Friday, October 4, 2019

இரண்டு பேட்டிகள்





(கே.என்.செந்திலின் 'அரூப நெருப்பு' தொகுப்பை முன்வைத்து)


சந்திப்பு: சங்கரநாராயணன், .ராஜன்


கேள்வி: தற்காலத்தில் வெகுஜன எழுத்திற்கும் இலக்கியத்திற்குமான இடைவெளி திட்டமிட்டுக் குறைக்கப்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. வெகுஜன எழுத்தின் தரம் இலக்கியத் தரத்திற்கு நெருங்குவதாய் இல்லை. வெகுஜன எழுத்து இலக்கியமாக முன்வைக்கப்படுகிறதோ? இந்த போக்கு குறித்து?


பதில்: இந்தக் கேள்விக்குரிய மதிப்பு காலாவதியாகி விட்ட காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் எப்போதையும் விட இன்றைய காலகட்டத்தில் தான் இக்கேள்வி தீவிரமாக எழுப்பப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல அது சார்ந்த கூர்மையான உரையாடல்கள் நிகழ வேண்டும் என விரும்புகிறேன்.

ஒரு பொழுதுபோக்கியை (Entertainer) எழுத்தாளராகக் கருதிய சூழலிலிருந்து தான் இந்தக் கேடுகள் தொடங்குகின்றன. சாரு நிவேதிதாவும் அவரதுதத்துப் பிள்ளைகளுமே இவை இரண்டிற்குமான அகண்ட இடைவெளியை அழிப்பதில் பிரதானமானவர்கள். அராத்து, சரவணன்சந்திரன் போன்றோரை படைப்பாளிகளாகக் கருதும் சூழல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இருந்திருக்குமா? பட்டுக்கோட்டை பிரபாகருக்கு இலக்கியத்தில் என்ன இடமோ அதுவே இவ்விருவரின் இடமும். இந்த இருவரைக் குறித்து மட்டுமல்ல, ஜி.கார்ல் மார்க்ஸ், கணேசகுமாரன் போன்ற மேலோட்டமான எழுத்தாளர்களையும் கூட சாரு விதந்தோதியிருப்பதைக் கண்டால் முகச்சுளிப்பும் குமட்டலுமே மிஞ்சும், கூடவே லஷ்மி சரவணகுமாரையும்


விநாயக முருகன், ஆத்மார்த்தி போன்ற மொழியைக் கையாளத் தெரியாத இலக்கியம் கிஞ்சித்தும் கைவரப்பெறாத நபர்கள் சூழலை மாசுபடுத்துகிறார்கள். இவர்களின் பெரும்பாலானோரின் பதிப்பாளர் என்ற அளவில் இந்தக் கேட்டிற்கு முக்கியமான காரணகர்த்தராக மனுஷ்யபுத்திரனைச் சொல்வேன். .முருகேச பாண்டியன் போன்றஇலக்கிய விமர்சகர்கள்இவர்களின் நூல் குறித்து விளம்பும் சொற்களையும் பரிந்துரைக்கும் பெயர்களையும் கண்டால் அவை அவரைக் குறித்து இருந்த பழைய மதிப்பீடுகளை விரட்டி அடிக்கின்றன. மேலும் இலக்கியமே அல்லாத ஒன்றை இலக்கியமாக முன்நிறுத்தும் போக்கும் இதே கேட்டில் வந்து சேர்கிறது. சீனிவாசன் நடராஜனின்விடம்பனம்நாவலை(?) இதற்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.


இணையம் முக்கியமான ஊடகமாக ஆன பிறகு - இரண்டாயிரத்தின் மத்தியில் - இது போன்ற உள்ளீடற்றவர்கள் எதையேனும் எழுதி பிரசுரித்து இலக்கியம் என முன் வைத்தனர். தமிழில் எழுதத் தெரிந்தால் அவர் எழுத்தாளராகிவிடும் சூழ்நிலையின் தொடக்கப்புள்ளி. ஃபேஸ்புக்கில்மொண்ணைவரிகளுக்கு இடப்படும் நூற்றுக்கணக்கான விருப்பக்குறிகள் தன்னைக் குறித்த மிகுதியான கற்பனைகளுக்கு வழிகோலுகின்றன போலும். இப்படியான இடத்திலிருந்து தான் கடங்கநேரியான் போன்ற வெத்துவேட்டுபோலிக் கலகக்காரர்கள்உருவாகி வருகிறார்கள்.


மகத்தானஎன்ற சொல்லே மயக்க நிலையை அடைந்திருக்கக்கூடும். இல்லையெனில் வணிக சமன்பாடுகளுக்கு ஏற்ப தன் சரக்கை அவிழ்த்து வைத்த சுஜாதா போன்றவர்கள் எவ்வாறுமகத்தான படைப்பாளியாக ஆக முடியும்? அவர் உதிர்த்த சில தீவிர எழுத்தாளர்களின் பெயர்கள் சம்பந்தமான புல்லரிப்புகளுக்கு அளவில்லை. ஊரெல்லாம் சாராயம் காய்ச்சி விற்ற நபர் அது தந்த பெயரிலும் பணத்திலும் புகழிலிலும் சில நல்ல காரியங்கள் செய்வார். கொஞ்ச காலம் கழித்து அவரேநகரத் தந்தைஎன்றோகல்வித் தந்தைஎன்றோ அழைக்கப்படுவார். அதற்கு சற்றும் குறைந்தல்ல சுஜாதாவின் பிம்பம். அவர் நூலுக்கு நவீன அட்டையுடன் நல்ல பதிப்பு வந்தால் அவர் மகத்தானவர் ஆகிவிடுவாரா? கதர் வேட்டி, சட்டை போட்டவரெல்லாம் காந்தியவாதி என தன்னைக் கருதிக் கொள்வது போன்றது இது. ஃபேஸ்புக் எங்கும் குறைபட்ட சுஜாதாக்கள் ஆயிரக்கணக்கில் அலைகிறார்கள். இன்று அவர் இருந்திருந்தாரென்றால் தன் முகமூடி அணிந்த ஆயிரக்கணக்கான நபர்கள் தனக்கு விருப்பக்குறியிடுவதைக் குறித்து உள்ளூர விருப்பத்துடன் சுவாரசியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கக்கூடும். தீவிரமான மனநிலையுடன் உள்ளே வந்த .சீ.சிவக்குமார் போன்ற ஆட்களுக்கு கூட வெகுஜன இதழில் இடம் கிடைத்து சுஜாதா ஆகிவிட மாட்டோமா என்ற விருப்பம் தான் இருந்திருக்கிறது. சுஜாதாவின் நவீனமான உரைநடையே தமிழுக்கு தேவையானது. மற்றபடி அவரது பிம்பம் தீவிர வாசகரிடம் ஊதிப் பெருக்கப்பட்டதே.


