Showing posts with label தி.ஜானகிராமன். Show all posts
Showing posts with label தி.ஜானகிராமன். Show all posts

Wednesday, July 8, 2015

மனதின் முடிவுறாக் கோலம்


                   மனதின் முடிவுறாக் கோலம்

        
         .....
      .....
      மெல்லக் கனவிலாழும்
      பெண்களின் கண்களில்
      மினுங்குமப்
      பொன்னொளிர் மிளிர்வுகள்                                 
      ஆடவர் நாம்
      ஒரு போதும் காணவியலாத                                            
      சுவர்க்கத்தின்
      ஒளிநிழலாட்டங்கள்.

                  -க.மோகனரங்கன்
                            (வளர்ப்பு மிருகம்)


                                                        


          
உணர்ச்சித் தத்தளிப்புகளையும் ஆசையின் அலைகழிப்புகளையும் வாழ்க்கையின் சுழிப்புகளையும் கொண்டு எழுதப்பட வேண்டிய நாவலொன்று இக்கவிதையை வாசித்து முடித்ததும் மனதில் எழுகிறது.பித்துபிடிக்க வைக்கும் அந்த ஒளிநிழலாட்டத்தின் வசீகரத்தில் சொக்கிப்போய் சரிந்த ராஜ்யங்களின் வரலாற்றில் சாம்ராட்டுகளின் கிரீடங்கள் அந்த பொன்னொளிர் மிளர்வுக்காகத் தானே தவம் கிடந்தன!மாயப்பிசாசுஎன பெண்களைச் சொன்னவனும் அறியமுடியாமையின் கரையிலிருந்து தான் சொன்னானோ?அல்லது அதனுள் இறங்கி மூழ்கி முக்குளித்தப் பின்னும் அறிய முடியாது போன தன் நிர்கதியை ஏமாற்றத்தைத் தான் அவ்வாறு சொல்லி இருப்பானோ?சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாவுக்குச் சென்றிருந்த போது அதிக ஜன சஞ்சாரம் இல்லாத சிறு உணவகத்தில் வண்டியை ஓரங்கட்டினோம்.இலை போட்டவரின் பனியனிலிருந்த ஓட்டைகளை எண்ணியபடி தம்ளரில் நீரெடுத்து இலை கழுவிய நண்பன் வளையொலி கேட்டு கைமுஷ்டியால் இடித்தான்.அகன்ற விழியில் கச்சிதமாகப் போடப்பட்ட மையுடன் அப்போது தான் குளித்த சந்தன சோப்பின் மணத்துடன் வந்து இட்லிகளை வைத்தாள்.அவன் கண்கள் அவளையும் வாசலில் வெயிலில் காயும் காரையும் மாறிமாறித் தொட்டு மீண்டது.அவள் அவனை அறிந்து கொண்டாள் போலும்.முன்னால் விழுந்து கிடந்த ஜடைப்பின்னலை எடுத்து பின்னால் வீசியபடி கண்மணிகளை அவன் மட்டும் அறியும் வண்ணம் கண்களுக்குள்ளாகவே அசைத்து ஒரு வெட்டு வெட்டினாள்(இதை பின்னொரு நாளில் அவன் செய்து காட்ட பலமுறை முயன்று தோற்றான்).அவ்வளவு தான்.அவன் புத்தி அவளுக்குப் பின்னால் போய்விட்டது.அதன் பின் அவள் முன் சிகரெட்டை மறுத்தான்.புதிதாக நடை பழகினான்.அவள் கல்லாவுக்கு வந்ததும் பெரிய அலட்டலான தோரணையோடு உண்ட கணக்கை நேர் செய்தான்.வேண்டுமென்றே சில்லறை முறித்தான்.வண்டி புறப்பட்டதும் அவன் முதுகில் இல்லாத தூசியை விரட்டுபவனைப் போல அந்த நீலநிறப்புடவைக் கண்ணில் படுமா?என்ற கவலையுடன் திரும்பி திரும்பிப் பார்த்தபடியே வந்தான்.வண்டி குலுங்க அடித்த கிண்டல்கள் அவனை ஏதும் செய்யவில்லை.அவன் மீண்டும் இருமுறை அவளைக் காண வேண்டி அங்கு சென்று வந்ததாக சிறுவிபத்தில் கால் கட்டுடன் கிடக்கும் போது சொன்னான்.பல முறை யோசித்ததுண்டு.ஒரு சொல் கூடப் பகிரப்படாத வெற்றுப் பார்வை அவனை மாநிலம் விட்டு மாநிலம் ஓடச் செய்திருக்கிறது! தவம் கிடக்க வைத்திருக்கிறது!விந்தை போலவும், சரிதான் என்பது போலவும் அவ்வப்போதைய மனநிலைக்கு ஏற்ப எனக்குள்ளாகவே பதில்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டதுண்டு.



பெரும் அரசியல் கொந்தளிப்புகளையோ நிலை தடுமாற வைக்கும் சமூக பிரச்சனைகளையோ அதிகமாக கைகொள்ளாத தமிழ் புனைவெழுத்து அதிகபடியாக எழுதிப்பார்த்திருப்பது ஆண்-பெண் உறவுநிலைகளின் வகைபேதமான நிறங்களையும் வசீகரம் குன்றாத அதன் உள்முடிச்சுகளையுமே.குடும்பம்(இந்திய மற்றும்) தமிழ் வாழ்க்கையில் ஒருவன் மேல் செலுத்தும் சாதக பாதக விளைவுகளாலும் அதையொட்டி சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விழுமியங்களாலும் அவன் மேலதிகமாகவே மன உலைவுக்கு ஆட்படக்கூடும்.அந்தப் புள்ளியை வெவ்வேறு வழித்தடங்களின் வழியாகப் போய் தொட்டவர்கள்,அவ்வப்போது தொட்டுத் திரும்பியவர்கள்,அந்த ருசியிலேயே அமிழ்ந்து மீளமுடியாது போனவர்கள் என பலரும் செயல்பட்ட களம் அது.கு.ப.ராஜகோபாலன் கதைகளில் அதற்கான முதற்சுவடை காணநேர்ந்தாலும் அவரை வழிகாட்டியாக கருதி எழுதிவந்த தி.ஜானகிராமன் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அவரை லகுவாக கடந்து சென்றிருப்பதை எந்த நுட்பமான வாசகனும் உய்த்துணர்ந்திருக்கக்கூடும்.லா.ச.ராவின் அபிதா,தி.ஜாவின் ‘மோகமுள்’(முதிர்ந்த வாசிப்பில் வேறுவேறான கதவுகளைத் திறந்து செல்லமுடியும்)ளிலிருந்து சமகாலத்திய பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’,யூமா.வாசுகியின்மஞ்சள் வெயில்என நீளும் ஆக்கங்களில் பெண் மீதான ஆணின் விழைவுகளை,மனப்புயலை,பேதலிப்புகளை அந்தந்த படைப்பாளிக்கேயுரிய வாழ்க்கை மற்றும் இலக்கிய நோக்குடன் அணுகியிருப்பதைக் காணலாம்.லூசிப்பெண்ணே..ரோசாப்பூவே..!என நகுலன் நாவல்களில் இடம்பெறும் பெண் சித்திரம் நகுலன்/துரைசாமி/நவீனன் என்போர்களின் மனத்திரிபு நிலைகளே.இவை அனைத்தும் நாவல்கள்.




இரு பெரும் கலைஞர்கள் தங்கள் சிறுகதைகளில் இத்தகு மன அவசங்களை  மனதின் உள்ளோட்டங்களை கையாண்ட நேர்த்தியின் மீதான வியப்பினாலும் (சிறிது பிசகியிருந்தாலும் வாசகநோக்கு சிதறியிருக்கும்)முடிவற்று பெருகிச் செல்லும் மனக்கோலங்களை அவர்களுக்கேயுரிய தனித்தன்மையால் இணைத்திருக்கும் முறையிலிருந்துமே இக்கட்டுரைக்கான முதல் விதை மனதில் விழுந்தது.

        அதிக சிலாப்புக்கு ஆளாகாத தி.ஜானகிராமனின் மனநாக்கு(கணையாழி,நவ.69) வண்ண நிலவனின் சிறந்த கதைகளுள் ஒன்றெனப் பெயர்பெற்ற ‘மனைவியின் நண்பர்’(தாய் 1990) ஆகிய இரு கதைகளுக்கும் எழுதப்பட்ட காலம் சார்ந்த இடைவெளி சற்று மிகுந்திருந்தாலும்  இன்றும் இவை இரண்டும் மனம் என்னும் ஆதிகாலப்புதிரின் வெகு சில நுண்ணிய இடங்களை குறிப்பாலுணர்த்தும் வல்லமை கொண்டவை.இவ்விரு கதைகளிலும் காணக்கிடைக்கும் முதல் ஒற்றுமையே மைய ஆண் கதாபாத்திரங்கள் இரண்டுமே ‘பிறர் மனை நோக்கா பேராண்மையாளர்கள் அல்லர் என்பதே.ஆம்!வேறொருவரின் மனைவியோடு, அவர்களுக்கு மிக அருகில் இருந்தபடி ரசமான சம்பாஷனையில் ஈடுபட்டு சிற்றின்பத்தில் லயித்துக் கிடக்க விரும்புவர்கள்.அதை பேரின்பமாக மாற்றிக் கொள்ள தைரியம் அற்று பரிதவித்து தயங்கி அந்தக் கோட்டைத் தாண்டிச் செல்ல முடியாமல் மனநடுக்கத்தோடு திரும்பிச் செல்பவர்கள் அவர்கள்.இதற்கான தூண்டிலை மிக நுட்பமாக அவர்களை நோக்கி வீசுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.அப்பெண்களும் அந்த வேட்கை, கரை மீறிச் செல்ல அனுமதிப்பதில்லை.என்றபோதிலும் அதற்கான முதல் அடிவைப்பு ஆண்களுடையதாக இருக்க வேண்டும் என்றும் அதற்கான சமிக்ஞைகளை மட்டும் பெண்கள் அளிப்பார்கள் என்னும் பெண்மனம் குறித்த அவதானிப்பை கதையோட்டத்தின் அடியில் எளிதில் புலப்படாதவாறு உணர்த்திக்காட்டப்பட்டிருக்கிறது.மேற்கண்ட இரு கதைகளின் கருப்பொருளை கையாள்வதென்பதை பழைய பழகிய உவமையில் சொல்வதென்றால் ‘கத்தி மேல் நடப்பது போலஎனலாம்.ஆனால் பளபளப்பும் கூர்மையும் கண்ணைப் பறிக்கும் அழகும் கொண்ட கத்தி.இந்த இரு படைப்பாளிகளும் தங்கள் கலை திறனால் மனங்களின் உள்ளே நொதித்துக்கிடப்பவற்றில் சிலதையேனும் பிளந்து வைக்கிறார்கள்.



