீடு செய்வதற்கும் வாசகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து தம் படைப்புகளை சீர்படுத்தவும் கூட நிர்பந்திக்கலாம். வாசகபருவத்தினருக்கு இம்மாதிரியான கட்டுரைகள் பல புதிய நூல்களையும் ஆசிரியர்களையும் அடையாளம் காட்டுகின்றன. அவர்களுக்கான சாளரங்களின் திறவுகோலாக இவை இருக்கின்றன. புரிதலைத்தாண்டி ஒவ்வொரு படைப்பையும் உள்வாங்கிக்கொள்ளவும், வாசிப்புத்தன்மையை மெருகேற்றிக்கொள்ளவும் இம்மாதிரியான மதிப்பீடுகள் அவசியமாகின்றன.
தமிழிலக்கியத்தில் முன்னோடிகளான மௌனி, சுந்தரராமசாமி, சி.மணி, வைக்கம் முகம்மதுபஷீர் மற்றும் அம்பை ஆகியோரின் படைப்புகள் குறித்தும் அவர்களின் ஆளுமைகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. இக்கட்டுரைகளுள் பஷீரைப்பற்றியும் அவரின் படைப்புலகைப்பற்றியும் எழுதியிருப்பது குறிப்பிடத்தகுந்த கட்டுரை. மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டுரையாக ‘அனர்க்கநிமிஷங்கள்’ நிச்சயம் இருக்கும். பஷீரை மீள்வாசிப்பு செய்ய விரும்பும் வாசகன் அதற்குப் பதிலாக இக்கட்டுரையை வாசித்தாலே போதுமானது எனும் அளவிற்கு அவரது படைப்புகளிலிருக்கும் உச்சங்கள் அனைத்தையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பஷீர் கையாளும் அவருக்கே உரிய பிரத்யேகமான வார்த்தைகளைப் பொருத்தமான இடங்களில் தனது கட்டுரையிலும் பயன்படுத்தியிருப்பது கூடுதல் நெருக்கத்தைத் தருகின்றது. ஒருபெருங்காதலனின் பழுத்த அனுபவங்களை எள்ளலுடன் கூடிய ஒருமொழியில் சாத்தியப்படுத்தியவர் பஷீர். இந்தக்கட்டுரை பஷீரின் எழுத்துகளில் இருக்கும் பலப்பல அடுக்குகளை நமக்கு விவரிக்கின்றன. நாராயணியையும் சுகறாவையும் நினைவுகளால் மீட்டெடுக்கச் செய்வதாயும் காதலினால் பஷீர் கடந்துவந்தபாதையை நமக்குக்காட்டுவதாயும் இருக்கின்றன. உண்மையில் இந்த நீண்ட கட்டுரை பஷீரின் எழுத்துகளுக்கான மதிப்புரை என்பதைவிட அவருக்கான தட்சணை என்றுசொல்வதே பொருத்தமாக இருக்கும்.