ஏன்வாசகசாலையே இந்த இடைவெளிகளைக் குறைக்கும் செயலில் இறங்கி இருக்கிறதே! தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டையொட்டி பல அமர்வுகளை ஒருங்கிணைத்த வாசகசாலை, மகத்தான நாவல் வரிசைக்கும் அவ்வாறான கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்ததைப் பார்த்தேன். அந்த வரிசையில் திடுமென வைரமுத்துவின்கள்ளிக்காட்டு இதிகாசம்முளைத்திருந்தது. தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் நாவல்களும் மகத்தானவை, ஒன்றுக்கும் ஆகாதகள்ளிக்காட்டு இதிகாசமும்மகத்தானவை என்றால் அதன் அளவுகோல் தான் என்ன? மகத்தானவைகளின் வரிசையில் அவர் எப்போது வந்து சேர்ந்தார்? அவருக்கும் மகத்தான நாவலுக்கும் என்ன உறவு? சாகித்ய அகாதமி வாங்கியது தான் அளவுகோல் என்றால் ஞானபீடம் வாங்கிய அகிலனின்சித்திர பாவையை ஏன் தவிர்த்தீர்கள்? கோவி.மணிசேகரனை ஏன் விட்டு விட்டீர்கள்?


இக்கேள்விக்கு வேறொரு வகையில் தொடர்புள்ள விஷயமொன்றையும் இத்துடன் இணைத்தே பார்க்க விரும்புகிறேன். தமிழகத்திலும் தென்னிந்திய, இந்திய அளவிலும் உலகமெங்கும் நடந்த இலக்கிய அமர்வுகள், இலக்கிய முகாம்கள் எவ்வளவு என்று கணக்கிட்டீர்கள் எனில் அதில் ஏன் சிலர் தொடர்ந்து அழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. சல்மா போன்ற ஒருவர் கடந்த ஐந்தாண்டுகளில் மேற்சொன்ன நிகழ்வுகளில் பத்துக்கும் மேற்பட்டவற்றில் தமிழ் மொழியின் பிரதிநிதியாக பங்கேற்றிருப்பார். ஏன் அவர் மட்டும் திரும்ப திரும்ப அழைக்கப்படுகிறார்? அவ்வாறு தொடர்ந்து அழைக்கப்படுவதற்குரிய தகுதி கொண்டவர் அல்ல அவர். வேறு ஒரு எழுத்தாளாருக்கு கிடைக்க வேண்டிய இடத்தை இவர் போய் எடுத்துக் கொள்கிறார். அடைத்து விடுகிறார். இந்த முகமே நவீன தமிழிலக்கியத்தின் முகமாக புரிந்து கொள்ளப்படாதா? சல்மா முன்னிறுத்தப்படுவது தமிழ் இலக்கியம் சார்ந்த சராசரியான முடிவுகளுக்கே பிற மொழிக்காரர்களைக் கொண்டு சேர்க்கும். சோ.தர்மன் போன்ற ஒருவர் இது போன்ற இலக்கிய அமர்களிலும் முகாம்களிலும் பங்கேற்பாளராகச் செல்லக் கூடிய நேரம் எப்போது தான் வரும்?


கேள்வி: ஒரு நாவல் என்பதுகதைஎன்ற ஒன்றைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது பல்வேறு விதங்களிலும், வடிவங்களிலும் சொல்லப்படலாம். சிறுகதை என்று வரும் போது, ‘கதைஎவ்வளவு அவசியமாகிறது?


பதில்: ’கதையிலிருந்து கதையை வெளியேற்றுவது குறித்து சா.கந்தசாமி தன் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். அவரைப் போலவே வேறு சிலரும் யோசித்திருக்கிறார்கள். ஆனாலும் எஞ்சுவது கதையே. அசோகமித்திரன் இவ்வாறானவற்றை எழுதிப் பார்த்திருக்கிறார். அவரதுநூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்ற போதுஎன்னும் சிறுகதையில்கதைஎன்ற ஒன்று இல்லை. கிட்டத்தட்ட கட்டுரையின் வகைப்பாட்டில் வைக்க கூடிய படைப்பு அது. ஆன போதும் அதிலுள்ள மறைபொருளும் உணர்த்த விரும்பும் விஷயமும் புனைகதையின் தீவிரத்தோடு இருப்பதை உணரலாம். ஒன்றே போல தோன்றக்கூடிய கதைகளின் சலிப்பிலிருந்து இக்கேள்வி வருவதாகத் தோன்றுகிறது. சுந்தர ராமசாமி ஒரு கதை போல பிறிதொன்றை எழுதியவரல்ல. ‘பிரசாதம்தொகுப்பு பெரும் கவனிப்பு பெற்ற போதும் அது போன்றதொரு கதையை பிறகெப்போதும் அவர் எழுதவில்லை. மாறாகபல்லக்குத் தூக்கிகள்கதையிலிருந்து அவர் படைத்த ஆக்கங்கள் முற்றிலும் புதியதாக கருப்பொருளில் ஒன்றுக்கொன்று வித்தியாசமானதாக இருந்தது. ஒன்றை எழுதி அது நன்றாக வந்தவுடன் மீண்டும் மீண்டும் அதே போல எழுதிக் கொண்டிருக்காததும் அதற்கு ஒரு காரணமாக இருக்ககூடும். அவரது மொத்தக் கதைத் தொகுதியை மீள்வாசிப்பு செய்கையில் மீண்டும் உறுதிப்பட்ட விஷயம் இது.

நாவலில் மட்டுமல்ல கதைகளிலும் முந்தைய உடலிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகள் நடந்துள்ளன. வேறு வேறு மாதிரியாகக் கதைகளைச் சொல்லிப் பார்ப்பது, ’மொந்தையான கதையாக முன்வைக்காமல் இருப்பது போன்றவை நடந்துள்ளன. ஜெயமோகனின்ஆயிரங்கால் மண்டபம்தொகுப்பில் உள்ள சில கதைகள் அவ்வாறானவை. எஸ்.ராமகிருஷ்ணனின்தாவரங்களின் உரையாடல்தொகுப்பு மாறுபட்ட கதைகளைக் கொண்டிருக்கும். ஆனால் மீண்டும் வாழ்க்கையின் அச்சில் சுழலும் மனிதர்களைக் கொண்ட கதைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. ’கதைஎன்பதன் அவசியம் அவசியமின்மை குறித்து, எழுதபவர்களுக்குத் தனித்த அபிப்ராயங்கள் இருக்கலாம். கதையின் சாத்தியங்களை விஸ்தரிக்கலாமே அன்றி கதையற்ற படைப்புக்கு என் கதையுலகில் இடமில்லை.


