Tuesday, April 28, 2026

அழிவற்றது கவிதை


அழிவற்றது கவிதை

 

என்னால நடக்கத் தான் முடியும். ஓட முடியாது’ மிகக் குறைவாக எழுதுவது பற்றி ஒருமுறை கேலியாக மோகனரங்கனிடம் கேட்ட போது இப்படி சொன்னார். சரி தானென ஒப்புக் கொண்டால் இப்போது அடுத்த பிரச்சினை முளைக்கிறது. நடப்பதற்கு உடம்பைத் தூக்க வேண்டுமே...! கால்களை முன்னெடுத்து வேறு வைக்க வேண்டும்..! எங்கே கிளம்பி எதை அடையவிருக்கிறோம் என்கிற இலக்கு தோராயமாகவேனும் மனதில் இருந்தால் நல்லது. ஏன் எதையேனும் அடைய வேண்டும்? சும்மா அப்படியே காலாற எட்டிப் போடக் கூடாதா என்ன..! இவ்வளவு யோசனைகளுக்குப் பின்னும் நடப்பதற்கு பதிலாக மனதிற்குள்ளேயே அவ்விடத்தைச் சென்று சேர்ந்தாலென்ன? என நினைப்பவர்கள் சிலர் இருக்கக் கூடுமல்லவா..! அவர்களில் ஒருவர் மோகனரங்கன். இதை ’இயல்பான சோம்பல்..’ எனத் தன் நூல்களின் முன்னுரைகளில் வெவ்வேறு விதங்களில் சொல்லிக் கொண்டாலுமே கூட ஈராயிரமாண்டு மரபு கொண்ட மொழியில் புழங்கிக் கொண்டிருக்கிறோம் எனும் போதமும் தன் பங்கு அதில் எத்தனை சிறியது எனும் மன அமைப்புமே முதன்மைக் காரணம் என்று தோன்றுகிறது. மற்றொன்று கூட உண்டு. தன் சொல்லின் மீதுள்ள பொறுப்புணர்வு. எதையேனும் மனம்போன போக்கிலோ கடனைக்கட்டும் விதமாகவோ செயல்பட்டு விடக்கூடாதெனும் ஒருவிதமான பிடிவாதம் தான் இவர் தன் குதிரையை மெதுவாகச் செலுத்த காரணமாக இருக்க வேண்டும்.  பிறகு அவருடனும் அவருக்குப் பின்னரும்  தொடங்கியவர்களில் வெகுவேகமாக ஓடியவர்களுள் எத்தனை பேர் இன்று தென்படுகிறார்கள் எனக் கண்டால் இந்த நிதானத்தின் பின்புலம் புரியலாம். இவ்வளவு ஆண்டுகளில் கைபோனபோக்கில் ஊதாரித்தனமாகவோ அநாகரீகமாகவோ  மோகன் எதையுமே எழுதவில்லை என்பதை காணும் மேலே கூறியதன் தாத்பரியம் எளிதாக விளங்கும்.  ஆனால் இன்னும் கொஞ்சம் தன்னை தளர்த்திக் கொண்டு, சிறுவயதிலிருந்தே பெரிய மனிதனாக வலம் வந்ததற்கு மாறாக சிறிய சேஷ்டைகளேனும் புரிந்திருக்கலாமோ என்கிற ஆதங்கம் அவ்வப்போது எழுவதுண்டு. அவரது ‘அன்பின் ஐந்திணை’ எனும் நூல் சுய அனுபவக்கதைகள் என்ற போதும் அவற்றைப் புனைகதையாக விஸ்தரித்து எழுதத் தவறியதற்கு சோம்பலுக்கு குறிப்பிட்டத்தக்க பங்கு இருக்குமென்றாலும்  மேற்சொன்ன லட்சணங்களும் வினையாற்றியிருக்குமோ என்கிற ஐயம் எனக்குண்டு. 

 



கவிதையின் தீராக் காதலர்களென வெகுசிலரையே இவ்விலக்கிய உலகில் காண முடிகிறது. வெவ்வேறு வடிவங்களுக்குள் அலைந்து திரிந்தாலும் சொந்த வீட்டில் இருப்பது போன்ற பாதுகாப்புணர்வையும் மலர்ச்சியையும் இவர்கள் கவிதைக்குத் திரும்பும் போது மட்டுமே அடைகிறார்கள். அவர்களுள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர் மோகனரங்கன். மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர் போன்ற கூடுகளுக்கு அவ்வப்போது பாய்ந்தாலும் இலக்கியத்தில் மோகனின் சொந்த உடல் கவிதையாகவே இருந்து வந்திருக்கிறது. பருவமெய்தியதும் அதற்குரிய வேதியியல் மாற்றங்கள் உடலில் நிகழும் போது அக்கூறுகளில் ஒன்றாக கவியாக மலர்வதும் இருக்குமோ எனச் சந்தேக்கிற அளவுக்கு காணும் இடங்கள்தோறும் முளைத்து நிற்கும் கவிகளும் அவர்தம் கவிதைகளும் நிறைந்திருக்கும் சூழலில் கவிதையைத் தன் பிரதானமான ஊடகமாக கொள்வதற்கு ஒருவருக்கு அதன் மீது ஆழமான பிணைப்பும் தீராத மோகமும் இருக்க வேண்டும். ஏனெனில் விமர்சக அவதாரம் தரிக்கும் போதும் கவிதையின் வக்கீலாக நின்று கொண்டு பிற வடிவங்களை விட கவிதை எவ்வகையில் உயர்ந்தது அது எவ்வாறு காலதீதத்தில் நிலைபெற்று விளங்குகிறது என்பதை உரிய உதாரணங்களைச் சுட்டி எழுதியிருக்கிறார் மோகன். நவீன இலக்கிய விமர்சன உலகிற்கு முக்கியமான வரவாக விளங்கிய முந்தைய நூலான ‘சொல் பொருள் மெளன’த்தில் தொழிற்பட்ட இவ்வம்சங்களை அந்நூலுக்குப் பின் வெளிவந்திருக்கும் ‘மைபொதி விளக்கு’ நூலிலும் ஏகதேசமாகக்  காண்கிறோம். இத்தொகுதியில் ஒப்புநோக்க பிற இலக்கிய வடிவங்களை விட கவிதைகள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள், மதிப்புரைகள், விமர்சனங்களே மிகுதியாக இருக்கின்றன. இவற்றில் கவிதை ஏன் அழிவற்றது , காலத்தின் முன் எப்போதும் அது ஏன் புத்தம் புதியதாகவே உள்ளது என்பதை தன் தனித்துவ உரைநடையால் வாய்ப்பு ஏற்படுந்தோறும் தொட்டுக் காட்டுகிறார் மோகன்.  

