Sunday, September 24, 2017

வருகை-சிறுகதை

வருகை


சிறுகதை


அடிகுழாயின் கைப்பிடிமேல் அமர்ந்து அரைக் கண்ணை மட்டும் மூடி நின்று ஒண்ணுரெண்டுநாலுஏழு என இளங்கோ எண்ணிக் கொண்டிருந்தபோதேஎளிதில் அகப்பட்டுவிடாத இருளான இடங்களை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தோம். எட்டு மணிக்கு மேல் அதில் தண்ணீர் வராது. அவனை ஐஸ்” அடிப்பதற்கு வாகான இடத்தில் ஒளிந்த சமயத்தில் தூரத்தில் அப்பா பீடி எறிவதைப் போலவே ஒருவர் எறிவதைப் பார்த்தேன். பகீரென்றது.அது அவரல்ல என உணர்ந்து சமனப்பட்டபோது நடுத் தெருவிற்கு அம்மா வந்து நின்று ஓங்கிய குரலில்,“சேகரூ... ரூ... டேய்... கல்லெண்ணய வாங்கீட்டு விசுக்குன்று ஒடியா... வூட்ல வேல நெறயக் கிடக்கு” என்றாள்.





தண்ணீரில்லாத தொட்டியிலிருந்து மெல்லக் கண்களை மட்டும் உயர்த்தியதில் அம்மாவின் பின்னால் முந்தானையை ஆட்டியவாறே விஜி நிற்பது தெரிந்தது. பதுங்கிய இடங்களை இளங்கோ அலசிக்கொண்டிருந்தான். தொட்டியைக் கைநீட்டி விஜி சேர்ரு... சேர்ரு” என்றது. துள்ளலான நடையுடன் இளங்கோ எனை நோக்கி வந்தான்.

ஏம்மா இப்புடிக் கத்தற... காது கேக்குதெடு” என்றவாறே இளங்கோவைக் காணாதது போல அம்மாவிடம் சென்றேன். அவன் என் முதுகில் குத்தி  

ஒண்ணு... ஒண்ணு” எனக் குதித்தான்.

நானு ஆட்டத்துக்கு வரல” என்றேன்.

என்னையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்தபின் பயந்த பேடி பாப்பரான்டீ... எங்க வூட்டுச் சாம்பராணி” என இடைவெளியின்றிக் கூவியவாறே ஓடினான்.

கோபமாக அம்மாவிடம் திரும்பி வெளையாடீட்டு வர்றக்குள்ள அப்புடியென்ன அவிதி உனக்கு” என்றேன்.

நீ வர்றக்குள்ள பட்டணம் விடிஞ்சி பாழாப் போயிரும்.

யேன்... நீ போனாத் தரமாட்டேனுடாங்களா?”

அப்பறம் உன்னய என்னத்துக்குப் பெத்தது?”

எண்ணய வாங்கத்தான் பெத்தயா?”

ஏதுபயம் வுட்டுப் போச்சாட்டயிருக்குது... பதிலுக்குப் பதில் வருது... கம்பியக் காச்சி வாய் மேல இழுத்துறுவேன். ஜாக்கரதை!” என்றாள்.

எரிச்சலுடன் விஜியின் அருகம்புல் ஜடையைப் பிடித்து மேல்நோக்கி இழுத்தேன். சிணுங்கினாள்போடாக் கழுவாட்டு நாயி... எப்பப் பாத்தாலும் புள்ளகூட ஓரியாட்டங் கட்டீட்டு” என்றாள் அம்மா.

வெடுக்கெனக் கூடையைப் பிடுங்கி பாக்கிய நா வச்சுக்குவேன்” என்றேன்வந்து கைகாலக் கழுவீட்டுப் படிக்கற ஜோலியப் பாரு... இல்லீன்னா உங்கப்பங்கிட்ட சொல்லீருவேன்.




அப்பாவுக்கு அவர் வரும்போது புத்தகத்தின் முன் அமர்ந்திருக்க வேண்டும்.

என்ன அய்யாவுக்கு ஊர் சுத்தற ஜோலியே தீராது போலிருக்கு” என்பார்.

இல்லீங்கப்பா.