கேள்வி: எட்டு சிறுகதைகளிலிருந்து 'அரூபநெருப்பு' என்பதைத் தொகுப்பின் தலைப்பாக தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?


பதில்: ‘அரூப நெருப்புகதை பிரசுரமானதுமே அடுத்தத் தொகுப்பொன்று வரக்கூடுமெனில் அதன் தலைப்பு இதுவாகவே இருக்கட்டும் என முடிவெடுக்கப்பட்ட விஷயம் அது. ஏனெனில் அதற்கு முன்பு எழுதிய சுமார் பத்துக் கதைகளிலிருந்து (’இரவுக்காட்சிதொகுப்பிலுள்ள கதைகளையும் சேர்த்து) மொழியிலும் கருப்பொருளிலும் சொல்லல் முறையிலும் இக்கதை வெகுவாக முன்னகர்ந்து சென்றிருப்பதாக நினைத்தேன். அடுத்த கட்டம் இது என நம்பினேன். இக்கதையிலிருந்து எழுதப்பட்ட பிற கதைகளை வாசித்தால் உங்களுக்கே அது தெரியவரும். பிறகு வேடிக்கையாக எனக்குள்ளாகவே சொல்லிக்கொள்ளும் காரணம் ஒன்று உண்டு. எழுத்து என்பதே உள்ளே கிடக்கும் நெருப்பு தான். அது ஒரு போதும் அணையலாகாது. ஆனால் அது நேரடியாக தெரியவும் செய்யாது. அரூபமானது. எனவே எழுத்து சார்ந்த முறையிலுக்கும் (Process)  இத்தலைப்பு பொருந்துகிறது என நினைத்துக் கொள்வேன். இன்று வரை இத்தொகுப்புக்கு இந்த தலைப்பு போல நெருக்கமான வேறொன்றை எண்ணியதில்லை.


கேள்வி: அடியாளாக வேலை செய்பவன், பிணத்துடனும் பன்றியுடனும் படுத்துறங்குபவன், எச்சில் இலை பொறுக்குபவன், லாட்டரி விற்பவன், இறைச்சி உண்பதே தனது ஆகப்பெரிய சந்தோஷமாகக் கருதுபவன், முத்தம் தந்து மகிழ்விப்பதைத் தவிர தன் மனைவிக்காக வேறேதும் செய்ய இயலாத பொருளாதார சிக்கலில் உழல்பவன் என விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்வை கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இதற்கான காரணம்?


பதில்: உண்மையிலேயே எனக்குத் தெரியாது. எழுத வரும் முன் ஐயமாக இருந்த ஒன்று சில கதைகளை எழுதிய நேரத்திலேயே துலக்கமாகி விட்டது. நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனைகள் சிறுகதைகளிலேயே நிகழ்ந்துள்ளன என்பதே அது. எனவே பிறர் எப்போதும் கையாளும் கதைக்கருக்களைக் கதாபாத்திரங்களைக் கைகொள்ள வேண்டாம் என நினைத்தேன். இல்லையெனில் இந்நேரத்தில் நான்கைந்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கலாம். இவையெல்லாம் கதையை எழுதும் முன் யோசிக்கையில் தோன்றுபவை. ஆனால் எழுத அமர்ந்தால் அது இழுத்துச் செல்லும் திக்குகளுக்கே செல்வது வழக்கம். அதிலிருந்தே புதிய பாதைகளும் வெளிச்சங்களும் கிட்டியிருக்கின்றன. இக்கதைகளில் எதுவும் என் சுய அனுபவங்களின் - மிகச் சில தவிர்த்து - விளைநிலத்திலிருந்து பயிர் செய்தவை அல்ல. முற்றிலும் சம்பந்தமில்லாத வேறொரு உலகத்தைச் சார்ந்த மனிதர்களிடமிருந்து வந்தவையே. இந்தக் கதைகளின் வழியாக நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருபடித்தான நிரல்களைக் கொண்ட லெளகீக வாழ்க்கையிலிருந்து தாவி வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடிகிறது.


இத்தொகுதியிலிருக்கும் ஒரு கதையின் கரு அல்லது எண்ண ஓட்டம் எங்கிருந்து தொடங்கியது என்பதைச் சொல்வதன் மூலம் உங்கள் கேள்விக்கு தோராயமான பதிலை அளிக்க முயல்கிறேன். பலராலும் குறிப்பிடப்பட்ட பிணக்கிடங்கில் வேலை செய்கிறவனைப் பற்றியவாசனை’.


அப்போது கல்லூரி முடிந்திருந்தேன். எல்லோர் மீதும் ப்ரியம் கொண்ட சிரிப்பில் துயரத்தை மறைக்கும் சந்திரா அக்கா குடும்ப பிரச்சனையால் நான்கு வயது மகனை விட்டுவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். அச்செய்தி நடுஇரவு எங்கள் குடும்பத்திற்கு வந்து சேர்ந்தது. அதிகாலை கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தோம். பலரும் தடுக்க ஏதோ ஒரு தூண்டுதலில் துக்கத்தை ஏற்றக்கூடும் என்பதை மறந்து அந்தச் சிறிய அறைக்குள் நுழைந்தேன். நைட்டியுடன் சந்திரா அக்கா நாக்கு வெளித்தள்ளக் கிடந்தாள். அவள் சுருக்கிட்ட சேலையின் முனை இன்னொரு பிணத்தையொட்டிய இடத்தில் அசைந்தது. அங்கே ஒரு சிறுவனும் ஒரு குழந்தையும் உடல் கிழிந்து பிணமாக கிடந்தனர். அப்போது கடும் சாராய வாசத்துடன் அந்த அதிகாலையில் உள்ளே நுழைந்த ஆட்கள் சாவகாசமாக பேசியபடி அவற்றை இழுத்து ஒழுங்குபடுத்தியதைக் கண்டு குமட்டலுடன் வெளியே வந்ததும் உறவினர்களின் பெருத்த அழுகையொலி என்னை மோதியது. அதை சில மாதங்களில் மறந்து விட்டேன் என்றே நினைத்திருந்தேன்.


அந்த உலகை எழுத வேண்டும் என்ற உந்துதல் திடீரென்று ஏற்பட்டு எழுத அமர்ந்ததுமே அக்காட்சியை அவ்வளவு துல்லியமாக மனதால் கண்டேன். வேறு சில செவிவழி கண்வழி அனுபவங்களுடன் இணைந்து இவ்வளவு விஷயங்கள் எழுந்து வந்ததை நானே வியப்புடனேயே பார்த்தேன். அதை வைத்துக் கொண்டு முழுக்கதையையும் எழுத முடித்தேன். சில ஐயங்களை மட்டும் நண்பர்களிடம் கேட்டுத் தெளிந்தேன். அந்தப் பொறி இவ்வளவு நாட்கள் அணையாமல் மனதிற்குள் கிடந்ததையே எழுத போது தான் உணர்ந்தேன். இவ்வளவு தான் கூற இயலும். ஏனெனில் எழுதும் போது வேறொன்று நடக்கிறது. அதை விளக்கக் கருவிகள் என்னிடம் இல்லை.