அபாரமான அழகுணர்ச்சியும் சொல்லிச் சொல்லி செல்வதில் பெருவிருப்பமும் உடையவர் தி.ஜானகிராமன்.தி.ஜா-வின் மொத்த கதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் லா.ச.ரா இயல்பிலேயே அழகானதை ஆராதனை செய்யும் போது ஜானகிராமன் தன் ஆராதனை வழியாகவே ஒன்றை அழகானதாக ஆக்குகிறார்.என்னும் நுட்பமான அவதானிப்பை முன் வைக்கும் கவிஞர்.சுகுமாரன் அந்த அழகின் ஆழத்தின் மனதின் ஆதார உணர்வுகளின் சிக்கல்களும் மோதல்களும் கிடக்கின்றன.அழகை விரும்பி வாசிப்பவனுக்கு கதை ஜனரஞ்சக சுவாரஸ்யமுள்ளதாகவும்,ஆழத்தை உணர்பவனுக்கு இலக்கிய நுண்மை கொண்டதாகவும் ஆகிறது.என  மேலும் நகர்ந்து செல்லும் போது அவ்வரிகளை மனதிற்குள் தலையசைத்து ஏற்கிறோம்.இந்த மதிப்பீட்டை கவனமாக கருத்தில் கொள்வது தி.ஜானகிராமனின் படைப்புலகை அணுக நமக்கு பேரளவு துணைபுரியும்.அது போலவே பெண்களின் பாத்திரவார்ப்பு குறித்து மிக அதிக பக்கங்கள் எழுதப்பட்டது தி.ஜாவின் பெண்களை பற்றி மட்டுமாகவே இருக்கக்கூடும்.

தலைநகர் டெல்லியில் நிகழும் கதைமனநாக்கு’.தலைப்பிலேயே கதையின் உட்பொருளை உணர்த்திவிடுகிறார்.ஆம்.மனம் தான் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கிறது.மோகித்துக் கிடக்கிறது.சமத்காரமான(அல்லது இயல்பிலேயே அமைந்து விட்ட) மொழியால் பாத்திரங்களின் உரையாடல்கள் வழி நம் கண் முன் நிகழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணச்செய்யும் அளவிற்கு காட்சிகளை உருவாக்குபவர் தி.ஜா.அவள் (மாலி) மீதான மனக்கூவலை மென்று விழுங்கி   மோகத்தின் அலையில் கை அல்ல கால் கூட நனைக்க முடியாமல் ஆற்றாமையுடன் தன் ஸ்திதி பற்றிய சுயபச்சாதாபத்தால் நொந்து திரும்புகிறவனின் கதை இது.சிணுங்கலும் பொய்கோபமுமாக தொலைபேசி உரையாடலில் தொடங்குகிறது கதை.மாலி பேசுகிறாள்,குறித்த நேரத்திற்குள் வருவதில்லை என்ற செல்ல சண்டையுடன்.ஆறரைக்குச் சரியாக வருவேன்என்ற உறுதியை அவனிடம் வாங்கிய பின்பும் அவள் அவனை சோதிப்பதற்காக அவன் வருகையை நிச்சயம் செய்ய அவன் மீதான தன் ஆளுமையை பரிசோதிக்க நேரம் தவறினால்,ஆறு மாசம் போனைத் தொடமாட்டேன்என்ற பிறகு திருப்தியில்லாமல் ‘டயத்துக்கு வரது நிச்சயமில்லன்னா பரத நாட்டியத்துக்கு சினேகிதி கூப்பிட்டிருக்காஎன்கிறாள்.பிறகென்ன?வருகிறேன் என்கிறான்.மானசீகமாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாகி விட்டது.(அப்போதே அவன் கை கால்கள் எல்லாம் பரபரவென்று பரக்கத் தொடங்கிவிட்டது).பிறகு தான் அது வரை மறைத்து வைத்த அஸ்திரத்தை வெளியே எடுக்கிறாள் மாலி.

“அவரும் ஊரிலே இல்லயா..

அப்படியா

ஆமா?

எங்கே

“நாக்பூருக்குப் போயிருக்கார்.நாளன்னிக்குக் காலமே தான் வறார்.சித்த ஆர அமரப் பேசலாம்ன்னு தான் சுருக்க வரச் சொல்றேன்.

நாளை மறுநாள் வரப்போகிற செய்தியைச் சொல்லிவிட்டு சீக்கிரமாக வரவும் ஒப்புதல் பெற்று விட்டு,இத்தனையும் ஆற அமர பேசுவதற்கு என்கிறாள் மாலி.

பேசுவதற்காம்?!பேதைகளாக்கி அலைய வைத்தது போதாதா?ஒரு வேளை உண்மையாக இருக்கக் கூடுமோ?பார்த்தாலே பசி தீரும் என்கிறார்களே!சரி தான்.எந்தப் பசி?தி.ஜா.வைக் கேட்டால் அவரது காணக்கிடைக்கும் ஒன்றிரண்டு புகைப்படங்களில் சிரிப்பதை விடவும் மென்மையாகச் சிரிக்கக்கூடும்.



அந்த அழைப்பினால் அவன் எலும்புக்குள்ளும் தசைக்குள்ளும் மண்டைக்குள்ளும் தளதளவென்று குதிக்கத் தொடங்கிய பொங்கல் அடங்கவில்லை”“யாம்.ஏனெனில் எட்டுவருஷக் காத்திருப்புக்குப் பின் கிட்டிய ‘தோற்றமாக இல்லாமல் பிரமையாக இல்லாமல்-நாளைக்குநடந்து விடக்கூடும் என எண்ணுமளவிற்கான பொன்னாள்.சட்டென்று இரண்டு கிளைக்கதைகள்  நோக்கிச் செல்கிறார் ஜானகிராமன்.எங்கும் சற்றே நிதானமாக நின்று உலாவிச் செல்வது அவரது வழக்கம்.அது வாசகனுக்கு சலிப்பை ஏற்படுத்துவதுமில்லை.முதலாவது அவரது சொந்த மண்ணான தஞ்சாவூரில் அவனதுஇண்டர் மீடியர் பரீட்சைமுடிந்த சமயத்தில் நடக்கிறது.இங்கு(டெல்லி) நிகழ்ந்து கொண்டிருப்பது போலவே பெண் மீதான மோகத்தில் அலைந்து ஒரு கட்டத்தில் பயந்து போய் பின்வாங்குகிறான்.மாலியைப் பார்க்கப்போகிற மன அவதியில் ஆட்டோ கிடைக்காமல் சீக்கியன் உதவ அவனது ஆட்டோவில் தொற்றி ஏறிச் செல்லும் போது நிகழ்வது மற்றொன்று.ஆச்சரியமான விஷயம் என்னவெனில் பெண்களின் வடிவை  கச்சிதமான வர்ணனை மற்றும் விவரணையால் வாசக மனதில் துல்லியமாக எழுப்பிக் காட்டும் தி.ஜா இக்கதையில் மாலியின் அழகை வடிவத்தை குறிப்பிடுவதில்லை.மாறாக கிளைக்கதையில் வரும் பெண்களின் சித்திரத்தை நறுக்குத் தெறித்தாற் போலக் காட்டுகிறார்.தஞ்சாவூர் பெண்ணைகொஞ்சம் உயரத்தோடு ஒரு துளி புருஷக்களை-முகத்திலும்,தோள் முதுகு அகலத்திலும் இந்த புருஷக்களைப் பொம்மனாட்டிகளுக்கு எவ்வளவு கவர்ச்சி!என்றும் சீக்கியனின் மனைவி பற்றிதலையில் முக்காடு.மாநிறம்.நல்ல பாஞ்சாலக்கட்டு உடல்.வலுவும் ஆவேசமும் இளமையும் பதுங்கித் தெறிக்கும் கட்டுஎன பாத்திரங்களின் மயிர்க்காலைக் கூட அழகியலோடு அணுகும் தி.ஜா அவனை வதைக்கும் மாலியின் உடல் பற்றி எந்தக் குறிப்பையும் எழுதியிருக்கவில்லை.

ஆனால் அவனது மனநாக்கு மட்டும் ஓயாமல் அவளைப் பற்றிப் பேசுகிறது.ஓரிடத்தில் மட்டும் சிறு குறிப்பு வருகிறது.என் அங்கவஸ்திரத்தின் மீது உன் தந்தக் காலை வைத்திருக்கிறாயே..என் மேல் போடுவதாகத் தானே பாவனை.இதை வைத்து அவரது –ஒரு சிலர் தவிர்த்து-பெரும்பாலான பெண்களைப் போலவே மாலியும் வெண்நிறத்தவள் தான் என யூகிக்கலாம்.மனிதனை நோக்கி அவனது காருண்யத்தை நோக்கி செல்லும் இடத்திலிருந்து அவன் முந்தைய மன அவசங்கள் தற்காலிகமாக நீங்கியவனாக ஆகிறான். அவனுக்காகவே திரும்பி வந்து டாக்சியில் ஏற்றிக் கொள்ளும் யாரென்றே அறியாத அந்த சர்தார்ஜி “உங்களுக்காகத் தான் வந்தேன்.எத்தனை நேரமாக நிற்கிறீர்கள்?என்கிறான்.அதை நினைத்து அவன் மாய்ந்து போகிறான்.நெஞ்சு குதுகுதுவென்கிறது.மனிதன் – மனிதன் – கடவுள் – மனிதன் – கடவுள் .இரண்டு வார்த்தைகள் முணுமுணுவென்று மார்பின் உள்ளுக்குள் திரும்ப திரும்பக் கேட்கின்றன.




