Friday, July 18, 2014

க.மோகனரங்கனின் “சொல் பொருள் மெளனம்”

                  
சொற்களின் அழகு மிளிரும் மதிப்புரைகள்

    

                
                முன்னெப்போதைவிடவும் சூழல் கொண்டிருக்கும் ஆரோக்கியத்தின் காரணமாக, பதிப்பகங்கள் வளம் பெற்று தங்களுடைய இயக்கத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன.பெரும் அளவில் குவியத் துவங்கியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை மலைப்பையும் தேர்ந்தெடுப்பதில் சிரமத்தையும் ஒரு சேரத் தந்து கொண்டிருக்கின்றன.நுண்ணிய மனம் கொண்ட வாசகன் தான் விமர்சகன் என்பதால் இங்கு அவனுடைய பணியை நாம் கூர்ந்து நோக்க வேண்டியவர்களாகயிருக்கிறோம்.ஏற்கனவே உருவாகிவிட்ட தராசுத் தட்டுகளில் படைப்பை நிறுத்தி,அவற்றை பழைய எடைக்கற்களால் அளவிடுவதல்ல விமர்சகனின் பணி.அதற்கு படைப்பு,பண்டமோ சரக்கோ அல்ல.புதிய வெளிச்சங்களை படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் வழங்குவதோடல்லாமல் பின்தங்கிய படைப்புகளை நிர்தாட்சண்யமாக ஒதுக்கிவிடுவதுமே அவன் செய்யக்கூடிய முதன்மையான, தலையாய காரியமாக இருக்கும்.
             



                     விஸ்தீரமான களத்தைக் கொண்டிருக்கிற பரந்துபட்ட சாத்தியங்களை உள்ளடக்கிய நாவல் கலையில் அவற்றின் ஊடுபாவுகளை உள்வாங்கி அது ஏந்தி நிற்கும் சவால்களுக்கு ஈடுசெய்யக்கூடிய வகையில்,வெளியான நாவல்கள் தமிழில் குறைவு என்று விமர்சகர்கள் கணிப்பதுண்டு.இது விமர்சகர்களின் எண்ணிக்கைக்கும் பொருந்தும்.குறைந்த அளவிலான விமர்சகர்களுக்குள்ளும் கூட,படைப்பாளிகளே அதிக அளவில் விமர்சகனாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதன் மூலம் விமர்சனம் எதிர்கொள்ளும் சிக்கலான இடங்களை நுட்பமாக நுஃமான் ,சுந்தர ராமசாமியின் “காற்றில் கலைந்த பேரோசைநூலின்  மதிப்புரையில் தொட்டுக்காட்டுகிறார்.அவ்வளவாகப் பயிற்சியற்ற,முன் முடிவுகள் ஏதுமின்றி ஒரு நூலுக்குள் கலந்து ஒன்றாகி பின் மீளும் போதிய ஆர்வமற்ற வாசகனுக்கு, வாசிப்பின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள விமர்சகனின் நுண்ணிய மனமும் கூரிய அவதானிப்புமே பக்கபலமாக இருக்கும்.அதே போல படைப்பாளி,விமர்சனம் மூலம் அடையும் செழுமையும் எழுத்து சார்ந்த பரிசீலனையும் தான்,சூழலை புத்துயிர்ப்போடு முன்னகர வழி செய்யும்.இவ்வாறு இருவருக்குமான வெளியை உருவாக்கும் விமர்சனமே மதிப்பைக் கொண்டது.அவ்வகையில் வெளியாகியிருக்கும் “சொல் பொருள் மெளனம்நூல் ஒரு முக்கியமான வரவு.
           