கேள்வி: அருகில் இருந்து பார்த்து எழுதியதைப் போல அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. உங்களை அறியாதவர்கள் யாரேனும் இத்தொகுப்பை வாசித்தால் ஒரு ரௌடியாக உங்களை நினைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் ஏராளம். அவர்களின் வாழ்வு எந்த அளவிற்கு உங்களுக்கு பரிட்சயம்?


பதில்: முந்தைய கேள்விக்கு அளித்த பதிலே இதற்கு பொருந்தும். உள்ளுணர்வை நம்பி செலுத்தப்பட்ட கலன்களே இக்கதைகள். ‘அம்மா வந்தாள்முன்னுரையில் தி.ஜானகிராமன்நான் பார்த்த பத்து பெண்களின் கலவையான வார்ப்பே அலங்காரத்தம்மாள்’ (இதே வரியல்ல, இப்படி பொருள் தரும் வரி) எனச் சொல்கிறார். அவ்வாறு தான் ஒரு பாத்திரத்தின் மேல் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களின் குணநலன்கள் கலந்திருக்கும். இன்னும் சொல்வதென்றால் கதையில் அங்குமிங்கும் எழுத்தாளனின் மனப்போக்குகள் கூட ஊடாடிவரும். அவற்றை திரட்டினால் படைப்பாளியின் ஒருவகை சுயசரிதை அதற்குள் இருப்பதை அறியலாம். இதன் பொருள்நானும் ரௌடி தான்என்பதல்ல. எங்கெங்கோ கண்ட பல்வேறு வகையான மனிதர்களின் இயல்புகள் சட்டென ஒரு கதைக்குள் இணைந்து விடும். இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் இத்தன்மையை கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.


கேள்வி: இரண்டு கதைகளைத் தவிர பிற அனைத்தும் தன்னிலையில் எழுதப்பட்டிருக்கின்றன. தன்னிலையில் கதை சொல்கையில் சில வரையறைக்குள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் எழுத்தாளனுக்கு உருவாகின்றது. நேரடியாகவோ மறைமுகமாகவோ கதையின் எல்லா வரிகளிலும் கதைசொல்லியின் இருப்பு அவசியமாகின்றது. வர்ணனைகளுக்கு இங்கே இடமில்லை. கதைசொல்லி கேட்பதையும் நினைப்பதையும் தாண்டி வெளியே பிரவேசிக்க முடியாது. இப்படி இருக்கையில் தன்னிலையில் கதை சொன்னது ஏன்?


பதில்: ஏனென்றால் அதை எழுத முடிவு செய்த போதே அப்படித் தான் அமைந்தது. தன்னிலையில் கதை சொல்வது வசதியானதல்ல. பாத்திரத்தின் மனநிலைகள், அவன் வாழ்க்கை போன்றவற்றை எழுதுபவனுடையது என வாசகர் நினைத்துக் கொள்ளும் சாத்தியம் அதிகமுள்ளது. எனவே இடக்கரக்கடலுடனேயே எழுதத் தலைப்பட நேரலாம். தொடக்கத்தில் அப்படியான சில தயக்கங்கள் இருந்துண்டு. மிக விரைவாகவே அதிலிருந்து வெளியேறிவிட்டேன். ஆகவே என் கதைகளில் எவ்வித உணர்வுகளை அந்த கதாபாத்திரங்கள் அடைகின்றனவோ அதற்கு கடிவாளம் போடவோ குறுக்கே நின்று சமாதானப்படுத்தவோ முயலவேயில்லை. பிறகு கதைசொல்லி கேட்பதையும் நினைப்பதையும் தாண்டி பிரவேசிக்க முடியாது என்கிறீர்கள். உண்மையில் படர்க்கையில் கதை சொன்னாலும் அது தானே நடக்கும். வரையறையென்பது அக்கதைகள் அளிப்பவை தானே அன்றி வேறில்லை. எழுதுபவனின் வரையறை அவனது உலகம் சம்பந்தபட்டது. சிலர் சில விஷயங்களையே மீண்டும் மீண்டும் வேறு தொனிகளில் எழுதுவதை கண்டிருக்கலாம். அதைத் தான் வரையறை என நினைக்கிறேன். மற்றபடி இந்த தன்னிலை, படர்க்கை போன்றவை கதையின் வசதி கருதி அதன் ஓட்டம் சார்ந்து அமைவது தானேயன்றி அதை ஒரு குறையாக சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.


கேள்வி: சிறுகதைக்கு காலமும், இடமும் (அது நிகழும்) முக்கியம் என்பது முக்கியமான விதிகளுள் ஒன்று. சிறுகதைக்கென விதவிதமான வரையறைகளைக் காணமுடிகிறது. சிறுகதைக்கான தங்களின் இலக்கணம் என்ன?


பதில்: சிறுகதைக்கு என்றில்லை, எந்த படைப்புருவத்துக்கும் விதி, இலக்கணம் என ஏதுமில்லை. அவ்வாறு இருக்குமென்றால் அதை மீறிச் செல்வதே இலக்கியம். காலமும் இடமும் முக்கியமென கருதுகிறீர்கள் என்றால் அதிலும் ஒரு தெளிவுக்கு வரவேண்டியிருக்கிறது. காலம் என சில மணி நேரங்களையும் சொல்லலாம். பல வருடங்களையும் சொல்லலாம். அது போலவே இடமும். பிரத்யேகமான நிலப்பகுதிக்குள் கதை நிகழ்வதாக இருக்குமெனில் அதன் வட்டார வழக்குக்குள் சென்றாக வேண்டும். மேலும் காலத்தால் நகராமல் ஒரே இடத்தில் நடக்கும் கதைகள் வாசிப்பில் சுணக்கத்தை உருவாக்குவதில்லை. நல்ல வாசிப்பையே அளித்திருக்கின்றன. உதாரணமாக வண்ணநிலவனின்பலாப்பழம்’. ஒரே அறைக்குள் சில மணிநேரங்களில் நடக்கும் கதை தானே அது. தமிழின் மிக நல்ல கதைகளுள் ஒன்றாக அதைச் சொல்லலாம்


ஆனால் நாவலில் இடமும் காலமும் நகராமல் இருந்தால் அது வாசிப்பவருக்கு சலிப்பை அளித்து விடும். பெருமாள் முருகனின்நிழல்முற்றம்’, ‘கூளமாதாரிபோன்றவை தரும் அயர்ச்சிக்கு இதுவே முதன்மையான காரணம்.