அப்புறமெப்பிடிடா கால் முச்சூடும் புழுதியாக் கிடக்கு?” என்று கையை ஓங்கி உச்சந்தலை முடியைப் பிடிக்க ஆவேசமாக வருவார்.
தப்பித்து அம்மாவின் கால்களுக்குள் புகுந்து கொள்வேன். வெளியே இழுக்க எவ்வளவு முயன்றாலும் அம்மா தன் தொடைகளுக்கிடையே இறுக்கிக் கொள்வாள். சேலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன்.

எல்லாமும் நீ கொடுக்கற செல்ல மயிரு தாண்டீ” என அம்மாவின் முதுகில் அடிவிழும் சத்தத்தைக் கால்களுக்குள் சிக்கி நடுங்கியபடியே கேட்டிருப்பேன். இன்று சனிக்கிழமை. அப்பாவின் சம்பள நாள். பழைய சனிக்கிழமைகளின் நினைவுகள் துடிப்புள்ள மூளையின் மீது தடித்த பிரம்பால் அடிப்பதைப் போன்று தாங்க முடியாத வலியைத் தந்தவையாக இருந்திருக்கின்றன.

வெறும் வாணலி காய்ந்துகொண்டிருந்தது. அதில் எண்ணெய் ஊற்றியதும் புஸ்” என வந்த சத்தத்தில் சிரித்துக் கைகளைத் தட்டிக்கொண்டே விஜிஅம்மாவின் பின்னால் போய் நின்றாள். அவள் சிரிக்கையில் கண்கள் உள்ளே போய்விடும். அம்மா அவளை வளைத்து மடியில் போட்டுக்கொண்டாள். பாதியில் விட்டு வந்த விளையாட்டில் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சுமையாக மடியில் புத்தகம் கனத்தது. மணலை அரைத்துத் தேய்க்கும் செருப்பின் சத்தமோ... அடித் தொண்டையிலிருந்து கோழையை இழுத்துஅதை ஓசையோடு காறித் துப்பும் சத்தமோ கேட்கிறதா எனச் செவியைக் கூர்மையாக்கிக் கேட்டேன். அவரது வருகையை முன்னறிவிப்பவைகளாக இவை இருந்தன. அடியைத் தவிர வேறொன்றும் அறியாத குடிகாரத் தகப்பனால் அப்பா வளர்க்கப்பட்டாரென அம்மா சொல்லியிருக்கிறாள்.



பாதி எரிந்திருந்த கொள்ளிக்கட்டைகளை அம்மா நன்றாக உள்ளே திணித்துவிட்டாள். மஞ்சளும் செந் நிறமுமாக அடுப்பு எரிவதை விஜி கண் எடுக்காமல் பார்த்து அமர்ந்திருந்தாள். அம்மா காகிதத்தை உள்ளே எறிந்தாள். நெருப்பு நீலமாக மாறிச் செந்நிறத்தோடு கலந்தது. எதையோ கூற வாயெடுத்துக் கைநீட்டிப் பின் அதை வாய்க்குள் வைத்து அம்மாவைப் பார்த்தாள். கடுகை அள்ளி எண்ணைக்குள் இட்டதும் படபட’ வெனப் பொரிந்தது. இடது காலைத் தட்டி நானு நானு” என மடியிலிருந்து திமிறித் துள்ளினாள்.

எந்தங்கமெங்கமயிலுக் குட்டியப் புடி புடி புடி ...” என என்னை நோக்கினாள்.

உடனே தலைகவிழ்த்து வையத்துள் வாழ்வாங்கு”, “வையத்துள் வாழ்வாங்கு” என முன்னும் பின்னும் ஆடியபடியே குறளை மனப்பாடம் செய்ய முயன்றேன். ஒன்றையே பத்துத் தடவைகளுக்கு மேல் திருப்பிக் கூறாவிட்டால் தலையில் ஏறாது.

விஜியை வெளியேவிட்டு டேய் இவகிட்ட விளையாட்டக் காட்டுஅதுக்குள்ள கிளறி இறக்கி வைச்சர்றேன் என்றாள்முட்டு... முட்டு... முட்டு” எனக் கூறியபடியே அவள் தலையில் மெதுவாக முட்டினேன். அடக்க முடியாமல் சிரித்ததில் வாயிலிருந்து நீர் ஒழுகி அவள் கைகளில் வழிந்தது. முத்தங்கள் பொழிந்து மடிமீது இருத்தி வேறு புத்தகங்களிலிருக்கும் படங்களைக் காட்டியபடியே இருந்தேன்.