 

இளமையில் மிக விரும்பிய நூல்களை, பருவங்கள் முதிர்ந்தப் பின் மீண்டும் கையிலெடுத்தால் குறைந்த பக்கங்களுக்குள்ளாகவே ஏமாற்றமடைவதை பலரும் உணர்ந்திருக்கலாம். ஏன் அவை அந்தளவுக்கு அன்று ஆட்கொண்டன எனும் வியப்பை அளிக்கும்படி சாதாரணமானதாக மாறி விட்டிருக்கும். இதற்கு முற்றிலும் மாறாக செவ்வியல் படைப்புகள் வெவ்வேறு காலகட்டங்களில் வாசிக்குதோறும் புதிய அர்த்தங்களுடனும் ஆழமான வினாக்களுடனும் எழுந்து வரும்(இதாலோ கால்வினோவின் ‘ஏன் கிளாஸிக்குகளை வாசிக்க வேண்டும்’ எனும் அபாரமான கட்டுரை நினைவுக்கு வருகிறது). வயது கூடக் கூட மனதின் கண்பட்டைகள்  ஒவ்வொன்றாக விலகுகின்றன போலும். இவ்விடத்தை வாசகர் அடைய வாழ்க்கை அளிக்கும் ’பரிசு’களும் ஒருவகையில் காரணம் தான். ஏனெனில் அதற்கு முன்னரும்  அவை அங்கு தான் இருந்தன.  நவீன இலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவரான தி.ஜானகிராமனை போல இக்கூற்றுக்குப் பொருந்துபவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.  அதனால் தான் இளமையில் பாபு- யமுனா இருவரது (உலகினர் மொழியின் சொன்னால் பொருந்தாக் காதல்) உலகின் மீதே மையமிட்டு மகிழ்ச்சியுடன் பறந்து திரியும் ஒருவர், பிந்தைய காலத்தில் குரு ரங்கண்ணாவும் தந்தை வைத்தியும் ஏன் நண்பன் ராஜமும் கூட நாவலுக்குள் எத்தகைய பங்கை வகிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல பாபு முழுமையடைந்தவனாக மலர ஒவ்வொருவரும் அவனுக்கு நீராக இருந்ததைக் கண்டு உளம் பூரிப்பவராக மாறுவதைக் காணலாம். ஆம். யமுனா தான் அவனது ஆணிவேர் சல்லி வேர் அனைத்தும். ஆனால் தாவரம் செழித்து மரமாக வளர பச்சையமும் காற்றும் ஏன் சிறு பூச்சிகளும் கூட தேவையாக இருக்கின்றனவே. அப்படி துணைப்பாத்திரங்கள், ஒருவரியில் தோன்றிமறையும் பாத்திரம் கூட(சென்னையில் அறையில் தங்கியிருக்கும் போது தெருவில் பட்டாணியைக் கூவி விற்றுச் செல்லும் வியாபாரியின் கார்வையான குரலைக் கேட்டு மனதை இழக்கிறான் பாபு. அவன் இசை கற்க வடக்கே பயணம் செய்ய ஏதோ விதத்தில் சிறு சதவீதமேனும் அவரும் காரணமாக இருந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?) சும்மா வந்து செல்லவில்லை. இவ்வளவு அர்த்த அடுக்குகளைக் கொண்ட செவ்வியல் ஆக்கமான ‘மோகமுள்’ளை மதிப்பிட்டு மோகனரங்கன் எழுதியிருக்கும் கட்டுரையை அந்நாவலுக்கு இதுவரை அளிக்கபட்ட சிறந்த வாசிப்புகளுள் ஒன்றென தயக்கமின்றிக் கூறலாம். நாவலில் சாதாரணமாக  கடந்து சென்ற இடங்களிளெல்லாம் மோகன் நின்று ஒளிபொருத்திக் காண்பிக்கையில் ஏன் இந்த இணைப்புகளையும் இவ்வாறான பொருளையும் (Meaning) காணத்தவறினோம் எனத் தோன்றிவிடுகிறது. அதற்காக ஒரு படைப்பிற்குள் இல்லாத ஒன்றை தானாக கற்பித்து புதிய பொருளில் விளக்கும் அசட்டுத்தனமேதும் இவரிடமில்லை. போலவே தன்னிடம் உள்ள வாசிப்பிற்கேற்ப ஒரு படைப்பை வளைக்கும் அந்த ஆக்கத்தை பரிதாபகரமான நிலைக்கு தள்ளும் தான்தோன்றித்தனத்தையும் எங்குமே காணமுடிவதில்லை.