கேள்வி: அரூப நெருப்பிலுள்ள கதைகளில் பலவும் நெடுங்கதைகளாகவும், குறுநாவல்கள் போலவும் உள்ளன. நீங்களே அதை உங்கள் உரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்குக் காரணமாக சென்ற கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள காலமும், இடமும் இருக்கின்றன என்றால் அது சரியா? உதாரணமாகவெஞ்சினம்கதையில் கதைசொல்லி ஒரு கொலை செய்வதாய் தொடங்கி அவனே இறந்து போவதாய் முடிகிறது. இக்கதையின் வளர்ச்சி அவன் ஏன் அவ்வாறு செய்கிறான் என்பதற்கு அவன் பால்யத்திலிருந்து தொடங்கி, படிப்படியாக எவ்வாறு உருமாறுகிறான் என்று எல்லாவற்றையும் சொல்கிறது. அவன் போய்ச் சேர்ந்த குழுவில் அவனுக்கும் அதில் உள்ள இன்னொருவனுக்கும் இருக்கும் போட்டியை, அவன் குழுத்தலைவனுக்கு இருக்கும் சந்தேக புத்தியை அதற்கான காரணத்தை என எல்லாவற்றையும் படம்பிடிக்கிறது. இவ்வாறு பலகிளைகளை விரிக்கும்போது இது நெடுங்கதையாகவோ, குறுநாவல் தன்மை உடையதாகவோ ஆகிறதென்றால் அது சரியா?


பதில்ஆமாம். உண்மை தான். சில கதாபாத்திரங்கள் அதன் வழியாக ஒரே கதை, அக்கதை சுற்றும் மையபுள்ளி என ஆனதல்ல இக்கதைகள். எழுதும் போது கதைகளிலிருந்து உருவாகிவரும் பல மனிதர்களின் வாழ்க்கை மைய பாத்திரத்துடனோ அல்லது மைய பொருளுடனோ (.தா: ‘அரூப நெருப்பில் நாற்காலி, ‘நிலையில் வீடு) உறவு கொண்டிருக்கின்றன. எனவே அவை பெரிய அளவில் சொல்லப்பட வேண்டியதாக இருந்தது. அப்போது அவை சட்டென்று கிளைபிரிந்து சென்று விடுகின்றன. பல வாழ்க்கைகளின் குலைவுகளிலிருந்து எழுதப்படுவதால் இவை குறுநாவல்களின் தோற்றத்தை அடைந்து விடுகின்றன. சில கதைகளை வாசித்த நண்பர்கள் ஏன் நாவலாக ஆக வேண்டியதைப் பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள்? எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அக்கதைகளை அங்கே முடித்தது தான் சரி என்று எனக்குப் பட்டிருக்கிறது. தேவையில்லாமல் நீட்டிச் சென்றால் நீர்த்துப் போய்விடும். இக்கதைகள் நாவல் எழுதுவதற்கான பயிற்சியா என என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்தந்த சந்தர்ப்பங்களில் மனநிலைக்குத் தக்கவாறு ஆம், இல்லை என இரு பதில்களையும் சொல்லிக்கொள்வேன்


இக்கதைகளில் காலமும் இடமும் நகர்ந்தபடியிருப்பதைத் தொகுப்பை வாசித்தவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். நேர்கோட்டில் சொல்லப்படாமல் காலம் எப்போதும் முன்பின்னாகவே கையாளப்பட்டிருப்பதையும் நீங்கள் கண்டிருக்கலாம்


கேள்வி: இக்கதையை ஒட்டி இன்னுமொரு கேள்வி. இக்கதை சரியான திட்டமிடலுடன் எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு கொலை, அதை யார் செய்தது, அவன் வரலாறு என்ன, கதாப்பாத்திரங்களின் அறிமுகம், பின்கொலைக்கான காரணம், முடிவு. இதைப் போன்ற தெளிவான கட்டமைப்பு சிறுகதைக்கு எவ்வளவு முக்கியம்?


பதில்: ‘வெஞ்சினம்கதையைப் பற்றிப் பேசுவதால் மட்டுமல்ல, திட்டமிடல் இல்லாமல் ஒரு கதையை எழுத முடியுமா எனத் தெரியவில்லை. எங்கே செல்கிறது என்பது வேண்டுமானால் தற்கணத்தின் உடைப்பிலிருந்து நிகழலாம். ஆனால் எங்கே முடிக்க வேண்டும் என்பதோ அதை எந்த வடிவத்தில் பிரசுரிக்க வேண்டுமென்பதோ திட்டமிடலுடன் சம்பந்தப்பட்டது தான். இக்கதை வெளிவந்த மறுநாளே தமிழின் முக்கியமான கவிஞர் ஒருவர் அழைத்துஇக்கதையின் உலகம் பற்றி பிறகு பேசலாம். ஆனால் இக்கதை அதன் மொழியாலும் சொல்முறையாலும் நிற்கும்என்று சொன்னார். இன்றும் பொருந்திப்போகும் அவதானிப்புகளுள் ஒன்று எனத் தோன்றுகிறது. ‘கொலைபற்றி பேசும் போது இதன் மைய பாத்திரத்துக்கு ஒரு ரவுடிக்கும்பலின் முக்கியமான இடத்திலுள்ள பாத்திரத்துக்கு நாயைக் கண்டால் பயம். அவ்வளவு பெரிய இடத்துக்கு வந்த பிறகும். ஒரு வித பதட்டம் கொண்டவன் அவன். அவன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நிமிடத்தில் எங்கோ ஒலிக்கும் நாயின் ஊளையொலியைக் கேட்டு கூட அஞ்சுகிறான். இங்கிருந்தும் இக்கதையை வாசித்துப் பார்க்கலாம்.


எங்கு எவை குறைவாகச் சொல்லப்படலாம்? சேர்க்க வேண்டிய பகுதி எங்கேயிருக்கிறது? ஆகியவற்றை திட்டமிடலின்றி எப்படிச் செய்ய முடியும்? ஒரு ஆக்கம் முழுமையாக எழுதப்பட்டு விட்டதாகத் தோன்றியவுடன் முதல் வாசகராக அமர்ந்து எதிர்பாராமல் வந்தமர்ந்த வரிகளையும் இடங்களையும் சிலாகித்துக் கொள்ளும் அதே மனநிலையுடனேயே தேவையற்ற பகுதிகளைக் கத்தரித்து எறிவதற்கும் தயங்க வேண்டியதில்லை. ஆனால் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவ்வளவு கச்சிதமாக ஒரு கதை அமைய வேண்டுமா என்னும் ஐயம் எனக்கிருக்கிறது.  