எப்போதும் மெதுவாகத் தின்பது என் வழக்கம், “வளர்ற பையன் திங்கறதப்பாரு... தலைநிமிராம அள்ளி அள்ளிப் போடுடா” என அம்மா அவளுக்கிருந்ததிலும் எடுத்து எனக்குப் போட்டாள்.

விஜி பின்னாலிருந்து காலைத் தூக்கி முதுகில் வைத்தாள்.

பொட்டச்சிக்குக் கொழுப்பப் பாத்தயா... ஆம்பளப் பையன் மேலே கால ஓங்கி நிக்கறத” எனப் பட்டென அடித்தாள். அடுப்பின் தழலைக் காண்பதுபோல அம்மாவைப் பார்த்தாள். கோபத்தில் முகம் சிவந்து விட்டிருந்தது. வீறிட்டு அழத்தொடங்கினாள்.

ஊளை போடாதா... வாய மூடு... மூடு வாய” என அவளை அள்ளி இடுப்பில் போட்டு நா வர்றக்குள்ள வட்டல் காலியாயிருக்கோணும்” என விஜியின் வாயின் மேல் அடித்தபடியே வெளியே போனாள்.

இரண்டு மூன்றுமுறை புரட்டியதும் வாயோரம் ஒழுகிய எச்சிலைத் துடைத்தபடியே கண்களைத் திறக்க முடியாமல் திறந்து எழுந்தமர்ந்தேன். கட்டிவந்திருந்த ஓட்டுப் பக்கடாவும் மிக்சரும் பிரிக்கப்பட்டு அதற்கு பின்னால் வெற்றுடலுடன் அப்பா சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். சட்டையைக் கழட்டியபடியே வீட்டினுள் நுழைவது அவர் வழக்கம். முழுக்கைச் சட்டையை முழங்கைக்கும் மேலாகச் சுருட்டிவிட்டுச் சட்டையின் முதல் பொத்தானைப் போடாமல் எப்போதும் பீடி புகைத்தபடியே இருப்பார்.



எடுத்துத் தின்னுட்டுப் பட்றா” என்றார். நன்றாகச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். கண்கள் சொருகியிருந்தன.

பொட்டப்புள்ளீங்கற நெனப்பில்லாமக் கால அகட்டிப் படுத்திருக்கறதப் பாத்தயா” என அம்மா வேகமாக ஓடிவந்து விஜியின் கவுனை நன்றாக இறக்கிவிட்டாள்.

புள்ளயத் தொடாதடீ ... எங்கம்மாவே அவ ரூபத்துல வந்து எனக்குப் பொறந்திருக்கறா” எனக் கண்களை மூடியபடியே பேசினார்.

ப்பேவ்...வ்” என்ற ஏப்பத்தோடு மெதுவாக நிமிர்ந்து நெஞ்சை நன்றாக நீவிக்கொண்டார். வெறும் வாயை மென்று கண்களை இறுக்கி மூடி எச்சிலை விழுங்கினார்டாய்.. ய்ய... என்னிய ஒருத்தனும் அசைக்க முடியாது” எனக் கட்டை விரலைத் தூக்கி ஆட்டிக் காட்டினார். அது எதிர்ச் சுவரில் பூதாகரமான நிழலாக அசைந்தது. மீண்டும் தரையில் கையூன்றி ஏப்பத்துக்கு முயன்றார். கொசுக்கள் அவர் உடலைச் சுற்றிவந்து அமர்ந்தன.

ங்ஙோத்தா... கான்ட்ரேக்ட் தாயோளி. டேய்... சுண்டக்கா சைஸ் இருக்குமாடா உன்னோடது. நானு மிஷினேறித் தைக்கவந்து பதினஞ்சு வருஷங்கழிச்சுத் தாண்டா நீயி உங்கம்மாவோட கால்வழியா வந்திருப்ப ... நாந் தைச்ச பீஸ மிஸ்டேக்குங்குறயா திருட்டுத் தேவிடியாப்பையா டேய்...” என ஆவேசமாகக் கத்தினார்.