எழுத்தில் சமகாலத் தன்மை இல்லாதது வாசகனுக்கு அயர்ச்சியைத் தரக்கூடியது. மெளனி போன்ற தமிழின் இலக்கிய கர்த்தாக்களை இளம் வாசகன் ஒருவன் தவிர்த்து விட இதுவே போதுமான காரணமாக இருக்கலாம். இம்மாதிரியான சமகாலச் சூழலில் மெளனியின் படைப்புகளைக் குறித்த இவரது கட்டுரை இந்த வாசக மனநிலையை மாற்றியமைக்கலாம். மௌனி அணுகுவதற்கும் உணர்ந்துகொள்வதற்கும் எளிதானவர். மௌனியை அகவுலகின் முதல் பயணியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மேலும் மௌனியை ஒரு ஞாநியாகக் காண்கிறார். எந்த ஒரு எழுத்தும் வாசகனுக்கு பரந்துபட்ட வெளியைத் திறந்து வைத்து அவ்வெழுத்துகளில் தனக்கான புரிதலைத் தேடவைக்கும். ஆனால் மெளனியின் படைப்புகள் பூட்டப்பட்ட மனக்கதவுகளுக்கு அப்பால் உள்ள நிகழ்வுகளை நமக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கின்றன.இந்தக்கட்டுரையை வாசிக்கும்போது சுசீலாவின் பழைய பழுப்பேறிய கருப்பு வெள்ளைப் புகைப்படமொன்று விழித்திரைகளுக்குள் நிழலாடுகிறது. மௌனியின் அதே பிரக்ஞையோடே அவரின் படைப்புகளின் விமர்சனத்தை முன் வைக்கிறார் கே.என்.செந்தில்.
சுந்தரராமசாமி எனும் பெயரைக் கேட்டவுடன் சட்டென அனைவருக்கும் நினைவிற்கு வருவது ‘ஜேஜே சில குறிப்புகள்’ நாவலாகத்தான் இருக்கும். பலரும் அதை வாசிக்க முயன்று தோற்றிருக்கும் கதையைக்கேட்டிருக்கிறேன். ஜேஜேவைப் பற்றிய விமர்சனங்கள் அவரைப் புரிந்துகொள்ள கடினமானவர் என்ற ஒரு மாயையை பல வாசகர்களுக்கும் தோற்றுவித்திருக்கக்கூடும். கே.என்.செந்திலின் சுந்தரராமசாமி பற்றிய கட்டுரையும் அழகியலும் தீவிரத்தன்மையும் கொண்ட ஒருவராகத்தான் சுராவைச் சுட்டுகிறது. இருந்தாலும் சுராவின் கதைகளைப் பற்றி இவர் கொடுத்திருக்கும் அறிமுகங்கள் சுராவின் மீது படிந்திருக்கும் புரிந்துகொள்ளக் கடினமானவர் என்கிற மென்திரையை விலக்கியிருக்கிறது. இந்தக் கட்டுரை சுராவை அணுகுவதற்கான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பிட்ட படைப்புகளையும் படைப்பாளிகளையும் மட்டுமே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சூழலில் அதிகம் கவனம் பெறாத அற்புதமான படைப்பான ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ நாவலுக்காக இவர் எழுதிய மதிப்புரை பாராட்டுதலுக்குரியது. எண்ணற்ற ஆட்கள் காதலை, சாலைபோலக் கடந்து செல்லும்போது பாண்டி மட்டும் ஏன் மனப்பிறழ்வுக்கு ஆளாகிறான் எனும் கேள்வியைப் பின்தொடர்ந்து செல்கின்றன கே.என்.செந்திலின் வரிகள். நாவலில் சூசகமாகச் சொல்லப்பட்ட, சொல்லாமல் விடப்பட்ட இடைவெளிகளை வாசகனின் மனதில் நிரப்ப முயற்சி செய்கின்றன. ஆனால் மிகச்சிறிய அளவிலேயே இக்கட்டுரையில் அது நிகழ்ந்திருக்கின்றது. இந்நாவல் குறித்து இன்னும் விரிவான பார்வையை கே.என்.செந்திலால் முன்வைக்க முடியும்.

ரேமண்ட்கார்வரின் மொழி எளிமையானது. மேலோட்டமான வாசிப்பில் அவரது கதைகளை வாசகனால் எளிதாகக் கடந்துவிடமுடியும். கதைகளின் ரகசியக்கதவுகளைத் திறந்துவைக்கும் பணியைச் செய்கின்றன இவரது கட்டுரை .’கதீட்ரல்’ கதையின் முடிவினை இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘அவ்விருவருக்குமான சிறுசிறு உரையாடல்மூலம் மேலும் அவர்கள் நெருக்கமாகி எழுப்பும் ‘கதீட்ர’லை காணும் வாசகன் சில கணநேர மௌனத்திற்குப் பின்னர் தன் மனதிற்குள்ளாக எழுப்பும் கதீட்ரல் அதற்கு நிகராக மேலெழுவதை அவனே வியப்புடன் உணரக்கூடும்’. கதீட்ரல் கதையினை வாசித்து முடிக்கையில் சில உணர்வுகளுக்கு நம் மனம் ஆட்படும். இக்கதையில் மட்டுமென்றில்லை, பொதுவாகவே இதுபோன்ற உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டு வருவதென்பது பெரும் சாகசம்தான். அந்த வித்தை கே.என்.செந்திலுக்கு லாவகமாக வெகுஇயல்பாக கைகூடி வந்திருக்கின்றது.
விமர்சனம் என்னும் பெயரில் படைப்புகளின் உன்னதத்தைச் சிதைக்காமல், அதில் ஒளிந்திருக்கும் நுட்பமான தருணங்களைச் சுட்டிக்காட்டிய அதேவேளையில், அதிலிருக்கும் குறைகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சித்திருக்கிறார். ஒரு படைப்பைப் பற்றிய தனது கருத்துகளை ரசனைசார்ந்து முன்வைப்பதைத் தாண்டி அது விமர்சனமாவதற்கு பரந்த நுட்பமான வாசிப்பு அவசியமாகின்றது. ரசனைக்கும் இங்கே முக்கிய பங்குண்டு. இக்கட்டுரைகளில் ஆங்காங்கே கதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் வாசிப்பு குறித்தும் முன்வைக்கும் கோட்பாடுகள் கே.என்.செந்திலினது வாசிப்புலகின் பரந்துபட்ட பரப்புகளைக் காட்டுகின்றன. ஒரு வாசகனாக விமர்சனமாக படைப்புகளின்மீது அவருக்கிருக்கும் பார்வை நமது தமிழ் இலக்கியச்சூழலுக்கு மிகவும் அத்யாவசியமானது. இந்நூலில் படைப்புகளை முன்வைத்து அவர்களின் எழுத்துலக ஜீவிதத்தை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அறிமுகம் என்பதில் இவை யாவும் இவர்களை வாசித்தே இராத சிலருக்கான கட்டுரைகள் மட்டுமல்ல. நாம் வாசித்துக் கிறங்கிப்போன பல படைப்புகளின் நுட்பமான அந்தரங்கங்களைத் தொட்டும் ஒரு நினைவுகூறலையும், வாசிப்பில் நாம் தவறவிட்ட சில அற்புதத் தருணங்களையும் நினைவுபடுத்திச் செல்கின்றன.
நன்றி : புத்தகம் பேசுது  ( ஜுலை 2016 இதழ்)