பல்கலைக்கழக மாணவர்களுக்கு கையேடு போல விளங்குகிற கவிதை பற்றிய கட்டுரைகளில் நவீன வாசகனுக்கும் பெற்றுக் கொள்ள தானியங்கள் இருக்கின்றன. கவிதையின் ஆதார அழகியல், அது எவ்வாறு கவிதையாக மலர்கிறது, அதை அடைவதற்கான வழிகள் போன்றவற்றை தன் பிரத்யேக ரசனையின் மூலம் தேர்ந்த கவிதையின் முகத்தைத் துல்லியமாக அல்ல தோராயமாக வரைந்துக் காட்டும் கட்டுரைகள் அவை. ஏனெனில் துல்லியம் எப்போதும் ஒருபடித்தானது. அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை உரைப்பது. ஆனால் கவிதை அப்படியல்லவே..! காலந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் சொற்களால் அள்ளியெடுத்து காட்டிய பின்னரும் இன்னும் கூற பாக்கியாக ஏதோவொன்று குறைகிறதேவெனும் போதாமையை உணரச்செய்வது. அதனால் தான்   அன்றலர்ந்த மலர் போல புன்னகையுடன் கவிதை எப்போதுமே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது போலும். மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதையாக உருமாறி நவீனமாக விகசித்த கவிதையின் வரலாற்றை (மோகனின் உரைநடை மரபும் நவீனமும் கலந்தது. இவரது கவிமொழிக்கும் இது பொருந்தும்) கூறும் கட்டுரையை, பிறர் எழுதிய, இதையே பேசுபொருளாகக் கொண்ட கட்டுரைகளுடன் பத்தோடு பதினொன்றாக வைக்க முடியாததற்கு காரணியாக மோகனின் செழுமையான மொழிப்பயன்பாட்டையும்,  அவர் வந்தமரும் முடிவுக்கு முன்வைக்கும்  ரசனைரீதியிலான மதிப்பீட்டையுமே காரணமாகக் கூறலாம்.

 

சொற்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து எழுதும் ஆனந்தின் கவிதையிலிருந்து கட்டற்ற பாய்ச்சலாக வெளிப்படும் ப்ரான்சிஸ் க்ருபாவின் பித்தேறிய கவிமொழி வரைக்கும் இந்நூலில் மதிப்பிடும் மோகன் ஒவ்வொருவரும் எங்கிருந்து தொடங்குகிறார்கள் அவர்களை அணுகும் பாதைகளை சமைப்பது எப்படி எனத் தன் ஆலாபனைகளின் வாயிலாக வாசகரை தயார்படுத்துகிறார். இவரது மன அலைவரிசைக்கு நெருக்கமானது தேவதேவனின் கவிதைகளாவே இருக்கலாம். சிறிய பெட்டியில்  நான்கைந்து துண்டுச் சீட்டுகளைப் போட்டு இவர்களது உலகம் இவ்வளவே எனக் காட்டும் சிறுமைகள் ஏதும் மோகனிடம் கிடையாது. உதாரணமாக ஆனந்த் என்றால் காலம்-வெளி, தேவதேவன் எனில் இயற்கையின் ஏகாந்தங்கள் என குறுக்கும் பார்வை இவரிடம் இல்லை. மேற்சொன்னவை அக்கவிஞர்களின்  முக்கியமான பண்பு என்றாலும் அது எவ்வாறு கவிதையில் தொழிற்படுகிறது எனக் காட்டுவதாலேயே பிறரிடமிருந்து விலகி நிற்கின்றன மோகனின் விமர்சனங்கள். சங்கக் கவிதைகளின் மீது பற்றும் மதிப்பும் கொண்டவர் மோகன் என்பதற்கு அவரது கவிதைகளும் கவிதைகள் பற்றிய விமர்சனங்களுமே சான்றாக திகழ்கின்றன. அதற்கு இந்நூலும் விதிவிலக்கல்ல.

 

வேறு எங்கும் காணக்கிடைக்காத ஆபிதீன் கதைகளைப் பற்றிய நுட்பமான பார்வையை இந்நூலில் காணலாம். நவீன புனைகதைகளில் அரிதான நகையுணர்வை பொதிந்து வைத்திருக்கும் ஆபிதீன் சீராக எழுதாமல் போனது துரதிஷ்டம் தான். பலகீனமான கதைகள் அவரிடம் உண்டு என்ற போதும் எழுத்தில் அவரை விட தரங்குறைந்தவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் கூட அவரை நெருங்கவில்லை. கவி. சுகுமாரனின் அபுனைவுகளை மதிப்பிட்டு எழுதும் மோகனின் மனம் சென்று தோய்வது சுகுமாரனின் அடக்கத்திலும் கூறும் விஷயங்களை முன் வைக்கும் முறையிலும் உரத்து பேசாத தன்னுணர்விலுமே என்று தோன்றுகிறது. ஒரு வாசகன் அடையும் வளர்சிதை மாற்றங்கள் ஒரு படைப்பாளியை அணுகும் விதத்தைல் எத்தகைய படிநிலைகளை உருவாக்குகிறது என்பதற்கு உதாரணமாக நாஞ்சில் நாடனின் கதையுலகுக்கு எழுதிய முன்னுரையில் காணலாம். இரு ஈழக் கவிஞர்களின் தொகுப்புக்கும் சுந்தர ராமசாமியின் கவிதைகளைப் பற்றியும் எழுதிய முன்னுரைகளும் மதிப்புரைகளும் இவ்விமர்சன நூலில் உள்ளன என்பதற்கு மேல் அது பற்றி கூற ஏதுமில்லை. 