கொழந்தைக இருக்கைல விவஸ்தையோட பேசுறயா” என்றாள்.

உங்கூட்டுக்குக் குப்பைகூட்ட வந்தவன்னு நெனச்சயா... நீயி நானுங்கற... மரியாதையாப் பேசு இல்லீன்னா பல்லப் பேத்துருவேன்” என முஷ்டியை ஓங்கினார். அம்மாவின் பின்னால் நெஞ்சு உதற மூத்தரப்பை கூசும் அளவிற்குப் பயந்து நின்றிருந்தேன்.

ரேட்டுக் கட்டாதுன்னா பீசுக்கு ஐஞ்சு பைசாவக் கம்மி பண்ணு ... பத்துப் பைசாவ... ஏன்டா களவாணித் தாயோளிக் கம்மி பண்றஏன்னு கேட்ட எம் பீஸ மிஸ்டேக்குங்கற” என மூச்சுவாங்கினார்.

கைகாலெல்லாம் அத்துப்போச்சுடா... எட்டு வயசுலேர்ந்து தைக்கறன்டா... கூலியத் திருடி மலையாளச்சிக்குப் புடவ எடுத்துத் தர்றயா... கேப்மாரித் தாயோலி. நீ நாசமாப் போயிருவேடா” எனத் தரையில் ஓங்கி அடித்தார்.

ஏட்டா ஏட்டான்னு அவ கூப்பிட்டதும் ஒண்ணுந் தெரியாதவன் மாரி ஸ்டோர் ரூமுக்குள்ள போய் அவ மேல ஏற்றான். அவோ முதலாளியோட எச்சையடா. எச்சக்கலைத் தாயோலி” எனக் கத்திவிட்டு அமைதியாகக் கிடந்தார்.

உன்ற மொதலாளியோட பூர்வீகந் தெரியுமாடாபீஸத் திருடி வித்தான். செகன்ட்ஸ் பீஸ் யேவாரியக் கைக்குள்ள போட்டுக்கிட்டுக் கமிஷன் அடிச்சான். எங்கிட்ட அண்ணேஅண்ணேன்னு ஓசி பீடி வாங்கிக் குடிச்சவன்டா அந்தத் திருட்டு முண்ட மவன்.

உனக்குக் கைலாகிலீன்னா அவன யேன் கரிச்சுக் கொட்டற” என்றாள்.






அடுத்தவனோட பொழப்ப எனக்குக் கெடுக்கத் தெரிலீயே... அடுத்தவங் குடியில மண்ண அள்ளிப் போட்டவன்... நம்புனவுங்களுக்குத் துரோகம் பண்ணவனெல்லாம் இன்னிக்குப் பனியன் கம்பெனி முதலாளி... அவனுக்கு கார்... பங்களா... கூத்தியா... அவனோடத ஊம்பறததுக்கு இவன மாரிச் சுத்தியும் பத்துப் பேரு... த்தூ.. மானங்கெட்ட நாய்களா” எச்சில் சுவரில் விழுந்து வழிந்தது.

விஜி பயந்து அழுதது கண்டு, “தூக்கீட்டு வெளியில போயிட்டு வா” என அம்மா அழுதுகொண்டே எழுந்து வைத்திருந்ததை அப்பாவுக்குத் தட்டத்தில் போட்டாள். நடுநிசியில் வெளியே வந்தேன். பெட்டை நாயின் பின்னால் உர்... உர்” என நான்கைந்து ஆண் நாய்கள் ஓடிக்கொண்டிருந்தன.

வீடெங்கும் உப்புமா சிதறிக் கிடந்தது. முழங்கையை ஊன்றித் தலை தொங்கிப்போய்க் கிடந்தார். அவர் வாயிலிருந்து நூல்போல எச்சில் தரைக்கு இறங்கிக் கொண்டிருந்தது. அம்மாபொறுக்கிக் கூட்டியெடுத்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் செத்துப்போயிருந்தது.