Friday, June 10, 2016

கவிதை- நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது




நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது




பச்சையிலிருந்து சிவப்புக்கு
மாறுகிறது - பதிமூன்றாவது சுற்றில்
வென்றுவர அறுபது வினாடிகள்
அவருக்கு ஒதுக்கப்படுகிறது.
துழாவி நகர்ந்து எரிச்சல் முகங்களின்
இடையே
அந்த பார்வையற்றவர் வான் நோக்கி
குழிந்திருந்த துண்டை ஏந்தியபடி
வறண்ட சாரீரத்தில்
காணா இன்பம் கனிந்ததேனோ...”
பாடுகிறார்வரிகளினிடையே  நட்சத்திரங்கள்
குட்டிக்கரணம் அடித்து விழுகையில்
கூப்பிய கரங்களுடன் ஹாரன்களுக்கு வழிவிட்டு
மரத்தடிக்கு நகர்கிறார் - கடவுள்
கிளைகளை அசைக்க பழுப்பு இலைகளும்
பூக்களும் உதிர்கின்றன அந்த நட்சத்திரங்களின் மீது.
பதினான்காவது சுற்றுக்குள் நுழையும் முன் - வினாடிகள்
அறுபதிலிருந்து தொண்ணூறுக்கு மாறியிருக்கிறது.
கடவுளால் செய்யக்கூடியதெல்லாம்
அவ்வளவுதான்

நன்றி : விகடன் தடம் இதழ் -1 

Thursday, May 5, 2016

இரவுக்காட்சி சிறுகதைத் தொகுப்பு - உரையாடல், விவாதம்

நண்பர்களுடன் இணைந்து மதுரையில் ‘சாவடி’ என்னும் அமைப்பைத் தொடங்கி இருப்பதாகவும் அதன் முதல் கூட்டம், என் முதல் சிறுகதைத் தொகுப்பான ’இரவுக்காட்சி’ பற்றியதாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் திருச்செந்தாழை அழைத்துக் கேட்டார். உடனே ஒப்புக் கொண்டேன். 30/01/2011 அன்று நிகழ்ந்த கூட்டத்தில் சமயவேல், ந.ஜயபாஸ்கரன், ஸ்ரீசங்கர், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, கார்த்திகை பாண்டியன் , ஹவி மற்றும் அவரது துணைவியார் இந்திரா, செந்தி, புதுகை சஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு தொகுப்பை முன்னிட்டு விவாதிக்கப்பட்டவைகளை கார்த்திகை பாண்டியன் உரையாடல் வகையிலேயே எழுதி எனக்கு அனுப்பி வைத்தார். நினைவிலிருந்து எழுதினேன் என்று கா.பா சொன்னாலும் சரியாக வந்திருந்தது. அதை நெடுநாட்களாகத் தேடிக் கொண்டேயிருந்தேன். அகப்படவேயில்லை. இன்று நினைவு வந்து கா.பாவிடம் கேட்டதும் தன் வலைப்பக்கத்தில் இன்னும் அந்த உரையாடல் இருப்பதாகவும் அனுப்புகிறேன் என்றும் சொன்னார். உடனடியாக அனுப்பி வைத்தார். அந்தக் கூட்டத்தில் நடந்த உரையாடல் மற்றும் விவாதத்தின் பதிவு இது . கார்த்திகை பாண்டியனுக்கு அன்பும் நன்றியும்.