இவ்வாறு சட்டென மனிதத்தை நோக்கி அவன் சொல்வது தான் ஜானகிராமன் கதையுலகின் ஆதார ஸ்ருதியாக இருக்கிறது.சிலிர்ப்பில் தன் குழந்தையை அவ்வளவு பிரியத்துடன் கட்டிக் கொள்ளும் தந்தையைப் போலவே இவனும் மனதிற்குள் சர்தார்ஜியைக் கட்டிக் கொள்கிறான்.உடம்பிலிருந்து மனதை நோக்கி நடந்தவர்என்னும் தி.ஜா பற்றிய பிரபஞ்சனின் வரியை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.ஆனால் ‘கடன் தீர்ந்ததுபோன்ற ஒரு கதை –அத்தகைய மனிதர்கள் காலாவதியாகிப் போன-இந்தக் காலகட்டத்தில் எவ்வாறு பார்க்கப்படும் என்பது வினாவாகவே எஞ்சக்கூடும்.தன் மனதெல்லாம் மாலியாக மாலியின் உடம்பாக அவளது வீட்டிற்குக் கிளம்பியவனை அந்தச் சீக்கியன் ஏதோ செய்து விடுகிறான்.அவனை வியந்து வியந்து தீராமல் ஆகும் போது “கேட்டின் கொக்கியைத் தூக்கித் திறந்து உள்ளே போகையில் உடம்பு பழத்திலிருந்து சாறெல்லாம் வற்றி விட்டார் போலிருந்ததுஎன்கிறான்.அவளைக் கண்டதும் மீண்டும் மன மோதல்கள்,அதைரியம்.வெறுமனே பேச்சை வளர்த்தி விட்டு எழும் போது “முள்ளா” என்னும் கேள்விக்கு “இல்லைஎனப் பொய் சொல்லிவிட்டு எழுகிறான்.இத்தனைக்கும் நடுவே மின்விசிறி குறித்து சிறு சம்பவம் கதையினுள் ஓடுகிறது.நெருங்கி வருவதற்கு மாலிக்கும் உள்ள விழைவை பட்டவர்த்தனமாக தொட்டுக் காட்டும் குறிப்பு அது.அப்போதும் அவனது மனநாக்கு தான் அசைகிறது.அவளைப் பற்றிய வியப்பும் தன் நிலை குறித்த கழிவிரக்கமும் மனதில் படர அதை மறக்கும் முயற்சியில் சம்பந்தமேதுமில்லாத புற உலகின் காட்சி ஒன்றை காண்பதோடு அக்கணத்தில் தற்காலிகமாக கதை முடிவை எட்டுகிறது.ஆனால் மாலியை அவன் அதே மனப்பரபரப்பில் ஆவலுடன் போய் பார்த்திருக்கக்கூடும்.இந்த எட்டு ஆண்டுகளும் பதினெட்டு ஆண்டுகளாக ஆன பின்பும் மனமே பேசிக்கொண்டிருந்திருக்கவும் கூடும்.அல்லது அடுத்த சந்திப்பிலேயே பரஸ்பரம் இருவரும் மனத்தடைகளற்று நெருங்கியிருக்கவும் கூடும்.யாரறிவார்?அது தி.ஜா வே அறிய விரும்பும் ரகசியங்களில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும்.



              
நாடகமொன்றில் பலமுறை நிகழ்த்திக்காட்டப்பட்ட முதல் காட்சி போலத் தொடங்குகிறது வண்ணநிலவனின்மனைவியின் நண்பர்’.புறக்காட்சியை எழுத்தாளன் கதைக்குள் கையாளும் நுட்பத்திலேயே அக்கதைக்குரிய உபபிரதியையோ அடிக்குறிப்புகளையோ உருவாக்கிவிட முடியும் என்பதற்கு மேலுமொரு சாட்சியாக அமைந்த கதை இது.மேற்பரப்பில் காணக்கிடைக்கும் சிற்றலைகளைக் கண்டு அதன் ஆழம் பற்றி தப்பெண்ணம் கொண்டுவிடக்கூடாதல்லவா?விடுபட்ட (அ) புரிந்தும் புரியாதது போல பாவனை கொண்டு விட்ட சொற்களை தன்னுள் எழுதிப்பார்த்துக் கொள்ளும் போது மனம் எத்தகையதொரு விசித்திரமான வஸ்து என்பதை மீண்டும் உணரத் தலைப்படுவோம்.சிறுகதை வடிவத்தை வண்ண நிலவன் போன்ற படைப்பாளி கலை ஒழுங்குடன் கை கொள்ளும் நேர்த்தி அவரது பல கதைகளைப் போலவே இதற்கும் மேலதிக ஒளியைப் பாய்ச்சுகிறது.ரஷ்ய இலக்கியங்களின் தாக்கத்திலிருந்து எழுந்து வந்த வண்ண நிலவன் ஒரு கதையைப் போல பிறிதொன்றை எழுதாதவர் (எஸ்தர், மிருகம்,பலாப்பழம்,அவனுடைய நாட்கள்..)இவரது களங்கள் நெல்லைச்சீமையைக் கொண்டிருப்பினும் கூட அதற்கு அப்பால் சென்னைடவுனையும் கொண்டவை,புதுமைப்பித்தனைப் போல.இவரும் கதையின் உட்கிடக்கையை சூசகமாக உணர்த்தி விடுகிறார்.மனைவியின் நண்பரான ரங்கராஜு சாயந்தரம் ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் மளிகைக்கடையில் வந்து அமர்கிறார்.இதை மட்டும் ஒரு பக்கம் வரை சொல்கிறார் வண்ண நிலவன்.அதில் அவரது செயல்பாடுகள்,நடவடிக்கைகள் கணவனின் கண்வழி குறிப்பெடுக்கப் படுகிறது.ரங்கராஜு மீது அவருக்கிருக்கும் கோபம்,எரிச்சல்,ஆற்றாமை போன்றவை அதனூடாகவே உணர்த்தவும் படுகிறது.ஏனெனில் அவரது மனைவி சிவகாமி,அவர் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்துகிற சத்தம் கேட்டதுமே,சிவகாமி வீட்டின் எந்த பக்கத்திலிருந்தாலும் வந்து விடுவாள்”.அவன் கண் முன்பே இருவரும் ருசிக்க ருசிக்க பேசிக் கொள்ள வேறு செய்கிறார்கள்.தி.ஜா போல வண்ண நிலவன் எங்கும் நிதாதித்து ரசித்து நிற்பதில்லை.அவர் நகர்ந்து கொண்டேயிருக்கிறார்.நகர்ந்தபடியே அவர் வைத்துச் செல்லும் புள்ளிகளைப் பின்னர் இணைத்துக் காணும் வாசகன், மனம் முடிவென்பதில்லாது நீளும் பிரம்மாண்டமும் சூக்குமமும் கொண்ட கோலம் என அறிகிறான்.

அவரது வருகையை அவனால் தடுக்கவும் முடிவதில்லை.ஏனெனில் அவ்வப்போது கடைக்கு பணமுடை ஏற்படும் போது லேவாதேவிக்காரரான ரங்கராஜு தான் உதவுகிறார்.அவளுக்குச் செல்லப் பேச்சுகள் அலுத்துவிட்டது என்றாலும்சிவகாமியும் அவருடன் சரிக்கு சரி நின்று இனிக்க இனிக்க பேசுவதும் ஒரு காரணமாக இருக்கும் போது அவரை மட்டும் குற்றம் சொல்ல அவன் தயங்குகிறான்.சிவகாமி முன்பு அவனை ரங்கராஜு ‘அவர்என்று தான் அழைக்கிறார்.இது போல அவர் கடைபிடிக்கும் கண்ணியங்களை அவன் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் முன்பே கணவனின் மூக்கைச் செல்லமாக இழுத்து விட்டு போகிறாள்.[அவள் மிகுந்த சந்தோஷத்தோடு இருக்கிற போது இப்படிச்செல்வது வழக்கம்].ஆனால் இந்த மூன்று மனங்களுக்குள்ளும் ஓடிக்கொண்டிருப்பவைகள் வேறானவை.மேல் மட்டத்தில் நடக்கும் இந்த சம்பாஷனைகள் மற்றும் விவரணைகளின் வழியாகவே அந்த மறைக்கப்பட்ட திரையை விலக்கி நுட்பமான வாசகன் கண்டுகொண்டு விடுவான்.அதை பட்டவர்தனமாக அல்லாமல் சூசகமாக சொல்வதனாலேயே  கதையின் வெளிப்பாட்டு அமைதி கூடுகிறது.மேலும் ரங்கராஜு உடனடியாக வீட்டினுள் நுழைவதில்லை.அதை இயல்பான ஒன்றாக ஆக்க அவனோடு பேச்சுக் கொடுக்கிறார்.அவன் பதிலில் சீண்டப்பட்டும் கூட அவர் எதிர்வினைபுரிவதில்லை.(ஏனெனில் சிவகாமி,”....உள்ளே வாங்களேன்..  என்று கண்களை ஒரு வெட்டுவெட்டிப் போனாள்“).

அவளது அழகு தான் அவரை ஓயாமல் அங்கு இழுத்துக் கொண்டிமிருக்கிறது.அவர் உள்ளே சென்று கொண்டிருக்கும் போது தான் அந்த வீட்டின் அமைப்பை வண்ண நிலவன் கச்சிதமாகச் சொல்கிறார்.அப்போது தான் சிவகாமிக்கு பெண்பிள்ளை இருப்பதையே ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.(இதை முன்பே செய்திருந்தால் ரங்கராஜுவின் அல்லாடல்கள் சிவகாமியின் கணவனை மட்டும் கொண்டிருந்திருக்காது.சிவகாமியும் அவரோடு பாந்தமாக பேசிக் கொண்டிருந்திருக்க முடியாது.மேலும் கணவின் இருப்பு போல் அல்ல வயது வந்த பெண்பிள்ளையின் இருப்பு.அந்தக் குற்ற உணர்வு கதையின் மையத்தை சிதைத்து விட்டிருக்கும்.)சிவகாமிஎன பிரியமாகக் கூப்பிடத் தோன்றியும் சரோஜா இருப்பதால் விழுங்கிவிடுகிறார்.அப்போது காப்பியை கொடுத்தபடியே அவர் அருகில் வந்து(உடம்போடு உடம்பு படுகிற மாதிரி”) அமர்ந்து கொள்கிறாள்.கண்களை ஆழ நோக்குகிறாள்.அது அவருக்கு தாங்கொண்ணா ஆனந்தத்தை அளிக்கிறது.சிவகாமியின் ‘சமைஞ்ச பொண்ணுரங்கராஜுவிற்கு நினைவிற்கு வரவே அமைதியாகிறார்.அவருக்கு அந்த உறவு எல்லைக்கப்பால் சென்று விடுமோ?! என்ற கிலி வேறு. சூக்குமமான தருணங்களின் அடக்கப்பட்ட பெருமூச்சுக்களையும் அதைரியத்தால் திறக்கப்படாத ஏக்கத்தின் கதவுகளையும் தன்னுள்ளேயே இக்கதை கொண்டிருக்கிறது. சிவகாமியும் அவ்வாறான அச்சவுணர்வை அந்த கணத்திலேயே வெளிப்படுத்தவும் செய்கிறாள்.அது என்ன என்ற அவரது தூண்டுதலுக்கு அவள் பதில் அளிக்காமல் அவரை வீட்டினுள்ளேயே விட்டுவிட்டு வந்து கணவனுடன் மளிகைக்கடையின் நின்று கொள்கிறாள்.பின் எதுவுமே நடக்காதது போல எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் விடைபெற்றுச் செல்கிறார் ரங்கராஜு.அவர் இனி வரமாட்டார் என சிவகாமி கூறுவதுடன் இங்கும் கதை தற்காலிகமாகவே முடிவுக்கு வருகிறது.