                        
                    ஒரு நூலை மதிப்பிட,அந்நூலுக்கு முன் பின்னாக இருக்கும் படைப்பு வரலாற்றோடு அந்நூலை இணைத்து, அதன் நீட்சியில் அந்தப் படைப்பும் அப்படைப்பாளியும்   கடந்து சென்றிருக்கும் புள்ளியைத் தொட்டுக்காட்டுவதோடல்லாமல் ,எவையெல்லாம் சூழலுக்கு உள்ளும் புறமும் கொடையை வழங்கியிருக்கின்றன என்பதை எந்தத் தத்துவச் சார்பற்றும் கோட்பாட்டுப் பின்னணியற்றும் அதற்கேயுரிய திறந்த மனதுடன் மோகனரங்கன் முன்வைத்திருக்கிறார்.ஜெயமோகனின் முன்னோடிகள் குறித்த மொத்த விமர்சன நூலையும் வாசிக்க இயலாதவர்களுக்கு அல்லது அப்படைப்பாளிகள் பற்றிய அறிமுகமோ போதுமான புரிதலோ கொண்டிருக்காதவர்களுக்கு அந்நூலின் சாரத்திலிருந்து தொகுத்துத் தந்துவிட்டு அவற்றைத் தன்னுடைய வாசிப்போடு ஒப்பிட்டு வரையறுத்து ஏற்கவும் மறுக்கவுமான நிதானத்தோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டிருக்கிறார்.இதன் தொடர்ச்சியாக “நவீன இலக்கியம் என்பது நவீனத்துவ இலக்கியங்களேஎன்னும் ஏற்கத்தக்க வாதத்தை எழுப்பிவிட்டு,அதற்குரிய காரணங்களை தர்க்கப்பூர்வமாக அடுக்கியிருக்கிறார்.மேலும் மரபைப் புறக்கணித்து,தனி மனித துக்கங்களுக்குரிய வடிவமாக  படைப்புருவத்தைக் கையாண்ட படைப்பாளிகள் குறித்த விமர்சனமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.வாழ்வின் புறத்திலும் உள்மனங்களிலும் துக்கத்தைப் பெருமளவில் எதிர்கொண்டவர்கள் அவர்கள்.எனவே தான்,அவை படைப்புகளின் மீது பாவனையாக பிரதிபலிக்காமல் ஆழமாகவே நிலைகொண்டிருக்கிறது.அவர்களின் தோல்விகள் தான் படைப்பு வெற்றிகளாகியிருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.யதார்த்த்ததை நிலைநிறுத்த,பல நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்திய மரபைத் தவிர்க்கவும் மறுக்கவுமான நிலைபாட்டையும் அவர்கள் எடுத்திருக்க்க்கூடும்.தொடர்ந்து மீண்டும் மீண்டும் மரபைப் புறக்கணித்த்தையும் ஆன்மீகத்தைப் பொருட்படுத்தாது இருந்ததிலும் மொழிக்கும் சிந்தனைக்கும் ஏற்பட்ட இழப்புகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.




துக்கத்தை அதிகம் பேசாத அல்லது அதையும் புன்னகையோடு கூறும் இயல்புடைய முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் மீது இவர் மனம் கவிந்துவிட்டிருப்பதை அவர் பற்றிய கட்டுரையில் தெரிகிறது.முத்துலிங்கத்தின் கதையுலகு பல இடங்களில் வெளிக்காட்டிச் செல்வது இவர் கூற்றிற்கு நெருக்கமாகவே இருக்கிறது.அவரது புகைவண்டி இந்த தண்டவாளங்களின் மீது சொந்த ஊருக்கும் வேற்று நாட்டிற்கும் கண்டங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்வதையும் இங்கு நினைவு படுத்திக் கொள்ளலாம்.இதனாலேயே இவர் உலகு மற்றெல்லோருக்குமான ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
     

                     
                இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் கவிதை குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளும் கவிதை நூல்களின் விமர்சனமும் ஒரு பகுதியாக இருக்க,மற்றொன்றில் கவிதை அல்லாத பிற படைப்புகளின் மீதான நுட்பமான பார்வையோடு கூடிய மதிப்பீடு என தொகுக்கப்பட்டுள்ளது.அவற்றின் குணங்கள் மற்றும் தன்மைகள் சார்ந்து பொது மற்றும் தனித்த அடையாளங்களைக் கண்டுகொள்ள இது துணை செய்கிறது.காடுநாவல் பற்றிய கட்டுரையில் அந்நாவலை மட்டுமேயல்லாது மொழியின் அழகியல் மற்றும் படைப்பின் உள்ளோட்டங்களைத் தன்னுடைய பார்வை சார்ந்து விளக்கியிருப்பது வாசகனின் முந்தைய மதிப்பீட்டையும் அவன் அணுகியிருந்த கோணத்தையும் பரிசீலித்துக் கொள்வதற்கான வாய்ப்பைத் தந்திருக்கின்றன.குறிப்பிடத் தகுந்த,ஆனால் கவனிக்காது தவறவிட்ட புள்ளிகளை நோக்கி விமர்சகனின் மனம் குவியும் போது,படைப்பின் திக்குகளை அறிந்து கொள்வதன் மூலம் ஒருவித மேலான உணர்வு உண்டாகிறது.பின் தொடரும் நிழலின் குரல்நாவலில் ஆண்களின் பதட்டங்களுக்கும் சரிவுகளுக்கும் நேரெதிராக பெண்களின் ஆளுமை வகிக்கும் பங்கு குறித்த அவதானிப்பை இவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும்.