**********************.

மதுரையில் இருக்கக்கூடிய இலக்கிய நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடிசாவடி என்கிற புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள் / றோம். இன்றைய தமிழ்ச்சூழலில் முக்கியமானவர்கள் என்று சொல்லக்கூடிய இளம் படைப்பாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் படைப்புலகம் பற்றிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, அவர்கள் மீது பரவலான கவனிப்பை உண்டாக்குவதே இவ்வமைப்பின் நோக்கம். இதன் தொடர்ச்சியாக 30-01-2011 அன்று மதுரை காக்காத்தோப்பில் இருக்கும் மூட்டா ஹாலில்சாவடியின் முதல் அமர்வு நடைபெற்றது. “இரவுக்காட்சி என்கிற தன்னுடைய சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றிருக்கும் கே.என்.செந்தில் இந்த நிகழ்வின் முதல் படைப்பாளியாக கலந்து கொண்டார்.

                                           

மதுரையில் இருக்கும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அவர்கள் - சமயவேல், .ஜயபாஸ்கரன், ஸ்ரீசங்கர், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, ஹவி மற்றும் அவரது துணைவியார் இந்திரா, செந்தி, புதுகை சஞ்சீவி ஆகியோர்.வலைப்பதிவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். வாசிப்பில் புதிதாக நுழைய விழையும் வாசகர்கள் மற்றும் சில பெயர் தெரியா நண்பர்கள் என பலர் ஒன்று கூடிட நிகழ்வு பதினொரு மணிக்குத் தொடங்கியது. நிகழ்வுகளை என்னுடைய நினைவிலிருந்து மீட்டெடுத்து முடிந்தவரை சரியாக எழுத முற்படுகிறேன். எங்கும் ஏதேனும் தவறு இருந்தால் தொடர்புடையவர்கள் மன்னியுங்கள்.

முதலாவதாக எஸ்.செந்தில்குமார் பேசினார். “ஆரம்பிக்குமுன், இன்றைக்கு நாம் எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று பேசுவோம். அகச்சிக்கல்கள், நெருக்கடி என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் விஷயங்களைத்தான் காலம் காலமாக எழுதி வருகிறோம். அப்படிப் பார்க்கும்போது இன்றைய இளம் படைப்பாளிகளுக்கான பெரும் நெருக்கடியாக எது இருக்கிறது? பெரும்பாலும் காமம் சார்ந்த விஷயங்களையே அவர்கள் எழுதி வருவதாக எனக்குப் படுகிறது. அதிலும் குறிப்பாக, தன்னை விட மூத்த பெண் மீது ஒருவன் கொள்ளும் காதல். அப்புறம் இன்னொரு விஷயம், சுய மைதுனம். அதை விடுத்து உடல் சார்ந்து பேச பல விஷயங்கள் இருந்தாலும் நாம் பக்கம் பக்கமாக சுயமைதுனம் செய்து கொண்டிருக்கிறோம். இது சரிதானா? மௌனியில் ஆரம்பித்து தி.ஜாவில் தொடர்ந்து இன்றுவரைக்கும் திரும்ப திரும்ப இது எழுதித் தீராத விஷயமாக இருக்கிறது.. ஏன்? நாம் சார்ந்து இருக்கக் கூடிய சமுதாயத்தில் நமக்கு எவ்விதமான சிக்கலும் இல்லையா? ஏன் அவற்றை எல்லாம் இளம் படைப்பாளிகள் எழுத முன்வருவதில்லை..?”

கே.என்.செந்தில் - "நீங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. காலம் காலமாக பெண்ணின் மீதான காமம் மட்டுமே பதியப்பட்டு வருவதாக நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லை. புதுமைப்பித்தனின் எழுத்திலோ இல்லை மௌனியின் எழுத்திலோ நீங்கள் சொல்லும் மூத்த பெண் மீதான காமம் என்பது எதுவும் கிடையாது. தி.ஜாவும் அதன் தொடர்ச்சியாக வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரின் எழுத்தில் இது போன்ற விஷயங்களைக் காணலாம். என்றாலும், இன்றைக்கு இருக்கக் கூடியவர்களுக்கு தங்களுடைய மிக முக்கியமான பிரச்சினையாக அவர்களுடைய உடல்தான் இருக்கிறது. தன் பிரதான பிரச்சினைகள் என நாம் நம்பக் கூடிய விஷயங்களையே ஒரு எழுத்தாளன் பதிவு செய்கிறான் எனும்போது காமம் சார்ந்து நிறைய பேச வேண்டியதாக இருக்கிறது.."