இந்த வீம்பு காலத்தால் கரைந்து போகாதது என்றே படுகிறது.ஆனாலும் அந்த கண்களின் “ஒளிநிழலாட்டத்தைரங்கராஜுவால் மண்ணிற்குள் இறங்குகிறவரை மறக்க முடியாது என்றே படுகிறது.கலை நுட்பத்தால் மிளிரும் இக்கதை உள்ளூர கிடக்கும் இடைவெளிகளின் அர்த்தங்களை  மெளனங்களை நோக்கி வாசகனைச் செலுத்தும் ஆற்றல் கொண்டது.இதே பொறாமையுணர்ச்சி,விளங்காத உறவு பற்றிய அச்சம்,கோபம்,எரிச்சல் போன்றவற்றோடு எழுதப்பட்ட கார்வரின் ‘கதீட்ரல்சிறுகதை வேறொரு தளத்தில் (காமம் சார்ந்து அல்ல) இக்கதையுடன் ஒப்புநோக்கத் தக்கது.


              வெளிப்படையாக அல்லாமல் அந்தரங்கமாக இயங்கும் இத்தகைய மனங்களை இலக்கியம் மூலம் மட்டுமே நெருங்கிச் சென்று சிறிதளவேனும் புரிந்து கொள்ள முடியும்.இந்த வசீகரமான ரகசியவெளியில் மனதிற்குள்ளாகவே பம்மி பதுங்கியபடி நடமாடுபவர்களிடம் கவிஞர்.இசையின் ஒரு கவிதையை(நைஸ்) வாசித்து அவர்களின் பதில்களைப் பெற ஆசையாக இருக்கிறது.இவர்களைத் தனியே அழைத்துச் சென்று

“............
..............
இந்த நைஸிற்குத் தான் மணிமுடிகள் சரிந்தனவா?
முனிகள் பிறழ்ந்தனரா?
இதற்காகத் தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகிறார்களா?
இதற்காகத் தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா?
...........
இது மட்டும் போதுமென்று தான்
கண்காணாத இடத்திற்குப் போய்விடுகிறார்களா?

எனக் கேட்கையில் வெட்கமும் வேதனையும் வியப்பும் முகத்தில் மின்னி மறைய அவர்கள் நிமிர்ந்து நோக்கும் போது அங்கிருக்க மாட்டேன். தங்கள்  கண்களில் படரும் ஈரத்தை  மறைக்கப்பட்ட வலியுடன் புறங்கையால் துடைத்துக்கொண்டிருக்கும் அதே கணத்தில் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டிருப்பேன்.

உதவிய நூல்கள்
=================
1.மீகாமம் - க.மோகனரங்கன் - கவிதைத் தொகுப்பு - தமிழினி பதிப்பகம்.
2.தி.ஜானகிராமன் சிறுகதைகள் - பதிப்பாசிரியர்-சுகுமாரன் - காலச்சுவடு பதிப்பகம்.
3.வண்ணநிலவன் கதைகள் - சந்தியா பதிப்பகம்.
4.அந்தக் காலம் மலையேறிப் போனது - இசை - கவிதைத் தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம்.

(நன்றி :கணையாழி ஜுலை 2015)


Monday, February 16, 2015

முனை மழுங்காத முள் - க.மோகனரங்கன்


தி.ஜானகிராமனின் “மோகமுள் நாவல் பற்றி க.மோகனரங்கனின் கட்டுரை




முனை மழுங்காத முள்


-க.மோகனரங்கன்
                    

                
                        சமீபத்தில் என் நண்பரான புகைப்படக் கலைஞரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது,அவர் எடுத்த புகைப்படங்கள் என்று ஒரு தொகுப்பைத் தனது கணனியின் நினைவகத்திலிருந்து எடுத்துக் காண்பித்தார்.அத்தனையும் மலைகள்.உற்றுக் கவனித்த போதுதான் தெரிந்தது அவற்றுள் இருப்பது ஒரே மலை தான்.அது நண்பரின் ஊருக்கு சற்று தள்ளி இருப்பது.பெரிதாக பக்தர் கூட்டமும் வழிபாடும் இல்லாத சிறு கோயில் ஒன்றும் அதன் உச்சியில் உண்டு.அப்படங்களைத் திரும்பத் திரும்ப சில தடவைகள் பார்த்தேன்.விடியற்காலை,பின்மாலை,உச்சிப்பகல்,முன்னிரவு எனப் பொழுதுகளில் வெவ்வேறு பருவங்களில் தொலைவிலிருந்து அருகிலிருந்து பக்கவாட்டிலிருந்து எனப் பலவித கோணங்களில் அவை எடுக்கப்பட்டிருந்தன.அத்தொகுப்பு ஏறக்குறைய அம்மலை பற்றிய ஒரு தியான வரிசையாக எனக்குத் தோன்றியது.

                   

                 
                  எதேச்சயாக தூக்கம் கலைந்து விழுத்து விடியற்காலை ஒன்றில் தன் வீட்டு மாடியிலிருந்து மலையைப் பார்த்த நண்பர் ஏதோ தோன்றியவராக முதல் புகைப்படத்தை சில வருடங்களுக்கு முன் எடுத்தார்.பிறகு தொடர்ந்து தன் அன்றாட வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது அம்மலையை புகைப்படம் எடுக்க அவர் தவறுவதில்லை.கிட்டத்தட்ட அது தனக்கு வழிபாடு போல ஆகிவிட்டது என்றார்.நண்பர் நாத்திகர் என்பதால் கோவிலுக்குச் செல்லும் வழக்கமெதுவும் அவருக்கு கிடையாது.
ஒரு மொழியில் காலதேச வர்த்தமானங்களை கடந்து நிலைபேறுடையனவாக நிற்கும் இலக்கிய ஆக்கங்களும் மலைகளைப் போன்றவையே.மனிதர்களுடன் ஒப்பிடும் போது மலைகள் நித்தியமானவையே.ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அவதானத்தபடியே வந்தாலும் அவற்றின் பெருமிதத்தையோ அவதானத்தபடியே வந்தாலும் அவற்றின் பெருமிதத்தையோ சலனமின்மையையோ உறுதியையோ மெளனத்தையோ முழுக்கப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை.நம்மிடையே தொன்றுதொட்டு வழங்கி வரும் பேரிலக்கியங்களும் செவ்வியல் ஆக்கங்களும் அத்தன்மைகளைப் கொண்டவையே.புகைப்படத்திலுள்ள மலைகள் வளருவதில்லை.நம் புத்தக அலமாரியிலுள்ள நூல்களும் அவ்வாறே.அவற்றின் பக்க  எண்ணிக்கையோ அச்சிடப்பட்ட விஷயங்களோ வடிவமோ மாறுவதில்லை.எனினும் காலத்தையொட்டி பழங்கதையாகி  நிற்க வலுவின்றி எடைக்கும்ப் பெயரும் பலவற்றிற்கு மத்தியில் சில நூல்கள் மாத்திரம் தம் பொருளையும் பொலிவையும் இழக்காமல் நிலைத்திருத்திருப்பதுண்டு.அத்தைய ஆக்கங்களையே செவ்விலக்கியங்கள் (Classics) என்கிறோம்.நம் அக வளர்ச்சிக்கேற்ப அப்புத்தகங்கள் தரும் பொருளனுபவமும் மாறுவதை உணரமுடியும்.அப்போதைய நம் அனுபவத்திற்கும் பக்குவத்திற்குமேற்ப புதிய அழகுகளையும் உள்மடிப்புகளையும் அர்த்த நுட்பங்களையும் கொண்ட்தாக அவை மிளிர்வதை நாம் வியப்புடன் அறிகிறோம்.

                      

                   
               ஒரு தேர்ந்த ஆசிரியரின் வழியே வெளிப்படுவது முழுக்க முழுக்க அவனுடைய பார்வையும் எண்ணங்களும் கருத்துகளும் கற்பனையும் மட்டுமன்று.அவற்றினூடாக அம்மொழியின் கூட்டுமனமும் பண்பாட்டு நினைவுகளும் கூடவே கலந்துதான் வெளிப்படுகிறது எனும்போது காலந்தோறும் அதில் புது அழகுகளும் வெளிச்சங்களும் தோன்றுவது இயல்பானது.எனவே,செவ்வியல் தன்மையுடைய ஒரு இலக்கியப் படைப்பை வாசிப்பது என்பது ஏதோ ஒருவிதத்தில் நம்மையே நாம் மறுவாசிப்பு செய்து கொள்வதைப் போன்றது தான்.அவ்வாறு செய்கையில் தான் வாசிப்பனுவத்தை ஒட்டி நம்முள் நடைபெற்று வந்திருக்கும் வளர்சிதை மாற்றங்களை நாம் அறிந்து கொள்ளவியலும்.வளர்ந்து ஆளான பிறகு,பிழைப்பு நிமித்தம் பெருநகரத்திற்குப் பெயர்ந்துவிட்ட ஒருவன் சில சமயங்களில் வசதிகள் குறைவான போதும் பிறந்து திரிந்த சொந்த கிராமத்திற்கே திரும்ப ஏங்குவதைப் போலவே புதுப்புது வாசிப்பனுபவங்களுக்குப் பிறகும் நம் மனம் நமக்கு அந்தரங்கமான ஒரு பழைய புத்தகத்தை திரும்ப வாசிக்க ஏங்குவதுண்டு.அவ்வாறு வெவ்வேறு வயதில் வெவ்வேறு மனநிலைகளில் நான் மீளப் படித்த புத்தகம் மோகமுள்.