 



கவிதையின் தீராத ஆராதகர் மோகன் என்பதாலும் மொழியின் உச்சபட்ச சாத்தியம் கவிதையே என்பதாலும் பிற இலக்கிய வடிவங்களை சில மாற்றுகள் குறைத்தே மதிப்பிடுகிறார். ஆனால் அதற்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் சில இடங்களில் ஏற்கத்தக்கவையாகவும் பிற இடங்களில் விவாதிக்கத் தூண்டுவதாகவுமே அமைந்துள்ளன. புனைவிலக்கியக்கியங்கள் பத்தாண்டுகளுக்குப் பின் ஒளியை இழந்து ஆவணமாக மாறும் என்றும் உரைநடைப் படைப்பை எவ்வளவு தடவை மீள வாசித்தாலும் முதல் முறையின் பரவசத்தை அடைய முடிவதில்லை (’கவிதையும் கவிதை இயலும்’) எனவும்  சொல்கிறார் மோகன். ஆனால் ’மோகமுள்’ நாவலை ஒவ்வொரு முறை வாசிக்குந்தோறும் புதிய அர்த்த அடுக்குகளை கொண்டிருப்பதாகவும் கவனிக்காத புள்ளிகளை கண்டுகொள்ளும் போது பரவசம் அளிப்பதாகவும் அவரே எழுதுகிறார். இந்த முரண்பாட்டை சிரிப்புடன் கடந்து சென்றேன். கவிதையே மொழியின் சாதனை. அதற்காக உரைநடையை இப்படி பொத்தென்று கீழே போட்டு உடைக்க வேண்டியதில்லை.

 

மோகனரங்கனின் சுபாவத்துக்கு எதையுமே கறாராக கூறுவது ஒத்து வருவதில்லை போலிருக்கிறது. இதற்கு விதிவிலக்காக மனுஷ்யபுத்திரனின் ‘மணலின் கதை’ தொகுப்புக்கு எழுதிய மதிப்புரையைக் கூறலாம். இம்மதிப்புரையை வாசிப்பவர்கள்  மோகனின்  கவிதைப் பார்வையை ஏகதேசமாகப் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். இவ்வளவுக்குப் பிறகும் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்கிற எந்த கட்டாயமும் மோகனுக்கு இல்லை. மனதில் பட்டதை நாசூக்காகவேனும்  சொல்ல மோகனரங்கன் முயலலாம்.  ஒரு நூலுக்குச் சிறந்த வாசிப்பை அளிப்பதும் மேலுமொரு சிறந்த வாசிப்புக்கு வழிசெய்து தருவதுமே விமர்சகரின் பணி என்றாலும் ’சொத்தையை சொத்தை’ என்று சொல்வதும் கண்முன் நிகழும் தவறை தவறென்று காட்டுவதும் அதே விமர்சகரின் பணி தான். இன்றைய சூழலில் ஒப்புநோக்கப் பிந்தையதே  அவசியமானதும் தேவையானதுமாகும்.

 

பி.ச. குப்புசாமி விருது பெறும் மோகனரங்கனுக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள்.


மைபொதி விளக்கு – க. மோகனரங்கன் – தமிழினி பதிப்பகம் – முதல் பதிப்பு – 2012. விலை. ரூ. 120.00 

குறிப்பு : இக்கட்டுரை மோகனரங்கன் விருது பெற்றதையொட்டி பி.கே.சிவகுமார் ஒருங்கிணைத்துத் தயாரித்த நூலுக்காக எழுதப்பட்டதாகும். 

Thursday, December 25, 2025

சிறிய மகிழ்ச்சிகளும் பெரிய துயரங்களும்

சிறிய மகிழ்ச்சிகளும் பெரிய துயரங்களும்

கே.என்.செந்தில் கதையுலகம்

 குணா கந்தசாமி

  

செந்திலின் கதைகளைக் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்கிறேன். “இரவுக் காட்சிதொகுப்புக்கு ஒரு சிறிய விமர்சனக் குறிப்பு எழுதினேன். இரண்டாவது தொகுப்பானஅரூப நெருப்புகுறித்து சென்னையில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் பேசியதுடன்நெருப்பில் உருப்பெறும் இருட்சித்திரங்கள்என்னும் தலைப்பில் காலச்சுவடு இதழில் கட்டுரையாகவும் எழுதினேன். பிறகு ஐந்து நெடுங்கதைகளைக் கொண்டஅகாலம்தொகுப்புக்கு பின்னட்டைக் குறிப்பு எழுதப் பணித்தார். இப்போது இதுவரையான கதைகளைத் தொகுக்கும்போது பின்னுரை எழுதக் கூறினார். இப்படியாக செந்திலின் கதையுலகத்தோடு தொடர்ச்சியான உரையாடலில் இருப்பதற்கான வாய்ப்புகள் இயல்பாகவே அமைந்து விடுகின்றன.