                

                    
                 எந்த நூலையும் சுலபமாக நிராகரித்து விடாமல் அவற்றின் இருப்புக்கு குறைந்த பட்சமான, ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் மோகன்.ஜீவனாம்சம்போன்ற நாவலிலிருந்து வெகுதூரம் நாம் வந்துவிட்டிருந்தாலும் கூட ஒரு பெண்ணைக் கொண்டு அன்றைய சூழலில்,நினைவோடை உத்தியை உபயோகித்திருந்த நாவல் என்ற அளவில் அதற்கு ஒரு வரலாற்றுக் காரணத்தை வழங்கி மறுதலிக்காததைப் போலவே மன ஊசலின் நேர்மையான பதிவிற்காக ‘கிடங்கு தெருநாவலையும் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கிறார்.கூளமாதிரிநாவல் எழுதப்பட வேண்டியதன் வரலாற்றுப்பின்னணி மற்றும் தமிழில் அதன் தேவை குறித்து கச்சிதமாகவே எழுதப்பட்டிருக்கிறது.சுதந்திரம் என்றோ.கட்டுக்குள் அடங்காத எல்லை என்றோ வசதிக்காக குறிக்க முயன்றாலும் இக்குறிப்பையும் விஞ்சி நிற்பதே ‘வெளி’. அவ்வாறான வெளியில் ஒரு நாளின் முக்கால் வீதத்தையும் கழிக்க வேண்டியிருப்பினும் கூட,அவ்வெளியே புலப்படாத ஒரு சிறையாக ஆகி கவனத்தைக் கடுகளவும் திருப்ப இயலாத ஒரு சிறுவனைப் பற்றியதான ‘கூளமாதிரிநாவலை மதிப்பிட்டிருப்பதில் போதாமை தென்படுகிறது.
            

               
                வடிவம்,சொல்லுதலில் நூதனம் போன்றவை ஒரு நாவலின் இலக்கியத் தகுதியை நிர்ணயிக்கத் துணை செய்யக்கூடியவை தானே தவிர,அதுவே இறுதியானதல்ல. எம்.ஜி.சுரேஷின் “சிலந்தி “, “37ஆகிய நாவல்கள் அவ்வகையானதே.மேலோட்டமாகச் சற்று அதிகமாக புகழ்ந்து விட்டது போல தோற்றத்தைத் தந்தாலும் ஆழத்தில் அவை பற்றிய விமர்சனம் கூர்மையாகவே வெளிப்பட்டிருக்கிறது. “37 நாவல் விமர்சனத்தில் பின் நவீன எழுத்து குறித்து குழப்பமில்லாத  தொனியில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.


           

                 