செந்தி - "இந்த தொகுப்பின் முன்னுரையில் இருக்கும் செந்திலின் சில வார்த்தைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முக்கியமானது என நான் எண்ணிய சில பாத்திரங்கள் ஒன்றுமில்லாமல் போக திடீரென உருவான சில பாத்திரங்கள் கதையின் மையமாகிப் போன விஷயங்கள் இங்கே நிகழ்ந்து இருக்கின்றன. கதையை நான் எழுதினேன் என்பதை விட கதை தன்னைத்தானே எழுதிக் கொண்டது என்பதுதான் மிகச் சரியாக இருக்கும். இது எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. அப்புறம் கதைகளைப் பற்றி, முதல் கதையில் வாரும் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப நெருடலாக இருக்கிறது. கீழ்த்தரமான பழக்கங்களால் அவனுடைய உடலும் மனமும் சிதைந்து போயிருந்தன. இதில் "கீழ்த்தரமான" என்ற வார்த்தையை எப்படிப் பயன்படுத்தலாம்? ஆசிரியர் அதை தீர்மானிப்பது சரிதானா? அதேபோல கதையின் நாயகனின் பின்புலம் லாட்டரி மீது மோகம் கொண்டவன் என்பதாக இருக்கிறது. இதையும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம். இரண்டாம் கதையான கிளைகளில் இருந்து கூட இதே போல வர்ணனைகளின் மீது மட்டுமே கவனம் கொள்வதாக எனக்குப் படுகிறது. தொகுப்பின் தலைப்புக் கதையான இரவுக்காட்சி எனக்கு ரொம்பப் பிடித்து இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சில நெருடல்கள் தவிர்த்து இது எனக்கு ரொம்பவும் பிடித்த தொகுப்பாக இருக்கிறது"

கே.என்.செந்தில் - "என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் எதையும் தீர்மானம் செய்வதில்லை. அது அந்த கதாபாத்திரம் உணரக் கூடிய உணர்வு மட்டுமே. பெண்கள், சுயமைதுனம் எனத் தன் உடம்பை அழித்துக் கொண்ட ஒருவன் தன்னைப் பற்றி தானே சொல்லும்போது இருக்கக் கூடிய குற்றவுணர்வை மட்டுமே அங்கே பார்க்க முடியும். மற்றபடி கதைக்குத் தேவையான வர்ணனைகள், சூழலை விளக்க கண்டிப்பாகத் தேவை என நான் நம்புகிறேன்."

பா.திருச்செந்தாழை - "இன்றைக்கு எழுதப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என இரண்டு விஷயங்களை மட்டுமே என்னால் சொல்ல முடியும். அது criminality மற்றும் sexuality. அதிலும் குறிப்பாக பாலுணர்வு சார்ந்து இயங்கும்போது ஒரு மனிதனுக்கு வரக்கூடிய அடிப்படை உணர்வுகளையும், குற்ற மனப்பான்மையும் பதிவு செய்வதுதான் முக்கியம் என நான் நம்புகிறேன். ஏன் என்றால் இவை தவிர்த்து எழுதப்படும் மற்ற விஷயங்கள் எல்லாமே காலாவதியாகி விட்டன. அன்பு, கருணை என்று அதை எல்லாம் மீண்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது என்பது வெறும் பாவனையாகவே இருக்கக் கூடும்.."

சமயவேல் - "எதை எழுதுவது என்பது பற்றிய இன்றைய படைப்பாளிகளுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சினை முன்னோடிகளின் சாதனைதான். சிறுகதைகளின் அத்தனை சாத்தியங்களையும் அவர்கள் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. எனவே இன்றைக்கு எழுதும்போது எந்த சூழலிலும் அவர்களுடைய சாயல் என்பது வந்து விடக் கூடாது என்பதில் இளம் தலைமுறையினர் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. அதேபோல செந்தாழை சொன்னது ஒரு முக்கியமான விஷயம். குற்றமும் பாலியலும் இன்றைக்கு பெரும்பாலான கவனத்தைப் பெற முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நம்மால் அத்தோடு நம்மைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது என்பதால்தான்... இதுதான் எழுத வேண்டும் என்று யாராலும் அருதியிட்டுச் சொல்ல முடியாது.."

கே.என்.செந்தில் - "இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டுமானால் மூத்த படைப்பாளிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதையே நான் தீர்வாக சொல்லுவேன். என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது தெரிந்தால் மட்டுமே நமக்கான இலக்கு எது என்பதை நாம் தீர்மானம் செய்ய முடியும்.."