கேள்வி: வெஞ்சினம், வெறி, பழிதீர்க்கும் மூர்க்கம், மறுக்கப்பட்ட உரிமை, நிராசை, பொருளாதார சிக்கல் என இத்தொகுப்பின் கதைமாந்தர்கள் அனைவர்களுக்குள்ளும் நெருப்பு எரிந்தபடியே இருக்கின்றது. 'திரும்புதல்' கதையில் ஓரிரு இடங்களில் மட்டுமே நகைச்சுவை வெளிப்படுகின்றது. எளியவர்களின் வாழ்வில் இடம்பெறும் மகிழ்வான தருணங்களைத் தவிர்த்ததற்கான காரணம்?


பதில்: நீங்கள் சொல்கிற கூறுகளோடு அந்த பாத்திரங்களின் மனதில் நெருப்பு எரிவது உண்மை தான். என்றாலும் இன்னும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால் அவமானப்படுத்தப்படுவதன் வழியாகவே அதை ஆற்றுப்படுத்த முடியாமல் அவர்கள் ஆகிவிடுவதை உணரலாம். அது ஒரு ஆறாக்காயமாக, எரிதழல் போல அவர்களின் உள்ளங்களை பொசுக்குவதன் வெம்மை தாளாமல் தான் அந்த மூர்க்கத்தை கைகொண்டுவிடுகிறார்களோ என அச்சாகி வந்த பிறகு ஒரு சேர நிதானமாக மீளவும் ஒரு தடவை வாசித்த போது தோன்றியது.


வாழ்க்கையின் உக்கிரமானத் தருணங்களின் மீது கதை நிகழும் போது அதற்குள் நகைச்சுவையை வைத்தால் அந்த தீவிரம் மழுங்கிவிடக்கூடுமல்லவா? மேலும் அந்த பாத்திரங்களுக்கே நகைச்சுவை உணர்வு இல்லாமல் இருக்கையில் எழுதுபவன் வீணே அவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி நெளிய வைக்கக் கூடாது. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வில் கொண்டாட்டங்களும் நகைச்சுவை உணர்வுக்கும் பஞ்சமில்லை. இங்கு அதை செய்ய இடமில்லை என நினைத்தேன். முந்தைய தொகுப்பில் உள்ளமேய்ப்பர்கள்கதையை வாசித்திருந்தீர்களெனில் அது துயரக்கிடையிலும் மகிழ்வின் தருணங்களையும் கொண்டிருப்பதைக் கண்டிருக்கலாம்.


கேள்வி: பொதுவாக இலக்கியம் துயரங்களைப் பேசுவதற்கான உளவியல் என்னவாக இருக்குமென நினைக்கிறீர்கள்?


பதில்: அது ஒட்டுமொத்த சமூக உளவியலின் பிரதிபலிப்பாக இருக்கலாம். சந்தோஷம் எப்போது வேண்டுமானாலும் தீர்ந்து விடக்கூடிய பானமுள்ள கோப்பையாக இருக்கும் போது துயரம் ஊற்று போல மனிதர்கள் வாழ்வில் வற்றாமல் கிடக்கும் என்பதையே பேரிலக்கியங்களும் மகத்தான ஆக்கங்களும் சில விதிவிலக்குகள் நீங்கலாக மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. தமிழில் நவீனத்துவ இலக்கியங்கள் நிலைபெற்று கோலோச்சிய காலகட்டத்திலிருந்து இங்கு மேலும் அது வலுவானது. இவற்றிலிருந்து தப்பியவர் .முத்துலிங்கம் போல வெகுசிலரே. மற்றொருவனின் துயரத்தில் - தனக்கு அவன் சம்பந்தமுள்ளவானகவோ இல்லாதவனாகவோ இருக்கும் பட்சத்திலும் - தன்னுடைய பங்கு மிகச்சிறு அளவேனும் இருக்கக்கூடுமோ! என தோன்றுவதும் காரணமாக இருக்கலாம். ஏனெனில் அவன் நம்சக ஹிருதயன்அல்லவா? மேலே ஒட்டிக்கொள்ளும் புன்னகையின் பூச்சுகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக மானுட வாழ்க்கை துயரத்தால் ஆனதாகவே தோன்றுகிறது


கேள்வி: ‘மாறாட்டம்கதை ஒரு முக்கியமான கதையாக தோன்றுகிறது. கணவனால் நேசிக்கப்படும் ஒரு பெண், அவ்வளவு வறுமையெல்லாம் இல்லை, செக்ஸ் வாழ்க்கையில் குறையேதுமில்லை. இருப்பினும் வேறொரு ஆணுடன் தவறான உறவில் இருக்கிறாள். அதை அறியும் அவளைக் கொலை செய்து விடுகிறான். இக்கதையில் எந்த ஒரு விசயமும் ரொமான்டிஸைஸ் செய்யப்படவில்லை. ஏன் தொகுப்பில் இருக்கும் எல்லா கதைகளிலுமே அது இல்லை. உதாரணமாக புவனா ஏன் வேறொரு ஆணுடன் உறவில் ஈடுபடுகிறாள் என்பதற்கு சேலைகள் மட்டும் ஒரு காரணமாக காட்டப்பட்டாலும் அது வலுவானதாக இல்லை. ஏனென்றால் கதையின் எந்த இடத்திலும் வறுமையை முன்னிலைப் படுத்துதலோ அதனால் பொருட்கள் மீது ஆசை கொண்டவளாகவோ புவனாவைக் காட்டுவதோ நிகழவில்லை. பரமு அவளை அடிக்கிறான். அதனால் அவள் வேறொரு ஆணின் அன்புக்கு ஏங்கி போவதாகவும் இல்லை. அவனின் வன்முறையை ஒருவாறு ஏற்றுக்கொண்டவளாகவே வருகிறாள். இருந்தும் முறையற்ற தொடர்பில் உள்ளாள். லாட்டிரி சீட்டு விற்பவனாக பரமு வருகிறான். அவனின் குணநலன் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. திடீர் திடீரென கோபம் கொள்பவனாகவும், பின் உடனே சமாதானம் அடைபவனாகவும் வருகிறான். இக்கதையை அவன் பார்வையில் பார்த்தால் தவறான நடத்தை கொண்ட மனைவியைக் கணவன் கொன்றான் என்று சுருங்கி விடுகிறது. இக்கதை கொலையையோ, முறையற்ற உறவையோ நியாயப்படுத்தவில்லை. அதேசமயம் எதை முன்வைக்கிறது?