                      

               
               இருபத்தைந்து வருடங்கள் கடந்துவிட்டன.வாசிப்பு இடையறாத ஒரு பெரும் போதையென என்னை மூழ்கடித்திருந்த பருவம் அது.எனக்கென்று தேர்வோ நோக்கமோ எதுவுமின்றி கண்ணில் பட்டது.கைக்குக் கிட்டயது அனைத்தையும் படித்துத் தள்ளிக் கொண்டிருந்தேன்.அச்சமயம் ஒரு இலக்கிய இதழில்-கணையாழி என்றுதான் நினைவு-பல எழுத்தாளர்களிடமும் கேட்டு சிறந்த பத்து தமிழ் நாவல்கள் என்று ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தார்கள்.அநேகமாக எல்லோருடைய பட்டியலிலும் இடம்பிடித்திருந்த ஒரு பெயர் மோகமுள்.எங்கள் கிராமத்து கிளைநூலகத்தில் அப்புத்தகம் இல்லை.எனக்குத் தெரிந்த சில புத்தக ஆர்வலர்களிடம் கேட்ட போது அப்புத்தகம் பல காலமாக விற்பனைக்கு கிடைப்பதில்லை,யாரேனும் மூத்த தலைமுறையினரிடம் இருந்தால் தான் உண்டு என்று கையை விரித்துவிட்டார்கள்.உறுமீன் வருமளவு வாடிய கொக்காய் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டு வைத்தேன்.அப்போது எனது அறை நண்பன் ஒருவன் மூலம் அறிமுகமானவன் ரமேஷ்.ஜெயகாந்தனின் தீவிர ரசிகரான அவனிடம் மோகமுள் புத்தகமிருந்தது.வாங்கியவன் ஓரே மூச்சில் படித்து முடித்தேன்.காய்ச்சல் கண்டவனைப் போல அதைக் குறித்தே ரமேஷிடம் பிதற்றிக் கொண்டிருந்தேன்.


                         
                 அன்று தொடங்கி இக்கட்டுரையை எழுதி முடிக்கும் நாளது வரை இந்நாவலை ஒரே மூச்சாக தொடர்ந்தும் அவ்வப்போது விட்டுவிட்டும் நான்கைந்து தடவைகள் படித்திருக்கிறேன்.முதல் தடவை படித்த அனுபவம் மின்சாரம் பாயும் செப்புக்கம்பியை ஈரக்கையால் தொட்டுவிட்டது போலிருந்தது.நாவலின் வெளிச்சம் முழுவதையும் வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டுவிட்டதைப் போல யமுனாவின் ஆகிருதியே மனம் முழுவதும் நிறைந்திருந்தது.பார்க்கும்படியான பெண்ணிலெல்லாம் யமுனாவின் சாயலைத் தேடி ஏமாந்த பருவமாக இருந்தது அது.இரண்டாம் முறை எனது இருபதுகளின் பிற்பகுதியில் படித்த போதும் யமுனா அதே ஒளியுடன் மங்காது திகழ,கூடவே தங்கம்மாவும் தன் அபலைத்தனத்தால் இடம் பிடித்துக் கொண்டாள்.பாபுவின் தவமும் தாபமும் வாசிப்பை ஒரு இன்பமான வேதனையாய் மாற்றி விட்டிருந்தது.முப்பதுக்கு மத்தியில் மறுபடியும் படித்தபோது தான் ரங்கண்ணாவையும் ராஜத்தையும் வைத்தியையும்  பாலூர் ராமுவையும் நெருங்கிக் காணமுடிந்தது.நாற்பதைக் கடந்து பிறகு நான்காவது ஐந்தாவது முறை படித்தது.தொடர்ச்சியாக அல்லது முன்னுக்குப்பின்னாக புத்தகத்தை எடுத்துப் புரட்டி கண்ணில் படும் பக்கத்திலிருந்து தொடங்கி நாற்பதோ ஐம்பதோ பக்கம் படித்துப் போவது.இம்முறையில் நான் கண்டடைந்தது அதிகம்.பகலில் பலமுறை பார்த்து நினைவில் படிந்துபோன கோயில் தான் என்றாலும் ,இருட்டில் ஒரு மூலையில் ஏற்றிவைத்த எண்ணெய்  விளக்கில் காணுகையில் புதிதாய் ஒரு சிற்பம் அதன் தனியழகுடன் பார்வைக்குத் துலங்குவதே போல சிறிதும் பெரிதுமாய் பல திரையசைவுகளையும் அதனூடாக நுட்பமாக இழைந்த பல கோலங்களையும்  என்னால் காணமுடிந்தது.

                       


                     
   
                இந்நாவல் நேரடியாக அச்சுக்கு வரும் வகையில் ஒரே சீரான நோக்கில் எழுதப்பட்டது அல்ல.மாறாக ஒரு வார இதழில் தொடர்கதை வடிவில் சில வருடங்கள் தொடர்ந்து வெளியாகிப் பின்னர் நூலாக்கம் பெற்றது.எனவே இதன் கட்டுமானத்தில் அதற்கேயுரிய பலம் பலவீனம் இரண்டும் சேர்ந்தே காணப்படுகிறது.சுமார் அறுநூற்று சொச்சம் பக்கங்களைக் கொண்ட இந்நாவல் அப்போது வெளியானவற்றிலேயே ஆகப் பெரியது ஆகும்.அன்றைய போக்கான இறுக்கமும் செறிவும் கூடிய சிறிய வடிவத்திற்கு மாறாக இந்நாவல் விரிந்து பரவிச் செல்லும் வகையினதாக நிதானமான கூறுமுறையைக் கொண்டிருந்தது.கதையின் மையச்சரடுக்குப் புறனான பல சிறு விஷயங்களைக் கூட அவற்றின் முழு விவரணைகளோடு விளக்கிச் செல்வதில் ஆர்வமுடையவராகக் காணப்படுகிறார் தி.ஜானகிராமன்.தொடக்கத்தில் படித்த போது ,இத்தகைய விவரணைகள் நாவலின் ஓட்டத்திற்கு வேகத்தடைகளாக அமைந்து விட்டிருக்கின்றன என்பது போன்ற ஒரு மனப்பதிவே என்னிடம் இருந்தது.வேண்டாத சில பகுதிகளை நீக்கிவிட்டு இந்நாவலை செம்மையாக்கம் செய்து வெளியிட்டால் இன்னும் கச்சிதமான வடிவத்தை பெறும் என்று கூட சிலர் கூறியுள்ளனர்.ஆனால் இவையெல்லாம் இலக்கிய ஆக்கத்தை வெறும் ஒரு மோஸ்தர் , பாணி எனக் குறுகலாகப் புரிந்துகொள்வதால் எழும் அபிப்பிராயங்கள் மட்டுமே.

                     
                 எந்தவொரு இலக்கிய ஆக்கமும் மொழியில் வடிவம் கொள்ளும் போது முழுக்க முழுக்க எழுதுபவனின் புறமன தர்க்கத்திற்கு உட்பட்டதாக மட்டுமே அமைவதில்லை.சில சமயங்களில் எழுதியவனே அவ்வளவு தெளிவாக விளக்கவியலாத சில குழப்பமான பகுதிகளும் கதைப் போக்கிற்கு சம்மந்தமற்றதாகத் தோன்றும் சில விஷயங்களும் கூடுதல் விவரங்களும் ஒரு படைப்பில் வெளிப்படுவது என்பது இயல்பான ஒன்றே.அவ்வாறான பகுதிகள் நமது மேலெழுந்த வாரியான வாசிப்பிற்கு நாவலுக்கு புறம்பான விஷயங்களாகத் தென்படலாம்,என்றாலும் அவை அவ்வெழுத்தாளனின் அகத்தில் உருப்பெற்று படைப்பாக்கத்தின்போது தன்னெழுச்சியாக வெளிப்பட்டவை என்பதால் அவற்றிற்கு நாமறியாத ஆழ்மனத் தொடர்பு ஏதேனும் இருக்கக்கூடும்.அவை தொடர்ந்த வாசிப்பில் பிறிதொரு தருணத்தில் நமக்கு பொருள் தருவதாக அமையலாம்.உதாரணமாக இந்நாவலில் யமுனா அறிமுகமாகும் காட்சியைச் சுட்டலாம்.கோவிலுக்குப் போகும் நோக்கத்தோடு வரும் பாபு அம்மன் சந்நிதி திறக்க தாமதமாகும் எனக் கேள்விப்பட்டு அதுவரை எங்கு காத்திருப்பது என்று தெரியாமல் திரும்பும் போது தான்,துக்காம்பாளையம் தெருவிற்குள் நுழைந்து யமுனா வீட்டிற்குப் போகிறான்.முதலிரண்டு முறை வரையிலும் படிக்கும் போது ஒரு சாதாரணமான தகவலாகக் கருதிதான் அதைக் கடந்து போயிருந்தேன்.மூன்றாவது முறை படிக்கும் போது தான் கோவிலுக்குப் பதிலாக வீடு என ஏதோ நினைவில் இடறத் தயங்கி நின்றேன்.அம்மன் சந்நிதி நடை திறக்காததும் அதற்குப் பதிலாக பாபு யமுனாவை சந்திக்கப் போனதும் எதேச்சை போல காட்டப்பட்டிருந்தாலும் எதேச்சையல்ல.பாபுவின் மனதில் பதிந்திருக்கும் பாதம் யமுனாவுடையதுதான்.பாபுவிற்கு அவள் தான் அம்மன்.இந்த நுட்பமான ஒப்புமையை தி.ஜா எந்த தனிப்பட்ட பிரயத்தனமுமின்றியே மிகச் சாதாரணமாக போகிற போக்கில் எழுதிக் காட்டிவிட்டுப் போகிறார்.