ஹவி - "அகச்சிக்கல்கள் பற்றி இங்கே எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதால் இதை நான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அவனுடைய உடல் மட்டுமே சிக்கலான ஒன்றாக இருக்குமா என்றால் கண்டிப்பாகக் கிடையாது என்றே நான் சொல்லுவேன். நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன? அவற்றோடு இணைந்துதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது அவை எப்படி நம்மை பாதிக்காமல் இருக்க முடியும்? உலகமயமாக்கல், அது சார்ந்த பிரச்சினைகள் என்று நிறைய பேசுகிறோம். நிறைய இழந்து விட்டோம் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் பெருநகரத்தின் இன்னொரு முகத்தை நாம் ஏன் பதிவு செய்ய மறுக்கிறோம். சென்னையில் ஒரு மின்தொடர்வண்டியில் நானும் என் மனைவியும் போய்க் கொண்டிருந்தோம். திடீரென என் மனைவிக்கு அடக்க முடியாத இருமல். எதிரே அமர்ந்து இருந்த மனிதர் சட்டென தன் கையில் இருந்த மினரல் வாட்டர் பாட்டிலைக் கொடுத்து குடிக்கச் சொன்னார். திருப்பிக் கொடுத்தபோது கூட நான் இறங்கி விடுவேன் உங்களுக்கு உதவும் வைத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி இறங்கிப் போய் விட்டார். இப்படியான மனிதர்களும் நகரத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை நாம் ஏன் பேசாமல் புலம்ப மட்டுமே செய்கிறோம்? இப்போது தொகுப்பை முன்வைத்து, கே.ஏன்.செந்திலுடைய கதைகள் நேர்மையாக இருக்கின்றனவா? தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லிடும் முனைப்பு அவரிடம் இருக்கிறது. ஒரு ஏழு வயது பையனைப் பற்றிக் கதை சொல்லும்போது அங்கே அந்த சிறுவனுடைய மனநிலையில்தான் கதைஸ் சொல்ல வேண்டும். மாறாக எனக்கு அங்கே ஆசிரியரின் கொள்கைகளை எல்லாம் சிறுவனின் மீது அவர் இறக்கி வைப்பதாகப் படுகிறது. ஒருவனைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். அப்போது அவன் என்ன மாதிரி எல்லாம் சிந்திக்க முடியும்? போகும் வழியில் செந்தில் உண்டாகும் பிம்பங்களை எல்லாம் என்னால் துல்லியமாக கவனிக்க முடிவதில்லை.. எதற்காக இத்தனை சிதறல்கள்? கேன்வாஸ் பெரிதாக இருக்கிறது என்பதற்காக அத்தனை விஷயங்களையும் உள்ளே கொண்டு வந்து விடவேண்டும் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன்.."

கா.பா - நான் கே.என்.செந்திலுடைய மூன்று கதைகளை மட்டுமே வாசித்து இருக்கிறேன். கதவு எண், கிளைகளில் இருந்து, மேய்ப்பர்கள்.. இவற்றை முன்வைத்தே உரையாட விரும்புகிறேன். கதைகள் சொல்லும் கதைகள் உண்டு, அதே போல கதை சொல்லாத கதைகளும் உண்டு. இதில் கே.என்.செந்தில் இரண்டாம் வகையைச் சார்ந்து கதையல்லாத கதைகளைப் பேசுவதாகவே நான் நம்புகிறேன். கதை சொல்லி என்று சொல்லுவதை விட அவரை ஒரு தேர்ந்த சித்திரக்காரர் எனச் சொல்லலாம். சூழலையும் மனிதர்களையும் வர்ணித்துப் போகும் இடங்களில் அவர் அருமையான நேரனுபவத்தைத் தரக்கூடிய சித்திரங்களை உருவாக்குகிறார். முதல் கதையான கதவு எண்ணில் ஒரு மனிதன் மூத்திர சந்தின் உள்நுழைந்து போகிறான். இதை வாசிக்கும்போது நான் என்னமோ அந்தத் தெருவுக்குள் நடந்து போவதைப் போன்ற ஒரு அருவெருப்பையும் அசூயையும் என்னால் உணர முடிந்தது. அதுவே அந்த எழுத்துகளின் வெற்றி. ஹவி சொன்ன சில விஷயங்களில் எனக்குக் கருத்து வேறுபாடும் உண்டு. ஒரே கேன்வாசுக்குள் பல விஷயங்களை சொல்லித்தான் ஆக வேண்டுமா? கண்டிப்பாக... ஏன் என்றால் அங்கேதான் வாசகன் சிந்திப்பதற்கான ஒரு வெளி உண்டாகிறது. இதை நீங்கள் கிளைகளில் இருந்து கதையில் நன்கு உணரலாம். சில மனிதர்கள், அவர்களைப் பற்றிய சில தகவல்கள் என சொல்லிக் கொண்டே கதை வேறு இடங்களுக்கு நகர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? அதை வாசகர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறான் கதை சொல்லி. கடைசி கதையான மேய்ப்பர்கள் விளிம்பு நிலை மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை பேசிப் போகிறது. குற்றவுணர்வை ஏற்படுத்தாத காமம் இந்தக் கதையில் கொண்டாட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. ஆக எனக்கு செந்தில் கதையுலகம் ரொம்பவே பிடித்து இருக்கிறது.