மொதலாளி வந்தா அவனோட வயிறுவரைக்கும் குனியற நாய் மாரிக் குறுக்கீட்டுப் பதில் சொல்ற... காசு வேணும்னா அவனோடதப் புடிச்சுச் சப்புடா நீயி... எங்க பாவத்தை ஏன்டா கொட்டிக்கற... வூட்டுக்கு வந்தா இந்தப் பாழாப்போன முண்ட ரவயக் கௌறி வைச்சிருக்கறா... நல்லதையெல்லாம் கள்ளப் புருஷன் வந்து மேஞ்சுட்டுப் போயிட்டானான்னு கேக்கறன்.

மயிரப் புடுங்கி.. வாய மூடறயா... இந்த எளவெடுத்த தண்ணி உள்ள போச்சுன்னாபுத்தி ரோட்ல கெடக்கறதயா திங்கப்போயிருச்சு” என்றாள் அடக்க மாட்டாத கோபத்தோடு.

எழ முடியாமல் எழுந்து முதுகில் ஓங்கி உதைத்தார்குப்” எனச் சத்தம் கேட்டதுஅம்மா... அம்மா” என முனகிச் சுவரோடு விஜியைப் பிடித்தபடி நின்றேன்”. அவள் அழுது அழுது சோர்ந்துபோயிருந்தாள்.


கொன்னுரு ... பாவி... என்னயக் கொன்னு போடு. இந்த நரகத்துலேர்ந்து அப்பத்தான் விமோசனம் கிடைக்கும் போலிருக்கு” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். முடிகள் முகத்தின் மீது கலைந்து விழுந்துகிடக்கமூக்கிலிருந்து நீர் ஒழுகியபடியே இருந்தது.



அவர் மீண்டும் அடிக்க எழுந்து ஒரு படத்தைக் கண்டு சற்று நின்ற பிறகு அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். அங்கு மஞ்சள் கோட்டும் மஞ்சள் பேண்டும்.... அணிந்து நடுநெற்றியில்சுருட்டிவிடப்பட்டிருந்த முடி விழுந்திருக்க இடுப்பில் கைவைத்துப் புன்னகையுடன் நிற்கும் எம்.ஜி.ஆரின் நல்லநேரம்” படம் மாட்டப்பட்டிருந்தது.



அனாதையா வுட்டுட்டுப் போயிட்டியே தலைவா... அல்லாரும் ஏமாத்து நாயிக... ஒன்னக் கொடுத்து ஒம்பதச் சுருட்டிக்கறவனுங்க... தர்மம் தலகாக்கும் சொன்னியே உன்னயக் காக்கலயே...” எனத் தலையைத் தரையில் அடித்துக் கதறினார்.

ரோஸ் கலர்ல அன்பே வா”  வந்து நின்னயே... அய்யோ அத்தனையும் மண்ணுத் தின்னு போடுச்சே....” பரட்டைத் தலையோட சிகரெட்டநாயி பிஸ்கோத்தக் கவ்வற மாரி வாயில கவ்வறவனெல்லாம் தலைவனா... இந்தக் காலக் கொடுமையக் கண்டு எங்க போய் முட்டிக்கிட்டு அழுகறதுண்ணே தெரியிலியே என்ற படியே எழுந்து எம்.ஜி.ஆரின் படத்துக்கு முத்தம் தந்துவிட்டு பேவ்...வ் என ஏப்பமிட்டு மன்னிச்சுக்க... தெய்வமே... மன்னிச்சுக்க... தெரியாமக் குடிச்சுப் போட்டேன். இனிமே குடிச்சுட்டு உம் பக்கத்துல வர மாட்டேன்” என எம்.ஜி.ஆரின் காலைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.அம்மாவைப் பார்த்தேன். தலையில் கைவைத்து வெறித்துப் பார்த்திருந்தாள்.

அந்த மலையாளச்சியும் உன்ன மாதிரித்தான் தலைவா. எடுப்பான கலரு... அவ கண்ணிருக்கே சிலுக்கு’ மாதிரி. அதப் பாத்தாவே மப்பு வந்துரும். ஒரே முந்தானைல முதலாளியையும் அவம் பையனையும் கான்ராக்ட் காரனையும் வளைச்சிருக்கான்னா சும்மாவா.... இல்ல நாங்கேக்கறன்.
தள்ளாடியபடியே வந்து அம்மாவின் சேலையைப் பற்றி இழுத்தார்.