                      தவிரவும் ஒரு நாவல் என்பதன் மொத்த அனுபவத்தோடு ஒப்பிடுகையில் அதன் கதை என்பது ஒரு சாக்குதான்.அதையொட்டியும் வெட்டியும் கதாசிரியன் உருவாக்க முயலும் உணர்வு நிலைகள்,அழகியல் கூறுகள் , மொழிநயம் மற்றும் தருக்க சிந்தனைகள் ஆகியவற்றின் தொகுப்பே நமது வாசிப்பனுபவமாக விரிகிறது.அத்தகையதொரு அற்புதமான அனுபவத்தைத் தருவதாலேதான் வெளிவந்து ஐம்பதுக்குமதிகமான ஆண்டுகள் கடந்த பின்னும் இந்நாவல் தனக்கான புதிய வாசகர்களைத் தொடர்ந்து கண்டடைந்து வருகிறது.

                      

               
              விலங்கு நிலையினின்றும் விலகி பரிணாமத்தின் பாதையில் வெகுதூரம் பயணித்து வந்துவிட்ட போதிலும், மனிதனை அலைக்கழிக்கும் அடிப்படையான இச்சைகள் இரண்டுண்டு பசியும் காமமுமே அவை.ஒரு நாகரீக மனிதனின் நடத்தையை தீர்மானிப்பது இவ்விச்சைகளின் இயல்பான நிறைவேற்றம் அல்லது அவற்றின் மீதான அம்மனிதனின் ஆளுமைத்திறன் என்று நவீன உளவியல் நமக்குக் கற்பிக்கிறது.ஒரு நாவலாக எழுதப்பட்டிருக்கும் மோகமுள் புனைவின் வழியாக ஆராய முயல்வதும் அவ்வாதார இச்சைகளில் ஒன்றான காமத்தைக் குறித்து தான்.என்றாலும் அதை அவ்வளவு எளிதாகப் பொதுமைப்படுத்திவிட முடியாது.பாபு தன்னை விட எட்டுவயது மூத்தவளான யமுனாவின் மீது கொள்ளும் காதலும் காமமுமே இந்நாவலின் மையம்.இதுவொன்றும் புதிதோ அல்லது மனித இயற்கைக்கு விரோதமானதோ அல்ல.விதியாக அங்கீகரிக்கப்படவில்லை எனினும் விதிவிலக்காக கைக்கிளை,பெருத்திணை என்ற வகையில் நம் மரபில் அனுமதிக்கப்பட்ட விஷயமாகவே காணப்படுகிறது.தன்னுடைய சிறுகதைகளில் மனித மனதின் வெவ்வேறு முகங்களை அது அணிந்து அழகு பார்த்துக் கொள்ளும் விதவிதமான முகமூடிகளைப் பற்றியெல்லாம் ஆராய்ந்திருந்தாலும் தி.ஜா தன் நாவல்களில் அனைத்திலுமே முயன்று பார்த்திருப்பது ஒரே ஒரு விஷயத்தை குறித்து தான்.ஆண்-பெண் உறவு என்ற அந்த ஆதிப்புதிரை விடுவிக்கவியலாவிட்டாலும் விளங்கிக் கொள்ளவாவது முடியுமா என்பதே அவரது கரிசனமாக இருந்தது.அதனாலேயே அவருடைய பெரும்பாலான நாவல்களின் கரு சுருதிக்கு மீறீய ஒன்றாகவே இருந்தாலும் அது அபஸ்வரமாகவோ ஆபாசமாகவோ நமக்கு தொனிப்பதில்லை.

                     
         

           இந்நாவலின் உருவத்தை நிர்ணயிக்கும் முகமாக இதற்குள் ஊடுபாவிச் செல்லும் நாலாவிதமான கூறுகளிலும் ஆதாரமானதென மூன்று இழைகளைப் பிரித்துக் காட்டலாம்.முதலாவது யமுனாவின் மீதான பாபுவின் பக்தியும் மோகமும்.இசை மீதான அவனது ஆழமான பற்றுதல் இரண்டாவது தன் தந்தை வைத்தி,சிநேகிதன் ராஜம்,குரு ரங்கண்ணா முதலியோரிடம் அவனுக்கிருந்த நெகிழ்ச்சியான நேசம் மூன்றாவது.இவ்விழைகள் மூன்றும் சிக்கலோ முடிச்சுகளோ ஏதுமின்றி ஒன்றுக்கொன்று அனுசரணையாக நாவல் நெடுகிலும் இழைந்தோடுகிறது.

                     

              

                 முழுக்க முழுக்க பாபுவின் கண்ணோட்டமாகவோ விரியும் நாவலில் பிற பாத்திரங்களின் பார்வை எதுவும் அவ்வளவாகக் குறுக்கிடுவதில்லை.குறிப்பாக யமுனா,பாபுவின் இறைஞ்சுதலுக்கு,பக்திமயமான சமர்ப்பணத்துக்கு அவளுடைய எதிர்வினை என்ன என்பது அவளுடைய நோக்கில் நாவலில் முன்வைக்கபடுவதே இல்லை.பாபு தன் விருப்பத்தைத் தெரிவிக்கும்போது முதலில் “வேண்டாம் பாபு தன்..வேண்டாம்என்கிறாள்.பிறகு ஓரிடத்தில் ‘வயசு வயசு என்று உலகம் சிரிக்கும்.என் பந்துக்கள் சிரிப்பார்கள்.அந்த சிரிப்புக்கெல்லாம் நீ ஆளாகமல் இருக்கணும்என்கிறாள்.கடைசியாக பாபுவின் விருப்பத்திற்கு இணங்கும் போது “உன்னைத் திருப்தி செய்யறது தான் என் கடமை.எனக்கு அது தான் ஆசை.ஆனால் எனக்கு ஒன்றிலும் ஆசையில்லை.உன் திருப்திக்கு தான்என்றே சொல்கிறாள்.இவையெல்லாமே பாபுவின் வேண்டுதலைத் தட்ட முடியாமல் அவள் உதடுகள் உச்சரித்தவை.ஆனால் அவள் உள்ளம் சொல்ல நினைத்தது அல்லது சொல்லாமல் அழித்தது எதுவும் நாவலில் இல்லை.யமுனாவைச் சுற்றிலும் தி.ஜா படரவிட்டிருக்கும் இந்த அர்த்தபூர்வமான மெளனம் அல்லது திரை அவளுக்கு ஒரு மர்மமான அழகைக் கூட்டிவிடுகிறது.



                தன்னுடைய மதிப்பிற்கும் தொழுகைக்குரிய,தன்னுவிடவும் மூத்த பெண்ணை பாபு நேசிப்பது என்பதுதான் நாவலின் மையமான முரண்.இது ஏற்கனவே குறிப்பிடப்பட்டது  போல நமது நடைமுறை வாழ்வில் அவ்வளவாகக் காணப்படுகிற (அ) ஒப்புக்கொள்ளப்படுகிற விஷயம் அல்ல.பாபு தன் நெஞ்சை நண்பன் ராஜத்திடம் திறந்து காட்டும்போது அவனால் கூட அந்த நிஜத்தை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.இது பின்னோக்கி போய்விட்டாற் போலிருக்கிறது.என்றே கூறுகிறான்.அத்தியந்த நண்பனாலேயே ஒப்புக்கொள்ளவியலாத அத்தகைய விஷயத்தை இந்த உலகம் எப்படிக் கோணலாகப் பார்க்கும் என்பதைப் பற்றி நாவலாசிரியர் சிற்சில தருணங்களில் கோடிகாட்டினாலும் அதைப் பற்றி பெரிதாக அக்கறைப்படவில்லை.மாறாக தன் அந்தரங்கத்தில் பாபு அந்த உண்மையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை குறித்தே அவரது கரிசனம் மிகுந்திருக்கிறது.




                  நினைவு தெரிந்த நாளிலிருந்து யமுனா மீது தான் கொண்டிருந்த வியப்பும் பிரமிப்பும் தான் வளர்ந்து அவளின் மீதான பக்தியாக கனிந்து நிற் கிறது என பாபு நம்பிக் கொண்டிருந்தான்.ஒரு எண்ணம்,தெய்வத்தை போல-தெய்வம் என்று தான்.நான் ஸ்வாமி என்று நினைத்துக் கொள்ளுகிற போதெல்லாம் உன் முகம் தான் என் முன் வந்து நிற்கும்.உன் பாதம் தான் வந்து நிற்கும்.உன்னை சாதாரண மனித ஸ்தீரியாகவே நான் நினைக்கிறதில்லைஎன்று யமுனாவிடம் கூறுகிறான்.ஆனால் அது அரை உண்மைதான்.தங்கம்மாவுடன் விபத்து போல நிகழும் உறவினால் கலங்கிப் போன அவனது மனதின் அடியாழத்திலிருந்து அவனே தெளிவாக அறியாதிருந்த மீதி உண்மையும் மிதந்து மேலெழுந்து வருகிறது.எதற்காக இந்த இரட்டை உருவம்?ஜபம் செய்யும் போது தெய்வம் அப்புறம்..அழகான பெண்ணாக .யெளவனத்தில் அமர்த்த கோலாஹலமாக,வனப்பை மூடும் மறைவைக் கழற்றி.நினைவைக் கவ்வி,நினைவிழிந்து...ஆனால் இரண்டுமாக இருக்க முடிகிறதே இவளால்என்று மறுகுகிறான்.என்ன சொல்லியும் யமுனா அந்தக் காதலை ஏற்கப் பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள்.குரு ரங்கண்ணாவும் காலமாகிவிட மனம் கசந்த பாபு மதராசுக்கு வந்துவிடுகிறான்.பிரிவால் அந்த நினைவு கலைந்து போகவில்லை.மாறாக,இறுதித் திடம் பெற்று விடுகிறது.ஏறத்தாழ எட்டு வருடங்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு நாள் யமுனா அவனைத் தேடி வருகிறாள்.பாபுவின் ஏக்கமும் தவிப்பும் நிறைவேறுகிறது.பாபுவின் இலட்சியமான இசையில் பயிற்சி பெற யமுனாவைப் பிரிந்து பாபு பயணப்பதோடு நாவல் முடிகிறது.