ஹவி: நண்பர் சொன்ன விஷயத்தை என்னால் சற்றும் ஒத்துக் கொள்ள முடியாது. கதை சொல்லாத கதைகள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வர்ணனைகள், சித்திரங்கள் எனப் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் நாம் எதற்காக சிறுகதைகள் எழுதுகிறோம்? ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்வதற்காக.. அதைச் செய்யவில்லை என்றால் மற்ற எல்லாம் வீணாகிப் போய் விடும். ஆக கதை என்கிற அடிநாதம் ரொம்ப முக்கியமானது. கண்டிப்பாக எழுத்தாளனுக்கு என ஒரு பொறுப்பு இருக்கிறது. அதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் நம்மை பாதிக்கிற சங்கடங்களையும் நாம் கண்டிப்பாக பதிவு செய்யும்போது அதற்கு நேர்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய கண்காணிக்கப்படும் சூழலிலும் இதை நாம் தீவிரமாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை விடுத்து வெறும் தகவகழி மட்டும் சொல்லிப் போவது சரி கிடையாது என்றே நம்புகிறேன்.

கே.என்.செந்தில் - பொதுவாக என்னுடைய கதைகள் ஒரு நேரடி அனுபவத்தைத் தருவதாக நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதையேதான் இந்த நண்பரும் சொன்னார். ஆனால் ஹவி சொன்னதுபோல நான் எந்த இடத்திலும் என்னுடைய கொள்கைகளை என் பாத்திரங்களின் மீது திணிக்க முயற்சிப்பதில்லை. அதைப் போலவே தான் தகவல்கள் அதிகம் என்பது பற்றிய குற்றச்சாட்டும். இது கதைக்குத் தேவை என நான் நம்புவதை மட்டுமே எழுதி வருகிறேன்.

இந்திரா - எனக்கு உங்களுடைய இரவுக்காட்சி கதை ரொம்பப் பிடித்து இருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் காமம் சார்ந்து எழுதும்போது சில நெருடல்கள் இருக்கின்றன. நண்பர் ஒருவர் சொன்னார் காமம் கொண்டாட்டமாக வெளிப்படுகிறது என்று. அவன் ஒரு கூலித் தொழிலாளி. மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள். இந்த மாதிரியான நேரத்தில் அவனால் எப்படி எந்த மனக்கிலேசமும் இல்லாமல் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது? மிருகங்கள் மட்டுமே அதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடும். இது எல்லாம் தவிர்த்து மொத்தமாக உங்களின் தொகுப்பு எனக்கு பிடித்து இருக்கிறது.

கே.என்.செந்தில் - நான் முன்னரே சொன்னதுபோல கதைக்குத் தேவையானதையே நான் எழுதுகிறேன். காமம் என்பதை வலிந்து எழுத முயற்சிப்பதில்லை. அந்தக் கதாப்பாத்திரம் அந்த சூழலில் அவ்வாறே நண்டந்து கொள்ளும் எனக் கதைதான் தீர்மானிக்கிறது.

கதைகளில் இன்று உரையாடல்களைத் (dialogue) தவிர்த்து வர்ணனைகளின் மூலமாகக் கதை சொல்வது என்பது அதிகரித்து வருகிறது. இது சரிதானா என்ற கேள்வி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கதை சொல்லும் உத்தி என்னவாக இருந்தாலும் கதையை முன்னகர்த்தி செல்லவும் அடர்த்தியைக் கூட்டவும் உதவுமெனின் கண்டிப்பாக வர்ணனைகள் தேவையே என்பதை எல்லா படைப்பாளிகம் ஆமோதித்தனர். இதன் பின்பான உரையாடல் மற்றொரு கேள்வியை முன்வைத்து ஆரம்பித்தது.

பா.திருச்செந்தாழை - எல்லாரும் எழுதிய உலகத்தையே நாம் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறோம். இதை விடுத்து நாம் ஏன் இன்னொரு தளத்துக்கு நகரக் கூடாது? நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களின் மேல் நாம் ஏன் கவனம் கொள்வதில்லை? அவையும் நம் வாழ்வில் முக்கியப் பங்கு ஆற்றத்தானே செய்கின்றன? எளிதாகச் சொல்ல வேண்டுமானால், நமக்குப் பிடித்தமான ஒரு சட்டையைப் போட்டுக் கொள்ளும்போது அன்றைய நாள் முழுதும் சந்தோஷமாக உணருகிறோம். இது போல நிறைய.. ஆக பொருட்கள் நமக்கு ஏதோ ஒரு வகையில் சில உணர்வுகளை உண்டாக்கிப் போகின்றன அல்லவா.. ஏன் அவற்றைப் பற்றி நாம் பேசக் கூடாது?