 

செந்திலின் சிறுகதைளைத் தொடக்கத்தில் காலச்சுவடு இதழில் வாசித்தபோது யாரோ ஒரு நடுத்தர வயதுடைய எழுத்தாளர் என்று நினைத்தேன். எழுத்திலிருந்த முதிர்ச்சி அப்படி நினைக்க வைத்தது.  பிறிதொரு சூழலில் தான் படித்த கல்லூரியின் பெயரையும் ஆண்டுகளையும் எங்கோ குறிப்பிட்டிருந்தார். இனிய ஒற்றுமையாக அதே கல்லூரியில் அதே ஆண்டுகளில் நானும் படித்திருந்தேன். செந்தில் இளங்கலை வணிக மேலாண்மை, நான் கணினி அறிவியல். முதலாமாண்டில் எங்களுக்கு மொழிப்பாடங்களுக்கான வகுப்புகள் இணைந்து நடக்கும்போது ஏதேச்சையாக முகம் பார்த்துக்கொள்ளுமளவுக்குத்தான் அறிமுகம். அவருடைய நெருக்கமான வகுப்பு நண்பர் கல்லூரி விடுதியில் எனக்குப் பிரியமான அறை நண்பராக இருந்தது மட்டுமே மேலதிகத் தொடர்பு. பிறகு இலக்கியச் சூழலில் அறிமுகமான பின்னர் இந்த முன்கதை இனிய சுவாரசியமாக இருக்கிறது.

 

இதுவரையான செந்திலின் கதைகளைப் பார்க்கும்போது அவற்றினுள் ஒரு பிரத்யேகக் கதையுலகம் தனித்த கூறுகளுடன் தோன்றி வளர்ந்து முதிர்ந்திருக்கிறது. தமிழக நிலப்பரப்பின் எந்தவொரு சிறுநகரத்தையும் இக்கதைகளின் களமாகக் கொள்ளலாம். இக்கதைகளுக்குள் நடுத்தரவர்க்க மற்றும் விளிம்புநிலையில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கைக் காட்சிகள் இருக்கின்றன. சிறிய மகிழ்ச்சிகளையும் பெரிய துயரங்களையும் கொண்ட குடும்பங்களில் சுயநலத்தின் பொருட்டான சதுரங்க ஆட்டங்களும் உணர்வுரீதியான வன்முறையும் நிகழ்கின்றன. மகிழ்ச்சியற்ற பால்யங்களைக் கொண்ட சிறுவர்களும் வருந்திப் பாரம் சுமக்கும் பெண்களும் கைவிடப்பட்ட உதிரி மனிதர்களும் நிறைந்த இக்கதைகள் ஒரு நோக்கில் சமூகத்தின் இருண்ட ஆன்மாவைச் சித்தரிக்கின்றன.

 


இரவுக் காட்சி 2009-ஆம் ஆண்டு வெளியாகிறது. ஒரு ஆரம்பகால எழுத்தாளருக்கு வழக்கமாக இருக்கும் கதைகூறுதல் சார்ந்த தடுமாற்றங்கள் இல்லாமல் முதல் கதையிலிருந்தே கூறுமுறையில் தேர்ச்சி வெளிப்பட்டிருக்கிறது. சம்பவங்களைச் சீர்மையோடு அடுக்கிக் காட்சிப்பூர்வமாகச் சொல்லப்பட்ட அந்தக் கதைகள் தம்மளவிலான முதிர்ச்சியைக் கொண்டிருக்கிற அதே தருணத்தில் பிற்காலக் கதைகளோடு ஒப்பிடுகையில் எளிமையானவையாகத் தோற்றமளித்து எழுத்தாளர் அடையும் வளர்சிதை மாற்றங்களுக்குச் சாட்சியமாவது இயல்பானதே.

 

ஆண் கதாபாத்திரங்களுக்கு அவர்களுடைய இருப்பிடத்துக்கு வெளியே நேரிடும் மகிழ்ச்சியற்ற வாழ்வியல் அனுபவங்களை கதவு எண் 13/78, மீட்சி, இரவுக்காட்சி போன்ற கதைகள் பேசுகின்றன. அந்த ஆண்களுக்கு துயரமிகு பின்கதைகளும் இருக்கின்றன. தெரு, சாலை, சந்தை, உச்சிப்பொழுது, அதிகாலை, இரவு என்று வெளியும் பொழுதும் கதைகளுக்குள் முக்கியமான அலகுகளாகின்றன. சமூகப் படிநிலையில் கீழடுக்கைச் சார்ந்தவர்களாகவும், தணிப்பதற்கு வழியற்ற பாலியல் விழைவுகளை உடையவர்களாகவும் துர்மரணங்களைச் சந்திக்கிறவர்களாகவும் இந்த ஆண்கள் இருக்கிறார்கள்.  

 

செந்திலின் பிற்காலக் கதைகளில் திரும்பத் திரும்ப வரப்போகிறமகிழ்ச்சியற்ற பால்யத்தை உடைய சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி வேறெங்கோ தஞ்சமடைவதுஎன்ற மூலப் பண்பின் தடயங்கள்மீட்சி’, ‘வாக்குமூலம்போன்ற கதைகளில் இருக்கின்றன. சிறுவர்களுக்கு இடையிலான தோழமையுணர்வு மற்றும் போட்டியுணர்வைச் சித்தரிக்கும்கிளைகளிலிருந்துகதையில் சிறுவர்களின் கண்கள் வழியே பெரியவர்களின் உலகமும் காட்டப்பட்டிருக்கிறது.

 

இன்னும் குழந்தைப்பேறு வாய்க்காத பெண்ணொருத்தி தன் அகத்திலும் புறத்திலும் எதிர்கொள்ளும் போராட்டங்களைச் சித்தரிக்கும்மதில்கள்’, தந்தையின் சடலத்தைப் பாடையில் வைத்துக்கொண்டு சொத்துக்காக பிள்ளைகள் சண்டையிடுவதைச் சொல்லும்காத்திருத்தல்’, சம்பள நாளான சனிக்கிழமைகளில் குடித்துவிட்டு வந்து தன் மன அவசங்களை வெளிப்படுத்தும் தந்தையின் முன்னிரவுப் பொழுதையும் அதனை எதிர்கொள்ளும் குடும்பத்தின் உணர்வுகளையும் சித்தரிக்கும் ‘வருகை’, விளிம்புநிலை மக்கள் தமக்குள் கொண்டிருக்கும் பரஸ்பர ஆதரவையும் நெகிழ்வான பாலியல் உறவுகளையும் சொல்லும்மேய்ப்பர்கள்என்றுஇரவுக் காட்சி’ தொகுப்பில் பிற்பகுதிக் கதைகள் ஆழம் கூடியவையாக இருக்கின்றன.