                 முன்னரே சொல்லப்பட்டது போல இந்நாவல் முழுவதும் பாபுவின் கண்ணோட்டத்திலேயே விவரிக்கப்படுகிறது.தனது வாழ்க்கையில் அடைவதற்கு பாபுவிற்கு இரண்டு லட்சியங்கள் உள்ளன.ஒன்று அவனுக்கு இயற்கையாகவே அமைந்துவிட்ட இசையறிவை விருத்தி செய்து கொண்டு அவனது தந்தையின் ஆசைப்படி ஒரு இசைக்கலைஞனாவது.மற்றொன்று அவனது மனப்பூர்வமான காதலை யமுனாவிடம் அர்பணித்துவிடுவது.உருவம் அல்லது அருவம் பற்றி இந்து மரபில் இருக்கும் ஒரு கருத்து அல்லது நம்பிக்கையை இவ்விடத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.இறைசக்தி என்பது எங்கும் நிறைந்திருப்பது.அளவிடமுடியாதது.அருவமானது.ஓரளவு விழிப்பு நிலையை அடைந்த மனங்களால் மட்டுமே அதன் இருப்பை உணரமுடியும்.ஆதலால் அருவ வழிபாடு என்பது சாமன்யர்களுக்கு சாத்தியமற்றது.அவர்களும் இறைநிலையை உணர வேண்டும் என்பதற்காகவே உருவவழிபாடு என்ற ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.அருவமான இறைவனின் உருவை மக்கள் தம் சொந்தப் பண்பாட்டு அடையாளங்களுக்குத் தக உருவாக்கி அதனை வழிபடுகிறார்கள்.ஆகவே  அருவ நிலையை உணர ஒரு பிரதட்சய சாதனமானக உருவ வடிவிலான விக்ரகங்கள் உதவுகின்றன.பாபுவின் மனதில் இசையில் அடைய வேண்டிய உச்சம் பற்றிய சங்கல்பம் ஒரு நிழல் போல மங்கலாகத்தான் அடியில் கிடக்கிறது.அருவமான அந்த இலட்சியத்தை அடையத் தேவையான ஊக்கத்தையும் உறுதியையும் யமுனா என்ற விக்ரகத்தை வழிபடுவதன் வாயிலாகவே அவன் அடைகிறான்.



              பாபுவின் வழிபாட்டு உணர்வை,மோகத்தை உன்னதம் மற்றும் முழுமைக்கான மனிதப்பிரக்ஞையின் தவிப்பு எனக் கொண்டால்,அப்பிரக்ஞையில்லாத இப்பெருவெளியினின்றும் அள்ளி எடுத்துக் கொள்ள முடிந்த அழகு மற்றும் ஆனந்தத்தின் குறியீடாக நாம் யமுனாவைப் பார்க்கலாம்.அளவிடமுடியாததான மயக்கத்தைத் தருவதாகவும் அதே சமயத்தில் பிரயாசைப்பட்டு அள்ளி எடுத்தால் கைக்குள் அடங்கக்கூடியதுமான இருமை நிலை என்பதை யமுனாவின் பாத்திர வார்ப்பில் காணலாம்.அவள் பாபுவிற்கு ஒரு சமயம் பக்தி செலுத்திவதற்குரிய தெய்வீகத்தின் உருவாகவும் மறுசமயம் மோகத்திர்குரிய வனப்பான பெண்ணாகவும் தோன்றுகிறாள்.பாலூர் ராமு ,பெரியப்பா மகன் சங்கு போன்ற உதிரிக் கதாபாத்திரங்கள் கூடத் தெளிவாக உருக்கொண்டிருக்கும் இந்நாவலில் அவனது அம்மாவின் உருவம் ஏன் தெளிவின்றி மிக மங்கலாக ஒரு நிழலைப் போலத் தோன்றுகிறது என்பதையும் நாம் யூகிக்க வேண்டியுள்ளது.




                கடைசியாக பிரிந்து மங்கள்வாடிக்குப் போவதற்கு முன்பாக யமுனா பாபுவை காஞ்சிபுரத்திற்கு அழைத்துச்செல்கிறாள்.அங்கே கால் ஓயும் மட்டும் தெருதெருவாக கோயில் கோயிலாக அலைகிறார்கள்.கடைசியாக காமாட்சியம்மன் சந்நிதியிலிருந்து திரும்புகிறார்கள்.பெயருக்குத் தகுந்தாற் போல அவளைக் கல்லில் வடித்திருந்தான் சிற்பி.அதை பார்க்கப் பார்க்க என்னவோ செய்தது பாபுவுக்கு.மேலே போவதற்கு கூட இந்த வழியாகத் தான் போக வேண்டும் போலிருக்கிறதுஎன்கிறான் யமுனாவிடம்.ஒரு விதத்தில் இவ்வாக்கியத்தை தி.ஜா நாவல்களினுள் ஒருவர் நுழைவதற்கான வாயில் என்று கூட சொல்லலாம்.அவருடைய நாவல்களில் பிரதான கதாபாத்திரங்களில் பெரும்பாலானோர் இந்த வழியைக் கடக்க விரும்பி,முயன்றும் முடியாமல் அடைத்த கதவின் முன் நின்றபடி,தத்தமது குற்ற உணர்வுகளோடு கிடந்து தவிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.இன்னும் சற்றே விரித்து விளக்கப்போனால் தி.ஜாவின் இந்த காமம் வெறும் உடல்வனப்போடு மட்டும் முடிந்துவிடுவதாகத் தெரியவில்லை.மண்ணை,அதில் உழலும் மனிதர்களை,அவர்தம் குணபேதங்களை,இயற்கையை,இசையை என்று வாழ்வின் அம்ச்ங்கள் எதுவொன்றையும் விலக்கின்றி அள்ளி அணைத்துக்கொள்ள விழையும் ஒரு வேட்கையாக,அழியாத ரசனையாக அக்காமம் உருமாறி அவரது எழுத்துக்களில் மிளிர்கிறது.

              


            ஜானகிராமனின் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முதன்மையானது அவரது பெண் பாத்திரங்களின் வார்ப்பு குறித்தது.அப்பெண்கள் படித்த மேல் மத்தியதரத்து மேல் ஆண்களின் பகல்கனவுகளில்,கற்பனையில் உருவாகும் ஓவியம் போன்றவர்கள்.எதார்த்தத்தில் உயிருடன் நடமாடுபவர்கள் அல்லர் என்பதோடு பெண் உடலை போகத்திற்கான கருவியாக மட்டும் நோக்கும் மரபான ஆண் மைய நோக்கு அவற்றில் வெளிப்படுகிறது என்ற புகாரும் அதனுள் அடங்கும்.இதில் ஓரளவு உண்மையிருந்தாலும் அவர் அப்பாத்திரங்களைப் படைத்திருக்கும் கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துதான் இவ்விமர்சனத்தை பரிசீலிக்க வேண்டும்.குறிப்பாக இந்நாவலையே எடுத்துக் கொள்ளலாம்.இதில் யமுனா மட்டுமல்ல பாபுவின் தந்தை வைத்தி,நண்பன் ராஜம்,குரு ரங்கண்ணா,யமுனாவின் தாய் என எல்லோருமே அப்பழுக்கற்ற குணவார்ப்புடையவர்களே.லெளகீகத் தேவைகளுக்காக உடலுழைப்பு மேற்கொள்ளத் தேவையில்லாத மத்திய தர வாழ்க்கைதான் இக்கதையின் பின்னணி.யமுனாவைப் பெண்பார்க்க வரும் கோயமுத்தூர் போஸ்ட் மாஸ்டர்,தங்கம்மாவின் கணவரான தலைமைக் குமாஸ்தா,ய்முனாவின் தாயைப் பற்றி அவதூறாகப் பேசும் கிழவர் போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டால் மொத்த நாவலிலுமே தொனிப்பது ஒரு நேர்மறையான நோக்கு தான்.எதார்த்த வாழ்க்கையில் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்வி இயல்பாகவே ஒருவருக்குத் தோன்றாலாம்.ஆனால் மொத்த நாவலுமே உருக்கொள்ளும் களம் பாபுவின் மனம் தான்.அவனுடைய எண்ணவோட்டத்தின் வழியாகவே கதை  விவரிக்கப் படுகிறது.கதையின் காலம் அவனது இருபதிலிருந்து இருபத்தெட்டு வயது வரைக்குமான எட்டு ஆண்டுகள்.

               கனவுகளும் இலட்சியங்களும் உத்வேகமும் தலைக்குள்ளே குமிழியிட்டு நுரைக்கும் பருவம்.அப்பருவத்தில் அவனது பார்வையில் நின்று பார்க்கையில் நாவல் முழுவதுமே நடைமுறை யதார்தத்தைச் சார்ந்ததாகவும் நம்பத்தன்மை உடையதாகவுமே தோன்றும்.நிறைவேறாத தாபத்தின் பின்னணியில் ஒரு ஆணுக்கு அவன் மனம் கவர்ந்த பெண் கொள்ளும் தோற்றம் என்பது புதிரும் வசீகரமும் கொண்ட ஒன்றாகவே இருக்கும்.எனவே பாபு போன்ற ரசனையும் நுட்பமும் கற்பனையும் கொண்ட இளைஞன் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மைதான் யமுனா போன்ற பெண்ணும் எனலாம்.


               தவிர மோகமுள் எழுதப்பட்ட பின்னணிபற்றி தி.ஜா நாவல் பிறந்த கதை என்றொரு கட்டுரை எழுதியுள்ளாற்.அதில் அவரைவிட எட்டுவயது மூத்த அமைதியும் புத்திக்கூர்மையும் அழுத்தமும் அழகும் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.அப்பெண்ணின் சாயலில் பிறந்தவள் தான் யமுனா.அக்கட்டுரையிலேயே நாவலுக்கான விஷயங்களைத் தந்தவள் என்றொரு கண்ணாடிப் பாட்டியைப் பற்றிக் கூறுகிறார்.காவிரி வணடலில் செழித்த பயிர் அவள்.பேச்சில் அசாதரணமான நயம்,நகைச்சுவை,சுருக்கென்று தைக்கிற கூர்மை,சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்கிறாள் என்று லேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம்,சொல்லாமல் சொல்கிற தொனி,எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை,பாட்டி ரொம்ப பெரியவள். இவை அத்தனையும் தி.ஜா எழுத்துக்கும் பொருந்தும்.