கே.என.செந்தில் - பொருட்களை முன்னிறுத்தி கதைகள் எழுதுவதில் தவறில்லை. ஆனால் அவை உயிரற்றவை. அவை மனிதனால் பயனபடுத்தபடுகின்றன. ஆக சார்புநிலை என்று வரும்போது அங்கும் நாம் மனிதர்களைப் பற்றித்தான் பேச வேண்டி இருக்கிறது.

பா.திருச்செந்தாழை - நான் சொல்ல வருவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக்க முயலுகிறேன். வண்ணநிலவனின் மிருகம் எனக்கு ரொம்பப் பிடித்த கதை. நிறைய திறப்புகள் (opening) கொண்ட கதை சூழல். ஒரு மனிதன் அடுக்களைக்குள் நுழையும்போது எங்கும் சாம்பல் மணம் வீசியது என்கிற ஒரு வரி வரும். திறந்து கிடக்கும் வீட்டுக்கள் இருந்த புகைப்படங்கள் எல்லாமே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன என்கிற ஒரு இடமும் உண்டு. இங்கே உயிரற்ற அந்தப் பொருட்கள் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய அதிர்வுகளை நாம் கவனிக்க வேண்டும். அப்புறம் இன்னொரு கதை.. சமீபமாக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. ஆணி என்று நினைக்கிறேன். ஒரு சுவரில் இருக்கும் ஆணையைப் பற்றிய அவருடைய சிந்தனைகள். அவ்வளவேதான். இந்தக் கதையை எழுதும்போது, தன்னுடைய பொது எழுத்துலகை விட்டு வெளியேறி, வேறொரு தளத்தில் இயங்குவதன் மூலம் அவர் மிகுந்த ஆசுவாசத்தை உணர்ந்திருக்கக் கூடும் என நம்புகிறேன். எனவேதான் பொருட்களின் மீது இயங்கக் கூடிய இன்னொரு வெளியைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது என கேட்கிறேன்.

கே.என்.செந்தில் - நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் முப்பது வருடங்களுக்கு முன்பு வண்ணநிலவன் இந்தக் கதையை எழுதும்போது இந்த விஷயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டிருப்பாரா என்றால் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். எழுதும் விஷயங்கள் பிற்காலத்தில் வாசகர்களாலேயே இன்னதென்று தீர்மானிக்கபடுகிறது. எனவே பொருட்கள் சார்ந்து எழுதுவதென்பது திட்டம் போட்டு செய்ய முடியாததாகவே இருக்கும். கதைக்குத் தேவையெனில் நாம் அந்த உத்தியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கா.பா- பொருட்கள் சார்ந்த கதை எனச் சொல்லும்போது எனக்கு ஜி.முருகனின் காண்டாமிருகம் ஞாபகத்துக்கு வருகிறது. அது ஒரு உண்டியல். திடீர் தித்தர் என காணாமல் போய் மீண்டும் கிடைக்கிறது. கிட்டத்தட்ட வாசகனோடு ஒரு விளையாட்டாக இந்தக் கதையை அவர் எழுதி இருக்கிறார். உயிரற்ற அந்த பொருள் மொத்தக் கதையயும் தாங்கிப் பிடிக்கிறது என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஆகவே கதையின் தேவை குறித்தே பொருட்களின் மீதான கவனம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அதன் பிறகும் அங்கங்கே அலைந்து திரிந்து இறுதியாக உரையாடல் முடிவுக்கு வந்தது. ஆக மொத்தத்தில் அருமையானதொரு நிகழ்வு. பா.திருச்செந்தாழை ஒருவர் மட்டுமே செந்திலின் கதையுலகம் பற்றிய கட்டுரை எழுதி வந்து வாசித்தார் என்பது ஒரு சிறு குறை. இன்னும் மூன்று நான்கு கட்டுரைகளாவது வாசிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதையே கே.என்.செந்திலும் தன் நன்றியுரையில் குறிப்பிட்டார். அதே போல நிறைய விஷயங்கள் பொதுவாக பேசப்பட்டன. அப்படி இல்லாது படைப்பாளியின் படைப்புலகை முன்னிறுத்தி பேசுவது இன்னும் இந்த சந்திப்புகள் காத்திரமாக அமைய உதவக்கூடும். நிகழ்வை சாத்தியமாக்கிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.

நன்றி: கார்த்திகை பாண்டியன், திருச்செந்தாழை, ஸ்ரீசங்கர்.