ச்சீய்... அந்தால போ” எனச் சீறினாள்.

திரும்பி நின்று நானென்ன செவுத்துலயா தேய்ச்சுக்கறது” என்றார்.

அய்யோ... சண்டாளா குழந்தீகள வச்சுட்டு இப்புடிப் பேசுறியே... இந்தத் தங்கங்களை எப்படிக் கரைசேத்தப் போறேனோஇதுக உன்னோடது நீதான் காப்பாத்தி ஒப்பேத்தணும்” எனக் கடவுளின் படத்தின் முன் இயலாமையுடன் கண்ணீர் பெருக முறையிட்டு நின்றாள். அம்மா பிறந்ததிலிருந்து வேலையைத் தவிர வேறொன்றையும் அறிந்தவளல்ல. வாய் ருசித்து வயிறு நிறையத் தின்றதுமில்லை. அவளது கல்யாணத்திற்கு முந்தைய மதியம்கூட எருவுக்காகச் சாணம் அள்ளச் சென்றதாகக் கூறியிருக்கிறாள். விஜியைக் கொஞ்சும்போது மட்டும்தான் அவள் சிரிப்பதைப் பார்த்திருக்கிறேன். விஜி துவண்டுபோய் அசதியில் உறங்கிவிட்டிருந்தது.

ஏப்பம் நடுவழியிலேயே தங்கி அப்பாவின் நெஞ்சு அடைத்துக்கொண்டதுடேய் சேகரூ ஏறி மிதிடா” என ஈனஸ்வரத்தில் கூறிவிட்டுக் குப்புறப்படுத்துக் கொண்டார். அவர் முதுகில் ஏறிக் கழுத்திலிருந்து இடுப்புவரை நடந்தபடியே மிதித்தேன்தம்பி மெதுவா மிதி” என அம்மா அருகில் வந்து சொன்னாள். வாயிலும் பின்பக்கத்திலும் காற்று மாறி மாறி வெளியே வந்தது. திடீரென அப்படியே புரண்டார். கீழே விழாமல் சுவரைப் பிடித்துக்கொண்டேன்.

நார்த் ஃபூல எடுடா” என்றவாறே அமர்ந்து மீண்டும் எச்சிலை விழுங்கினார். அவர் பாக்கெட்டில் தேடினேன். பாபின்களுக்கும் நூல்களுக்கும் இடையில் இரண்டு துண்டாக அது கிடைத்தது. உடைக்காத பீடிக்கட்டும் சில பத்து ரூபாய்த் தாள்களும் இருந்தன. நூறு ரூபாய்களை அவர் உள்பாக்கட்டில்தான் வைத்திருப்பார். பொத்தானை விலக்கி அதிலிருந்து அம்மாவுக்குப் பணம் எடுத்துத் தருவதைப் பலமுறை கண்டிருக்கிறேன். அவர் அண்டர் வேரில் லாட்டரிச் சீட்டுகள் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

பெருங்குரலெடுத்து வாங்கீட்டு வாடா” என்றதும் தரையில் சரிந்தார்.
தம்பி பாத்துப் போ...” எனச் சொல்லிவிட்டு வெளியே வந்து நான் போவதையே பார்த்து நின்றாள்.