 

‘இரவுக்காட்சி’ தொகுப்பில் சல்லிவேர்களாகத் தெரிந்த செந்திலுடைய கதையுலகம்அரூப நெருப்பு’ தொகுப்பில் ஆழமாக வேர்பிடித்தது. அதிக எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களோடும் விரிவான விவரணைகளோடும் நேர்கோடற்ற உத்தியில் கதை சொல்வது நிகழ்ந்தது. பிறகுஅகாலம்’ தொகுப்பில் நெடுங்கதைகளின் வழியாக கிளைகளும் கொப்புகளுமாக விரிவானது. இதுவரை அவர் எழுதியவற்றில் எனக்கு மிகப்பிடித்தமான கதைஅரூப நெருப்பு’. இந்தப் பின்னுரைக்காக கதைகளை மொத்தமாக மீள்வாசிப்புச் செய்த போதும் அது மாற்றமடையவில்லை. சகோதரிகள், அகாலம் போன்ற கதைகளையும் இந்த வரிசையில் வைக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவருக்கும் அவரவர் ரசனையின்படி மாறுபடக்கூடிய வரிசைதான்.

 

குடும்ப உறவுகளுக்குள் நிலவும் முரண்களைச் சித்தரிப்பதில் செந்தில் கைதேர்ந்தவர். வருகை, காத்திருத்தல், அரூப நெருப்பு, வாசனை, மாறாட்டம், நிலை, அகாலம், சகோதரிகள், இல்லாமல் போவது ஆகிய கதைகளைச் சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம். இக்கதைகளுக்குள் உறவுகளின் போராட்டங்கள் முடிவுறாமல் நடக்கின்றன. ஆணாகவோ பெண்ணாகவோ ஒரு வெளிமனிதர் குடும்பத்துக்குள் நுழையும்போது அந்தக் குடும்பம் அடையும் சமன்குலைவை செந்திலின் கதையுலகத்தில் இன்னொரு முக்கியமான மூலப்பண்பாகச் சொல்லலாம்.

 

குணா கந்தசாமி

தந்தைமை குறித்து பல கதைகளில் வலுவாக விசாரிக்கப்பட்டிருக்கிறது. குடிகாரர்கள், சமூக ஏற்பற்ற பாலியல் உறவுகளில் இருப்பவர்கள், பிள்ளைகள் வீட்டைவிட்டு ஓடுவதற்குக் காரணமாகிறவர்கள் என்று பலவிதமான தந்தைகள் கதைகளுக்குள் இருக்கிறார்கள். வருகை, காத்திருத்தல், அரூப நெருப்பு, அகாலம், சகோதரிகள், மகவு போன்ற கதைகளில் தந்தைகள் குடும்பத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகிறார்கள். மாறாக நிலை, தங்கச் சிலுவை, தொடுகை போன்ற கதைகளில் மென்மையான உணர்வுகளைக் காட்டும் தந்தைமை குறித்த நேர்மறைச் சித்திரம் இருக்கிறது. செந்திலின் கதைகளில் தந்தைமையை இன்னொரு கோணத்திலும் காண்கிறோம். திருமணம் இல்லாத ஆண்கள், குடும்பப் பெண்களுடன் சமூக ஏற்பற்ற காதல் அல்லது பாலியல் உறவில் இணையும்போது அப்பெண்களுடைய பிள்ளைகளை தம்முடையவாக வரித்துக்கொண்டு அன்பும் பித்தும் கொண்டிருப்பதை அகாலம், போக்கிடம், இல்லாமல் போவது போன்ற கதைகளில் காணலாம்.

 

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான விருப்பும் வெறுப்பும் கதைகளின் இன்னொரு முக்கிய இழையாக இருக்கின்றன. உறவின் அந்தரங்கமான தருணங்களில் குழந்தைகளாக இருக்கிறவர்கள் விரிசலும் வெறுப்பும் ஏற்படுகையில் மூர்க்கங்கொண்டு நிறம் மாறிவிடுகிறார்கள். அரூப நெருப்பில் கோவிந்தன்- விஜயா- நாகு, மாறாட்டம் கதையில் பரமு-புவனா-ராஜேஷ், அகாலம் கதையில் சதாசிவம்-கீதா-சந்திரன், வாசனை கதையில் தாஸ்-பச்சை, போக்கிடம் கதையில் சசி-வளர்மதி, இல்லாமல் போவது கதையில் ரத்தினம்-கெளசல்யா ஆகிய உறவுகளில் நிகழும் பரமபத விளையாட்டுக்கள் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மேற்சொன்ன பல உறவுக்கோணங்களில் துரோகமும் பழியுணர்ச்சியும் உறவின் தவிர்க்கமுடியாத மறைகுணங்களாக இருக்கின்றன. உறவுகள் மகிழ்ச்சியானவையாக முகிழ்த்து துயரமானவையாக முடிகின்றன.