பதில்: எதையுமே முன்வைக்கவில்லை. சிலவற்றைத் திறந்து காட்ட முயன்றிருக்கிறது. பிறகு சில கற்பிதங்கள் இருக்கின்றன. மணவாழ்க்கையில் வேறொரு உறவை ஆணோ பெண்ணோ நாடிச் செல்ல யாரேனுக்கேனும் குறையிருக்க வேண்டும், அதிருப்தி நிலவ வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சில சமயம் அது ஒரு காரணமாக இருக்குமென்றாலும் பெரும்பாலும் இவையெல்லாம் சரியாக அமையப்பெற்றவர்களே மற்றொரு உறவுக்குள் இருப்பது சாதாரணமாக நடக்கிறது


அக்கதையை விளக்கிக்காட்ட விரும்பவில்லை. அந்தச் சேலை எவ்வாறு கொலைக்கான மனநிலைக்கு அவனை இட்டுச் செல்கிறது என்ற இடம் உளவியலின் துணையால் மேலும் துலக்கமாகும். ஒரு தடவை கவிஞர். ராஜசுந்தர்ராஜன் இக்கதையை குறிப்பிட்டுஅவளைக் கொல்லாமல் விட்டிருக்கலாம்என்றார். அந்தக் குரலையே இன்னும் சிலரும் ஒலித்தார்கள். இக்கதை எழுதப்படும் காலம் இருபத்தொன்றாம் நூற்றாண்டு. கடந்த நூற்றாண்டின் மதிப்பீடுகள் மனித வாழ்க்கைக்குள்ளும் வீழ்ச்சியையே சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கையில் தி.ஜானகிராமனோ, சுந்தர ராமசாமியோ, அசோகமித்திரனோ அவளை மன்னித்திருக்கலாம். இந்த நூற்றாண்டின் எழுத்தாளன் கருணையற்ற காலத்தை கண்முன்னால் கண்டு கொண்டிருப்பவன். புதுமைப்பித்தன்கருணை கிழங்கு வர்த்தகத்தில் முடிந்து விட்டதுஎன்று எழுதி ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுகள் ஆகி விட்டன என்பதை கவனிக்க வேண்டுகிறேன்


கேள்வி: நாடகீயமான முடிவுகள், சிறுகதைக்கு பலமா? பலவீனமா


பதில்: அது அந்தச் சிறுகதை தேர்ந்து கொண்ட விஷயத்தில் தானே இருக்கிறது! ஆனால் நாடகத்தனமாக முடிவுகள் கொண்ட கதைகளிலிருந்து விலகி வந்து விட்ட காலத்தில் இருக்கிறோம் என நினைக்கிறேன்.


கேள்வி: உங்கள் கதைகளில் கொலை குறித்த காட்சிகள், வர்ணனைகள் சினிமாத்தனமாக இருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறது. சமீபத்தில் இதையே ஜீ.முருகன் எழுதியதாக ஞாபகம். இந்த விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?


பதில்: இந்த விமர்சனத்தை ஏற்கவில்லை. ஜீ.முருகன் வேறொரு நூலை விமர்சக்கும் போது ஒரு வரியாக இதைச் சேர்த்திருக்கிறார். அதை வாசித்தேன். தனிப்பட்ட உரையாடலொன்றில் அவருக்குச் சொன்ன பதிலையே இங்கும் சொல்ல விருபுகிறேன். அவை சட்டென அதிர்ச்சிக்காக நிகழ்வதில்லை. உள்ளூர ஊறிக்கிடக்கும் மூர்க்கம் வெளிப்படும் தருணத்திலேயே நடக்கின்றன. அந்த பாத்திரம் அந்த முடிவை எடுப்பதற்கான பின்னணிகள் உளவியல் காரணங்கள் அக்கதைக்குள்ளேயே மறைந்திருக்கின்றன. அவ்வளவு தான்.


நன்றி : வாசகசாலை இணையதளம் ஜுலை 2017. 

 
                                     =============================

இரண்டு பேட்டிகள்


படைப்புச் செயல்பாட்டில்வாசகர் கதவுக்கு அப்பால் நிறுத்திவைக்கப்பட வேண்டியவர்!”

சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்


சிறுகதை எழுதுகையில் வாசகர் பற்றிய பிரக்ஞை எந்தளவு 
உங்கள் மனதில் இருக்கும்?

சிறிதளவு கூட இருக்காது. சிறுகதை என்றில்லை, வேறெந்த படைப்புருவத்தை எழுதத் தேர்ந்தாலும் வாசகர் மூன்றாம் நபரே. படைப்பின் முறையியலின் (Process) ஊடாக வாசகரை நினைவு கூர்ந்து கொள்வது போல ஆபத்து பிறிதில்லை. எங்கிருந்தோ வந்து வெற்றுத்தாளை ஆக்கிரமித்து நிரப்பும் பாத்திரங்களின் போக்குகளை எண்ணி வியப்புடனும் பரவசத்துடனும் இன்னொரு உலகை (அது எங்கிருந்து எப்படித் தொடங்கி நீள்கிறது என்னும் புதிருடன்) நிர்மாணிக்கத் திணறலுடன் முயன்று கொண்டிருக்கும் எழுத்தாளரல்வாசகரை எவ்வாறு நினைத்துக் கொள்ள முடியும்? ஆனால் பிரதியின் இறுதியும் அறுதியுமான உடைமையாளர் வாசகரே. ஆயினும்படைப்புச் செயல்பாட்டில் தாழிடப்பட்டக் கதவுக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட வேண்டியவர் அவர். எழுதும் போதே அவரை உள்ளே அழைத்து இருக்கையும் தந்து பேசவும் அனுமதிப்பீர்களென்றால் நீர்த்துப்போக கையெழுத்திடுகிறீர்கள் என்றே பொருள். அதற்குதமிழில் ஜெயகாந்தனிலிருந்து (பிற்கால கதைகள்) எஸ்ராமகிருஷ்ணன் வரை( கடந்த பத்தாண்டு கால கதைகள்) உதாரணங்கள் உண்டு.

சிறுகதையில் வட்டார வழக்குக்கு இடம் எவ்வளவு?

அது எழுதுகிறவரையும் அவர் எழுதும் நிலப்பரப்பையும் சார்ந்தது.உதாரணமாக பா.வெங்கடேசனின் படைப்புகள் நிகழுமிடங்கள் பெயராகத் தான் வருமேயன்றி அவற்றில் அந்நிலமக்களின் பேச்சுமொழிக்கு இடமேயில்லை. உரையாடல்கள் கூட பொதுமொழியிலேயே அமைந்திருக்கும். மாறாக வட்டார வழக்கிலிருந்து பிரிக்கவே முடியாதவர் கண்மணி குணசேகரன். இவர் ’நடுநாட்டுச் சொல்லகராதியை தனியொருவராக உருவாக்கியவர். இது உயந்தது அது தாழ்ந்தது என்னும் பேதங்கள் இதன் பொருட்டு உருவாகவேண்டியதில்லை. ஆனால் வாழும் மண் மீது படைப்பாளி கொண்டிருக்கும் ஆழமான பிணைப்பையும் நேசத்தையும் உறுதி செய்பவை வட்டார வழக்குச் சொற்கள் புழங்கும் ஆக்கங்களே.