                  சொற்களோடு ஆகக்கூடிய நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது கவிதையே.அது ஸ்தூலமாகவோ, அரூபமாகவோ வெளியீடு கொள்ளக் கூடும்.கவிஞனின் ஆளுமையின்பாற்பட்டது அது.மனதில் உண்டாமும் உணர்ச்சியின் தீவிரத்தை,காட்சிகளின் ஓட்டத்தைச் சற்றும் இடைவெளியின்றி தான் விரும்பும் விதத்தில் தாளுக்கு நகர்த்திவிடுவதே கவிஞனின் பிரதானமான நோக்கமாக இருக்கும்.உணர்ச்சி.வெளிப்பாடு இவை இரண்டிற்கும் இடைவெளியே இல்லாமல் ஆக்கும் விசாரத்தின் குமிழ்கள் அவன் மனதின் இரு கரைகளிலும் திருப்தியுராது அலைந்தபடியே இருக்கும்.சொற்களையும் அது கொண்டிருக்கும் முந்தைய அர்த்தங்களையும் தன் பயன்பாட்டின் மூலம் மாற்றியமைப்பதினூடாகவோ (பிரமிள்,நகுலன்),எளிய புழக்கத்திலிருக்கும் மொழியை நேர்த்தியாக கைகொள்வதினூடாகவோ (ஆத்மாநாம்,கலாப்ரியா) வேற்று முயற்சிகளினூடாகவோ கவிதையின் முகம் பன்முகம் பெற்றிருக்கிறது.கவிதைகள் மீது கொண்டிருக்கும் ஆழமான விரிவான வாசிப்பை அவற்றை வெளிக்கொணர மோகன் தேர்ந்தெடுத்திருக்கும் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன.மொழி சிறப்பான கணங்களை நூலின் பல இடங்களில் அடைந்திருக்கிறது.[உ.தா : “அர்த்த பிரவாகத்தில் சொற்களின் பிரசன்னம் நீரில் மிதக்கும் விளக்கின் ஒளிப்பிம்பம் போன்றதே”(பக்.161)].கவிதைகளின் மீதான ஆசிரியரின் பார்வையைத் திரட்டிக் கொண்டால்,படிமங்களின் அவசியத்தை அவர் மெளனமாக வற்புறுத்துவது தெரியும்.பிரமிள், ராஜசுந்தரராஜன் , பா.வெங்கடேசன் போன்ற கவிஞர்களின் தொகுப்புக்கு எழுதப்பட்ட மதிப்புரைகளிலும்,சமீபத்தில் மனுஷ்யபுத்திரனின் மணலின் கதைதொகுப்புக்கு ‘இந்தியா டுடேயில் எழுதிய விமர்சனத்திலும் அதைத் தெளிவாக நாம் காண இயலும்.இன்றைய நவீன கவிதை படிமங்களை உதற வெகுவாக பிரயத்தனப்படும் சூழலில் இது விரிவான விவாதத்தை தோற்றுவிக்கக்கூடும்.எழுத்துவிலிருந்து இன்றைய சிற்றிதழ் வரையிலான கவிஞர்கள் பலரைப்பற்றியும் விரிவாகவும் குறிப்புகளாகவும் இந்நூலில் மோகம் எழுதியிருக்கிறார்.மரபைத் துண்டித்துக் கொண்டதன் மூலம் நவீன கவிதைக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை யூமா.வாசுகியின் நூல் முன்னுரையில் மோகன் சற்று விரிவாகவே எடுத்துரைத்திருக்கிறார்.கவிதையைப் பற்றி ஒட்டுமொத்தமான பார்வையில் அணுகாமல் தனிப்பட்ட காரணகாரிய விளைவுகளைக் கொண்டே அதன் நிறைகுறைகளை அணுகியிருப்பது வாசகனின் பொறுப்புகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.இதில் “நவீன கவிதையின் சிந்தனைப் போக்குகள்முக்கியமான கட்டுரை.




             இந்நூலின் குறை வெளிப்படையான கறார் தன்மை இல்லாதது தான்.ஒன்றை மறுக்கும்போது கூட அந்நூலின் சாதக அம்சங்களைச் சுட்டிவிட்டு அதனடியில் அவற்றிற்கான விமர்சனம் மொழியினால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் உத்தி எந்தளவிற்கு பலமோ அதே அளவிற்கு பலவீனமும் ஆகும்.மறைந்து கிடப்பதைக் கண்டறியாத வாசகன்,அதிலிருக்கும் எதிர்மறையான அர்த்தத்தைத் தவறவிடக் கூடும்.(எம்.ஜி.சுரேஷின் எழுத்துக்கள்)





                 
ஒற்றைவரி அபிப்ராயங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு பாரபட்சமற்ற அணுகுமுறையால் எழுதப்பட்டிருக்கும் இந்த விமர்சனங்கள் நம் வாசிப்பை மறுபரிசீலனை செய்துகொள்ள துணைபுரிவதோடல்லாமல் அவற்றினூடாக இக்கருத்துகள் சார்ந்து முரண்பட்டு விவாதத்தை உண்டாக்கவும் நம்மைத் தூண்டக்கூடும்.அதற்கான ஒரு வெளியும் இதில் இருக்கிறது.ஒரு உண்மையான விமர்சனத் தொகுப்பு செய்யும் மேலான காரியம் இது.இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்நூலை வாசிப்பது மட்டுமே.

நன்றி :தீராநதி நவம்பர் 2006

சொல் பொருள் மெளனம் – க.மோகனரங்கன் – யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடு.


குறிப்பு: இந்நூல் திருப்பூரில் யுவன் சந்திரசேகர் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்.அந்நாளில் அது பெரிய சந்தோஷத்தையும் நம்பிக்கையையும்  அளித்தது.உடனடியாக நூலைப் படித்து மோகனுக்கு கடிதம் எழுதினேன்.அது பற்றி விரிவாக அவரிடம் பேசினேன்.அதன் விளைவாகவே இம்மதிப்புரையை எழுதினேன்.

No comments:

Post a Comment