இரண்டாம் ஆட்டம் விட்டுக் கூட்டம் கலையும் வரைக்கும் சில கடைகள் அடைக்கப்பட்டிருக்கமாட்டா. போகும் வழியில் சாத்தப்பட்டிருந்த கோவில் முன் நின்று இனிமேல சனிக்கிழமையே வரக் கூடாது” என அழுதுகொண்டே வேண்டிக்கொண்டேன். ரோட்டோரத்தில் அப்பாவைவிடவும் வயதானதலையெல்லாம் வெளுப்பேறின ஆள் முனகியபடியே போதையில் புரண்டுகொண்டிருந்தார். இன்னுமொரு முறை திரும்பினால் சாக்கடைக்குள் விழுந்துவிடுவார் எனத் தோன்றியது. கடைக்காரனுக்கு அவன் வேடிக்கைப் பொருளாக இருந்தான். திரும்புகையில் அந்த அய்யா வூட்டுக்கு நல்லபடியாப் போயிரோணும் சாமி” என்று மனத்திற்குள் கூறியபின் நிற்காமல் வீட்டிற்கு ஓடினேன். சிகரெட்டை அடுப்புத் திட்டுமீது வைக்கையில் வீட்டின் பாதியளவிற்கு வாந்தி நிறைந்திருந்ததைப் பயத்துடன் பார்த்தேன். இடுப்பில் வேட்டியின்றி ஓவ்...” என எக்கிச் செம்மண் நிறத்தில் மீண்டும் அதன் மேலேயே வாந்தி எடுத்தார். விஜி மணிக்கட்டால் மூக்கைத் தேய்த்தபடி புரண்டு படுத்தது. இருளில் நிற்கும் சிலை போல உணர்ச்சியற்ற முகத்துடன் குடத்திலிருந்த தண்ணீரை எடுத்து அதன் மேல் வேகமாக ஊற்றினாள். கட்டுப்படுத்த முடியாமல் என்னைக் கட்டிக்கொண்டு ” வெனக் கதறி அழுதாள்.


எஞ்செல்வமே... இப்படிப்பட்ட மனுஷனோட இந்த உலகத்துல எப்புடிப் பொழைக்கப் போறேன்னே தெரியலயே” என வயிற்றில் அடித்து அழுதாள். விஜி கால்களை அசைத்ததும் வாயைப் பொத்திக்கொண்டே வெளியே ஓடினாள்.

அப்பா சோர்ந்துபோய்க் கைகால்களை விரித்தபடி சுவரில் நன்றாகச் சாய்ந்துவிட்டிருந்தார். விளக்குமாறு கொண்டு நீர் ஊற்றிக் கழுவுகையில் அது அப்பாவின் காலடியில் போய்த் தேங்கி நின்றது. அம்மா தலைதூக்கிப் பார்த்தாள். அவர் அமர்ந்தபடியே வாய் திறந்து குறட்டையிட்டுக்கொண்டிருந்தார்.

(காலச்சுவடு மே 2009)

சில ஓவியங்கள் : நன்றிபொன்வண்ணன் (இதழிலிருந்து  எடுக்கப்பட்டவை)

(‘இரவுக்காட்சி’ எனும் முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது)


Monday, October 17, 2016

கடலோரம் அழியாக் காலடிச் சுவடு மற்றும் முதல் சந்திப்பு.

கடலோரம் அழியாக் காலடிச் சுவடு


’எழுதணும்ன்னு ஆசைப்படுறேன் சார்..’ இரண்டாவது சந்திப்பின் போது சுந்தர ராமசாமியிடம் சொன்னேன். ’நல்ல ஆசை தானே’ என்றார். சிரித்தேன். அவர் சிரிக்காமல் ஆமாம் என்பது போல தலையசைத்தார். சிறு இடைவெளி விட்டு ‘பயமா இருக்கு’ என்றேன். இப்போது மெல்ல சிரித்தார். ’என்ன பயம்..எழுத்து மேலயா..?

’இல்ல. எழுதுவது நல்லா வருமான்னு’

’ஓ..அது இன்னும் விஷேசம் ஆச்சே.! ஆனா எழுத்து மேல பயம் இருந்தா ஒண்ணுமே செய்ய முடியாது. காலம் ஓடிடும்’ மேலும் மனதளவில் நெருங்கி அமர்ந்தேன். ‘எழுதுகிற வரைக்கும் அப்படியெல்லாம் பலதும் தோணும். ஆனா உட்கார்ந்து எழுத ஆரம்பிச்சிடணும். இப்போ எழுதுறதுக்கே பயந்தா பின்னாடி எல்லாம் இன்னும் பயம் வந்திடும். நாளைக்கு எழுதற பத்தி இன்னைக்கே ஆசை படணும். என்னென்ன திட்டம் இருக்கு. எப்படி அதை செயல் படுத்துறதுன்னு யோசனை ஓடணும்.’ 