                  ஜானகிராமனின் எழுத்துக்களில் குறிப்பிடப்படவேண்டிய மற்றொரு விஷயம் அதன் மண் மணம்.காவேரி பாயும் கும்பகோணம் தஞ்சாவூர் பிரதேசத்தின் வளத்தையும் வாசனையையும் அவருக்கு சொல்லித் தீருவதில்லை.இந்நாவல் துவங்குவதே அத்தகைய ஸ்தல மகாத்மிய வசனத்தோடு தான்.அது இயற்கை வருணணை ஆகட்டும்,ஊர்,தெரு,வீடுகள்,கோவில் விவரணை ஆகட்டும்.பாத்திரங்களின் உருவ,குண சித்தரிப்பாகட்டும்,நாலுக்கு பத்து வாக்கியமாக எழுதாமல் தீராது அவருக்கு.அதற்கு நேர்மாறாக உரையாடல்களில் குறிப்பாக ஆண்-பெண் உறவு சம்பந்தப்பட்ட இடங்களில் மிகுந்த சிக்கனமும் நுட்பமும் தேர்ச்சியும் கொண்டவராகயிருப்பதையே காண்கிறோம்.அச்சந்தர்ப்பங்களில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் முகத்திரையை ஒத்தவை.ஒரு பாதியை வெளிக்காட்டும் அதே சமயத்தில் மறுபாதியை மறைத்து வைக்கும் தன்மை படைத்தவை அவை.இலக்கியத்தில் உரையாடலை அமைப்பது ஒரு கலை என்றால் தமிழில் அதன் உச்சத்தை அடைந்தவர் என ஜானகிராமனைச் சொல்லலாம்.எட்டு வருட பிரிவுக்கு பிறகு சந்தித்த போது பாபு திரும்பவும் யமுனாவிடம் கேட்கிறான்.

“நீ தான் வேணும்.


“உன்னை திருப்தி செய்யறது தான் என் கடமை.எனக்கு அதுதான் ஆசை...ஆனால் எனக்கு ஒன்றிலும் ஆசை இல்லை.


“இப்பதான் இல்லையா?


“இப்ப இல்லை.இருந்ததுண்டு.ஆனா ராவும் பகலுமாகத் தவிச்சு நசுக்கிட்டேன்.எல்லாத்தையும் அப்படி சுலபமா நசுக்கக்கூடிய சக்தி இல்லை.வேறு என்ன செய்யறது?தலையெடுத்து தலையெடுத்து மறுபடியும் ஆடுவதைப் பிடிச்சு நசுக்கி காலால் மிதிச்சு தேச்சு வந்தேன்.இப்ப உசிர் இல்லாமல் கிடக்கும்.


“உயிரில்லாத பொருளையா என்னிடம் கொடுக்கிறாய்?


நீ தான் உயிர் கொடேன்.


உணர்வுகளுக்கு உயிர் தரும் விதமாய் நாவல் நெடுகிலும் ஆங்காங்கே இது போன்ற வரிகள் இயல்பாய் ஒளிரக் காணலாம்.


                     தி.ஜா.எழுத்துகள் எவ்வித முயற்சியும் இன்றியே ஒரு கலையாக மாறுவதன் பின்னணியில் உள்ள காரணங்களில் ஒன்று அவருடைய பாத்திர உருவாக்கம்.ஒரு தேர்ந்த சித்திரக்காரனைப் போல சிற்சில கோடுகளிலேயே ஒரு பாத்திரத்தை அதன் தனித்துவமான குணாம்சத்தோடும் அடையாளத்தோடும் அவரால் உருவாக்கிவிட முடிகிறது.கும்பகோணத்தின் ஸ்தல மகிமையைச் சொல்லி நாவலை சம்பிரதாயமாகத் தொடங்கி வைப்பவர் மேலக்காவிரி சாஸ்திரிகள்.அவர் நெற்றி உச்சியில் பளபளத்த காயத்தின் வடுவைப்போல அவர் உதட்டில் தங்கியிருக்கும் சிரிப்பு என்று ஒரே வரியில் அவரது உருவத்தைத் தீட்டிக்காட்டி விடுகிறார் தி.ஜா.யமுனாவின் தந்தை சுப்ரமணிய அய்யர் மறைவிற்காக கிராமத்துக்குச் செனறிருக்கும் போது பார்வதியைப் பற்றி இருட்டில் அவதூறாகப் பேசும் கிழவர் வெறும் குரல்வழியாகவே உருவாகிப் பின் மறைந்து போகும் நுட்பத்தைக் காணலாம்.பாலூர் ராமுவின் சிஷ்யன் ஒருவனைப் பற்றிய விவரணை இது.உடம்பில் ஒரு அடிமைக்கூனல்.வாயில் பஞ்சை இளிப்பு.பாபு சொல்வதற்கெல்லாம் புருவத்தை உயிர்த்திச் சிரிக்கிற ஒரு ஆச்சரிய பாவம்.சங்கீத சூழ்நிலையிலேயே ஊறின மட்டை.இந்த உயிரோட்டமும் நுண்மையான செதுக்கல்களும் சேர்ந்து தான் அவருடைய அவ்வளவாக முக்கியத்துவமற்ற சின்னஞ்சிறு கதாபாத்திரங்களைக் கூட நினைவில் அழியாது நிறுத்திவிடுகிறது.



                 எதற்காக எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு ஜானகிராமன் சொன்ன பதிலில் அதில் அடுத்தவன் மனைவியைக் காதலிக்கிற இன்பம் இருக்கிறது என்ற ஒரு வரி முக்கியமானது.உலக நடப்பு,சமூக ஒழுங்கு அவற்றின் சம்பிரதாயமான கட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை மீற முயலும் தனிமனித மனதை,அதன் நியாயத்தைப் பேச எத்தனிக்கையில் அவருடைய படைப்புகள் நவீனத்துவத்தின் சாயலைப் பெற்றாலும் அது சார்ந்து அவருக்குள் ஆழ்மனம் வேரோடியிருக்கும் கீழைத்தேய மதிப்பீடுகளை முன்னிட்டே உருவாகின்றன எனலாம்.தவிரவும் தி.ஜா கதை சொல்லக் கையாளும் நெகிழ்ச்சியான நடைப்பாங்கு நவீனத்துவ வரையறைக்கு புறம்பானது.



                 
           முழுக்க முழுக்க ஒரு கற்பனைவாதப் படைப்பாக மாறி விண்ணில் ஏறி மிதந்து போக்கூடிய விபத்திலிருந்து தி.ஜாவின் நாவலை தடுத்து இத்தரையோடு சேர்த்துப் பிணைக்கும் தன்மை ஒன்றும் அவர் எழுத்தில் கலந்திருக்கிறது.அவருடைய கதைமாந்தர்களின் எண்ணவோட்டமாக வெளிப்படும் உணர்வு மேலிட்ட நெகிழ்ச்சியை சமன்செய்யும் விதமாக மிகக் கறாரான நடப்பியல் நோக்கு ஒன்று அவருடைய படைப்புகளில் உள்ளோடி வரும்.யமுனாவைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் பாபு,இதுவரையில் இவ்வளவு அழகான பெண்ணைப் பார்த்தது இல்லை என்று பிரமித்துப் போகிறான் ராஜம்.அதை அவன் சொல்லி முடிக்கும் திருவையாற்றிலிருந்து வரும் பஸ் ஒன்று புழுதியை வாரி இறைத்துவிட்டுப் போகிறது.இருவரும் துண்டால் மூக்கையையும் வாயையும் பொத்திக் கொள்கிறார்கள்.அழகின் உச்சத்தை தொட்டுக்காட்டிய மறுகணம் நம் மனதை தரைப்புழுதிக்கு இழுக்கும் இந்த பட்டவர்த்தனமான பார்வை,எல்லாவற்றையும் சமநிலைக்கு நகர்த்தி நாவலுக்கு நம்பகத்தன்மையை,யதார்த்த தளத்தைத் தருகிறது.
ஒரு பெரிய நாவலுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விரிவான காலநீட்சியோ,பரத்து பட்ட முரண்,தர்க்க ஒழுங்கமைவோ ,பல குரல் தன்மையோ,சார்பற்ற பார்வையோ இந்நாவலில் இல்லை.மாறாக ஒற்றைப் படையான கதைப் போக்கும் உணர்ச்சிகரமான நடையும் உள்ளுணர்வு சார்ந்த மனவெழுச்சிகளையும் கொண்டதாக தளர்வானதொரு வடிவத்திலேயெ இந்நாவல் அமைந்திருக்கிறது.என்ற போதிலும்,இது மங்காதது.உலக நடப்பில் நாம் கேட்கவோ பார்க்கவோ நினைக்கவோ செய்த ஏதோ ஒன்றின் சாராம்சமாகவோ குறியீடாகவோ பதிலியாகவோ இந்நாவல் அமைந்திருக்கவில்லை.மாறாக தனது அனைத்து பலவீனங்களுடனும் கூட ஒரு அசலான இலக்கிய ஆக்கமாக,தன்னளவில் முழுமையான ஒரு இருப்பாக இது உள்ளது.அதனாலேயே இந்நாவல் தரும் அனுபவமென்பது அலாதியான ஒன்றாக அமைகிறது.நமது புத்தியை திகைக்கவும் வியக்கவும் வைக்கக்கூடிய எழுத்துகள் சில தமிழில் உண்டு.ஆனால் அவை அளிக்கவியலாததொரு ரசானுபவத்தை,தன்மறதியை இந்நாவல் நமக்குத் தருகிறது.நாவலின் தொடக்கத்தில் மேலக் காவேரி சாஸ்திரி சொல்கிறார்.இராமசாமி கோயிலேயே ஒரு தூணைப் பார்க்கிறவன் இந்த ஊரின் ஏமாத்தத்தையும் நாத்தத்தையுமா நினைச்சுக்கிட்டிருக்கப் போறான்?இதையே சற்று மாற்றி இந்த நாவலுக்காகவும் பொருத்தலாம்.இதன் ஏதோ ஒரு அத்தியாயத்தில் மனம் கரைந்து நிற்கிறவள் இதன் போதாமைகளையும் பலவீனங்களையும் எங்கே கவனிக்க போகிறான்?

***********************************

க.மோகனரங்கனின் ”மை பொதி விளக்கு என்னும் கட்டுரை நூலிலிருக்கும் முக்கியமான  கட்டுரை.கவிதைகள் பற்றியும் பிற ஆக்கங்கள் குறித்தும் மோகனின் நுட்பமான அவதானிப்பும் தேர்ந்த சொல்லாட்சியும் கொண்ட கட்டுரைகளை உள்ளடக்கிய குறிப்பிடத் தகுந்த நூல் இது.