 

பல கதைகளில் பால்யம் ஒரு பகுதியாக இருப்பதோடு கிளைகளிலிருந்து, வருகை, திரும்புதல், இரண்டாமிடம், அழைப்பு, வேண்டுதல் போன்ற கதைகளில் சிறுவர்களின் மனவுலகமும் அதன் வழியாக வளர்ந்தவர்களின் வாழ்க்கையும் பேசப்பட்டிருக்கிறது. வீட்டைவிட்டு ஓடிவந்து உணவகத்தில் வேலை செய்யும் இரு சிறுவர்களின் இளைப்பாறுதலான பொழுதிலிருந்து தொடங்குகிறதுதிரும்புதல்’ கதை. வாழ்க்கையின் குரூரத்தை எதிர்கொள்ளும் சிறுவர்கள் பிஞ்சிலே வெம்புவதையும் வயதுக்கு மீறிய அவர்களுடைய நடத்தைகளையும் சிறுவர்களின் மீதான மூத்தவர்களின் வன்முறையையும் சுரண்டலையும் சொல்லும் முக்கியமான கதையாகதிரும்புதல்’ இருக்கிறது. ஆனால் செந்திலின் புதிய கதைகளில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உலகத்தை மையமாகக் கொண்ட கதைகள் ஏனோ எனக்கு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

 

வீட்டிலிருந்து வெளியேறிய மகிழ்ச்சியற்ற பால்யங்களைக் கொண்ட சிறுவர்கள் பெரியவர்களாகும்போது ரவுடிகளிடமோ அரசியல்வாதிகளிடமோ தஞ்சமடைவதே இயல்பான புகலிடமாக இருக்கிறது. காமமும் வன்முறையும் இருட்டும் நிரம்பிய வாழ்க்கைகளை மீட்சி, வாக்குமூலம், வெஞ்சினம், போக்கிடம் போன்ற கதைகளில் கவனிக்கலாம். இது போன்ற இருட்டு உலகத்தில் இருக்கும் அதிகாரப் படிநிலைகள், சூதுவாதுகள், பழியுணர்ச்சி, ஏற்ற இறக்கங்கள் போன்றவை குறித்த விவரிப்புகள் சுவாரசியமாக இருக்கின்றன.

 

பெருந்தொற்றுக் காலத்தில் செந்தில் எழுதிய குறுங்கதைகள்விருந்துஎன்ற தலைப்பில் வெளியானது. அதற்குப் பிறகான சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. அகாலம் தொகுப்பு வரையான கதைகளோடு ஒப்பிடும்போது புதிய கதைகளில் வடிவமும் கூறுமுறையும் இளக்கமும் உடைவும் கண்டிருக்கின்றன. நேர்கோடற்ற தன்மையில்  நீண்ட விவரணைகளோடும் கதை சொல்லும் பாணி மாற்றமடைந்திருக்கிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்தியது அவருடைய குறுங்கதைகள் என்று யூகிக்கிறேன். வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பினும் கதைகளின் உள்ளடக்கம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவருடைய கதையுலகத்தின் நீட்சியாகத்தான் அமைந்திருக்கிறது.

 

முந்தைய கதைகள் உறவுகளின் நாடகீயத்தை நுண்விவரணைகளோடும் கால வியாபகத்தோடும் அணுகியவை. அவ்விதமான அணுகல் இளகி புதிய கதைகளில் ஒரு குறிப்பிட்ட மனவுணர்ச்சியின் கதியில் மனம் கொள்ளும் கோலங்களாகவும் கதைகள் பரிணமித்திருக்கின்றன. இந்தப் பிற்பகுதிக் கதைகளில் மகவு, அந்தி, ஊசல், தொடுகை, மோட்சம் ஆகிய ஐந்து கதைகள் எனக்குப் பிடித்தமானவை.

 


ஆண்பிள்ளை வேண்டும் என்பது பழமைவாதமான பார்வை என்றாலும் அவ்விதமான எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பிறகு தனக்கு மூன்றாவதாகப் பிறக்கப் போகிற மகவு ஆண் குழந்தையேதான் என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றிவிட்ட ஒரு தந்தையின் ஆசையும் நம்பிக்கையும் பொய்க்கும் போது நேரிடுகிற மனவீழச்சியைச் சொல்கிறதுமகவு’. மனிதர்கள் கோழைத்தனமாக நடந்துகொண்டாலும் வாழ்க்கை எதன்பொருட்டும் தேங்கிவிடுவதில்லை என்ற உண்மையையும் இக்கதை நிறுவுகிறது. தந்தையின் மனவோட்டங்களை விவரிக்கும் ஆரம்பப் பகுதிகளில் மென்னுணர்வுகளைச் சித்தரிப்பதில் தமிழ்ச் சிறுகதையில் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் செந்தில். அந்தி, ஊசல், தொடுகை, மோட்சம் ஆகிய கதைகளிலும் இந்தப் பாய்ச்சல் வெவ்வேறு விதமாக நிகழ்ந்திருக்கிறது.

 

செந்திலின் கதைகளில் வரும் குடிகாரர்கள் பலர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இருக்கிறார்கள். சம்பள நாளின் அந்திப்பொழுதில் குடித்துவிட்டு பாடல்களாலும் நடனத்தாலும் ஏகவசனங்களாலும் போக்குவரத்து மிகுந்த சாலையில் ரசமான காட்சிகளை அரங்கேற்றும் குடிமகனையும் அவனோடு போராடும் மனைவியையும் வாகனதாரிகளின் எண்ணப்போக்குகளையும் சித்தரிக்கும்அந்தி’ கதை புன்னகையோடான வாசிப்பைக் கொடுக்கிறது. மேலோட்டமானதாகப் பாவனை காட்டினாலும் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டதாக இக்கதை இருக்கிறது.