நல்ல சிறுகதைக்கான உங்களின் வரையறை என்ன?

வரையறை என்பதெல்லாம் வசதிக்காக சொல்லிக் கொள்பவை தான். எந்த ஒன்றுக்கும் வரையறை என ஏதுமில்லை. ஒரு காலகட்டத்தில் கோலோச்சும் படைப்புகள் சார்ந்து விமர்சகர்களால் ரசனை, அழகியல் மற்றும் கோட்பாடுகளால் முன் வைக்கப்படுபவை அவை. யதார்த்தம் , நவீனத்துவம், மேஜிக் ரியலிசம், பின் நவீனத்துவம் என ஒவ்வொரு காலகட்டங்களில் ஏதேனுமொரு அலை வீசி ஓய்ந்திருக்கிறது. இவற்றிற்கு மொழியாக்கங்களே பிரதான காரணியாக இருந்திருக்கின்றன. ரஷ்ய இலக்கிய மொழியாக்கங்களின் போது யதார்த்தவாதம், பிறகு .நா.சு கொண்டு வந்த அயலக படைப்புகள் அதன் பின் இலத்தின் அமெரிக்க இலக்கியத்தின் வழி எழுந்த மேஜிக் ரியலிசம் குறித்த உரையாடல்கள், போன்றவற்றை இங்குள்ளவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். கோட்பாடுகளை, இசங்களை முன்னிருந்தி வந்த படைப்புகள் அதன் செயற்கைத்தனம் மற்றும் நகலெடுத்தல் காரணமாக நகைப்புக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாயின. ஆன போதும் கோட்பாடு சார்ந்த எழுத்துக்களையும் பேச்சுகளையும் விவாதங்களையும் எழுத்தாளன் கவனத்துடன் பின் தொடர்தல் அவசியம். தொண்ணூறுகளின் மத்தியில் மராட்டியிலிருந்து வெளிவந்த தலித் சுயசரிதை மொழிபெயர்ப்புகளுக்குப் பின் மீண்டும் யதார்த்தவாதம் இங்கு செல்வாக்குப் பெற்றது நினைவிருக்கலாம். ஒன்றின் காலகட்டம் முடிந்து அல்லது அது போதாமல் ஆகும் போது அதை உடைத்து அடுத்த கட்டம் வேறொன்றை உருவாக்கும். ஏனெனில் அடிப்படையிலேயே இலக்கியத்திற்கு தான் இலக்கணம். அப்படி வரையறுக்கப்படும் எல்லைகளை மீறிச் செல்வதே இலக்கியம்.

வாசித்த ஐந்து நல்ல சிறுகதைகளை சட்டென்று சொல்லச் சொன்னால்?

அபு ஹுசைனின் குகைக்குள் சென்ற அலிபாபா போல திகைத்து நிற்க வேண்டியது தான். அவ்வளவு செல்வ வளம் மிக்க மகத்தான கதைகள் கொட்டிக் கிடக்கும் கஜானா நம்முடையது. சட்டென்று என்றாலே ஐம்பதைச் சொல்லி விட முடிகிற நிலையில் ஐந்து என்பது கடைந்தெடுத்தக் கஞ்சத்தனம். பலராலும் எப்போதுமே பட்டியலிடப்படுகிறவற்றை ஒதுக்கி வைத்து விட்டு சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து உடனடியாக மனதில் தோன்றுகிற ஆனால் மிக நல்ல கதைகளைச் சொல்கிறேன். பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ , ஜெயமோகனின் ‘வாரிக்குழி, தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு, ஜே.பி. சாணக்யாவின் ‘ அமராவதியின் பூனைகள்,ஷோபாசக்தியின் ‘கண்டிவீரன், இமயத்தின் ‘ஈசனருள். (கணக்கில் ஒன்று கூடிவிட்டது, பொறுத்தருள்க).

ஒரு சிறுகதை வாசகருக்கு எவ்வாறு இறங்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? வாழ்வின் அனுபவமாக அல்லது மொழியின் அனுபவமாக?

ஒன்றை மற்றொன்று இட்டு நிரப்பி நிறைவு செய்யக்கூடியவை தான். இரண்டுக்குமே வலுவான ஆதாரங்களைச் சொல்லி நிறுவிவிட முடியும். ஆனால் வெறும் மொழியால் மட்டும் படைப்பு நிற்கும் என நம்பவில்லை. ஈராயிரம் மரபு கொண்ட மொழியிலிருந்து எழுத வந்திருக்கிறேன் என்ற போதம் மிகத் தேவையானது. அனுபவ வெம்மையின் முன் மொழியின் அழகியல் நடனங்கள் பின்னொதுங்கி விடும். என்றபோதும் எழுதுபவனின் தனித்த காலடிகளின் முதுகெலும்பு அவனது மொழியே. மொழியின் வசீகரித்தால் ஈர்க்கும் ஆக்கங்களில் கூட அதன் கலைமதிப்புக்கு உள்ளட்டகத்திற்கே முன்னுரிமையளிக்கப்படுவதைக் காணலாம். இன்றைய சூழலில் பத்திரிகையாளனின் நடையில் எழுதப்படும் படைப்புகள் பெருகிவருவதும் அவர்களை படைப்பாளிகள் என நம்புவதும் கூட மொழி பற்றிய கூருணர்வு மங்கி வருவதால் தான். ஒருகட்டத்திற்கு பின்னும் மொழி குறித்த பிரக்ஞையை வளர்த்துக் கொள்ளாமல் எழுதிக்கொண்டே இருப்போமெனில் ஆவணக்காப்பகத்துக்கு ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றே ஆகும்.

நன்றி : விகடன் தடம் ஆகஸ்ட் 2019 இதழ்.

=============================

1 comment:

  1. ஃபாண்ட் சைஸ் அதிகமாக இருந்தால் எழுத்தின் தரம் குறைவாக இருப்பதை போன்று இமேஜ் தட்டும். டெக்ஸ்டை பதிவேற்றுகையில் எம்.எஸ்.வேர்டில் வைத்து 8 பாய்ண்டில் வைத்து அலைன் செய்த பிறகு காபி செய்து இணையத்தில் பேஸ்ட் செய்து பதிவேற்றுக. நன்றி.

    ReplyDelete