 

தன் அழகின் மீது பெருமிதமும் அதனை ரசிக்கும் ஆண்களின் மேல் மனச்சாய்வுவையும் உடையவளாய் இருக்கிறாள் பேத்தி எடுத்துவிட்ட பேரிளம் பெண்ணொருத்தி. அவளுடைய மனோரதியங்களையும் மோகம் கொள்ளும் இளைஞனுடன் அவளின் பரிபாஷை விளையாட்டையும் காட்டும்ஊசல்’ கதை இறுதியில் சட்டென்று நிறம் மாறி மனிதமனம் ஆழத்தில் மறைத்திருக்கும் ரகசிய சுயரூபங்களைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. ‘மோட்சம்’ கதையிலும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான பரிபாஷை மொழி நுட்பமாக வரைந்து காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், கையிலேந்தி சில கணங்களுக்கு உள்ளங்குளிர்ந்து அனுபவித்த அற்புதமொன்று கைநழுவி இழப்பதின் மன நடுக்கத்தை அளிக்கிறது மோட்சம் கதை.

 

‘தொடுகை’ கதையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான சின்ன மருதுவுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் கிடைக்கும் பெறுமதியான பரிசு அவரை வேறொரு மனிதராக மாற்றுகிறது. பார்வையற்றவராக இருந்தாலும் சின்ன மருது வாழ்க்கையின் மீது எப்போதும் அவநம்பிக்கை கொண்டவராக இருப்பதில்லை. ஒருவிதமான தீர்க்கத்தையும் இறுக்கத்தையும் உடையவராக இருந்தவர் தனக்கான பரிசைக் கையிலேந்தியவுடன் உயிர் குழைந்துவிடுவதன் காரணம் அந்தரங்கமானது. ‘தொடுகை’ கதையைமகவு’ கதையோடு இணைத்து வாசித்தால் நமக்கு புதிய அர்த்தங்கள் கிடைக்கும்.

 

மேற்சொன்னவற்றைத் தவிர புதிய கதைகளில் பந்தயம் மற்றும் சுடர் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. கூறுமுறையிலும் பார்வையிலும் புதிய மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் முந்தைய கதைகளின் சாயைகள் ஆங்காங்கே இருக்கின்றன. எழுத்தாளருக்கென்று பிரத்யேக கதையுலகம் உருவாகிவிட்டால் இது இயல்பாகவே நேருமென்றாலும் புதியன தேடுவதும் முக்கியமானது. குறுநாவலாகச் சொல்லத்தக்கஇல்லாமல் போவதுநெடுங்கதையில் ஒரு பகுதியின் மறுவடிவமாகபற்றுகதை தோன்றுகிறது. உறவிலோ தொழிலிலோ தோல்வியடையும் ஆண்கள் மீண்டெழுவதைவிட மரணத்தைச் சந்திப்பதும் செந்திலின் கதைகளில் திரும்பத் திரும்ப நிகழ்கிறது.

 

‘அகாலம்’ தொகுப்புக்குப் பிறகு எழுதப்பட்டவற்றில் முற்குறிப்பிட்ட ஏழைத் தவிர பிற புதிய கதைகள் வாசிக்கச் சுவாரசியமாக இருந்தாலும் அவற்றில் சிறுகதை கொண்டிருக்கவேண்டிய ஏதோவொன்று குறைகிறது என்று தோன்றுகிறது. இந்தப் பின்னுரைக்காக கதைகளை வாசித்தபோது ஏனையவற்றோடு ஒப்பிடுகையில் கதையுலகத்தோடு ஒட்டாதவையாகவும் ஏதோவொன்று குறைவதாகவும் தோன்றிய சில கதைகளை அவரிடம் சுட்டினேன். அவற்றுள் பெரும்பான்மையானவையை தொகுப்பிலிருந்து விலக்கிவிட்டார். தொகுப்பின் தரம் குறித்த அவருடைய சமரசமற்ற நோக்கிற்கு இது சான்றாக இருக்கிறது.

 

இருபதாண்டுகளாக எழுதிக்கொண்டிருந்தாலும் செந்தில் பெரும்பாலும் சிறுகதை வடிவத்திலேயே இயங்குகிறார். அவர் குறுங்கதைகளை எழுதியது வடிவம் மற்றும் உள்ளடக்க ரீதியாக புதிய பிரதேசத்துக்குள் செல்ல உதவியிருந்தாலும் அகாலம் வரையான கதைகளில்தான் செந்திலின் தனித்த முத்திரை இருப்பதாக எனக்கு தனிப்பட்ட விதத்தில் தோன்றுகிறது. அதே நேரத்தில் மகவு, அந்தி, ஊசல், தொடுகை, மோட்சம், பந்தயம், சுடர் போன்றவை தி.ஜானகிராமனுடைய செவ்வியல் கதைகளின் ஆன்மாவை எனக்கு ஏதோவொரு விதத்தில் நினைவூட்டுகின்றன.

 

செறிவான கதையுலகத்தை முழுமையான வியாபகத்தோடு வாசகர்களுக்கு வழங்கும் இப்பெருந்தொகுப்பு செந்திலின் கதைகள் குறித்த உரையாடல்களை விரிவாக்குவதுடன் அவருடைய படைப்பியக்கத்தின் எதிர்காலத் திசைவழிகளை அவருக்கு நிர்ணயித்துத் தரும் என்றும் நம்புகிறேன்.

 

கே.என்.செந்தில் இலக்கியத்தில் என் சகபயணி. அவருக்கு என் வாழ்த்துகள்.

***

(’கே.என்.செந்தில் கதைகள்’ நூலுக்கு குணா கந்தசாமி எழுதியுள்ள பின்னுரை)

எதிர் பதிப்பகம் , பொள்ளாச்சி.