பெரிய விஷயமெல்லாம் சின்ன பையனிடம் பேசுவதாகத் தோன்றியது. ஆனால் அவர் சம அளவில் வைத்தே எப்போதும் உரையாடுபடுவராக இருந்தார். ‘ரைட்டிங்கிறது ஒரு ட்ரீம் இல்லையா.. ஆனா அது பகல் கனவா போயிடமா பாத்துக்கணும்’ என்று கூறி கண்ணாடிக்குள் உருளும் கண்மணிகளை மேலும் சிறியதாக்கி பற்கள் தெரியாமல் உதடு விரித்தார். அந்த ’ட்ரீம்’ என்னும் சொல் ஏனோ அந்தச் சூழல், சொன்ன தொனி போன்றவற்றால் மனதில் அப்படியே தங்கிவிட்டது. ‘ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா பிரசுர நோக்கத்தில கவனமா இருக்காம எதையாவது எழுதிப்பார்த்துக்கிட்டே இருங்க. சொல்ல வந்ததை சரியா சொல்ல முடியுதான்னு பார்த்தா உங்களுக்கே தெரியும்.’ என் முகத்தை பார்த்த பிறகு இன்னும் பொறுமையாக ’நீங்க வழியில பார்க்கிற மனிதர்கள், இயற்கை, பாதிக்கிற சம்பவம்ன்னு எழுதிப் பார்க்கலாம். அப்பறம் இதழ்களுக்கு கடிதம் எழுதறது, படிச்ச புத்தகத்தை பத்தி மதிப்புரை மாதிரி எழுதப்பார்க்கறது எல்லாம் நல்ல பயிற்சி’. அவரைச் சந்தித்து திரும்பும் போதெல்லாம் இது போன்ற சொற்களை எடுத்து வந்திருக்கிறேன். கைகளில் கூழாங்கற்களை உருட்டுவது போல பயணம் தோறும் அவற்றை மனதிற்குள் உருட்டுவது வாடிக்கையாக இருந்திருக்கிறது.

பின்னால் இருக்கும் இரண்டை எடுத்துக் கொண்டேன். இலக்கிய இதழ்களுக்கு கடிதங்கள் -குறிப்பாக அவற்றில் வெளியான சிறுகதைகள் குறித்து- அவ்வப்போது எழுதினேன். நூல்களை மதிப்பிட்டு எழுதியதும் நல்ல பயிற்சியாக அமைந்தது. மேலும் ஒன்று சொன்னார் ‘விடாம வாசிக்கணும். எழுத்தாளனுக்கு இலக்கியம் வாசிச்சா மட்டும் போதும்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அப்படியில்ல. அறிவுலகத்தில் இது தான் வாசிக்கணும்ன்னு இல்லை. வேற வேற துறையில் இருக்கிறதையும் வாசிக்கலாம். அது எப்போ எங்கே உங்களுக்கு யூஸ் ஆகும்ன்னு சொல்லவே முடியாது.’ கொஞ்சம் இடைவெளி விட்டு ‘அப்படி யூஸ் ஆகாம போனத் தான் என்ன? ஒண்ணைக் கத்துக்கிட்டீங்க இல்லயா.! பிறகு எதைப் படிக்கணும்ங்கறது அவங்க அவங்க டேஸ்ட்டைப் பொறுத்தது. ஆனா படிக்கணும். தொடர்ச்சியா வாசிக்காத ஒருத்தன் நல்லா எழுதறான்னு சொன்னா அதை நம்ப மாட்டேன்.’ என்று நிறுத்தினார். அவர் தேர்ந்த உரைநடையாளர்(Stylist) என்ற போதும் மனதையும் மொழியையும்  புத்துணர்வு கொள்ளச் செய்வது கவிதையே என்று சொல்லிவந்தார். அவரது பல உரைநடைகள் இன்று எழுதப்படும் கவிதை போலவே இருப்பதைக் காணலாம். ஆனால் அவர் எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தவிர்த்து மீதியுள்ளவைகளில் தன் உரைநடையில் தொட்ட இடங்களை விடவும் குறைவே. அதை அ.கா.பெருமாளுக்கு அளித்த நேர்காணலில் அவரே ஒப்புக் கொள்ளவும் செய்திருக்கிறார். ஆனால் உரையாடலிலும் கடிதங்களிலும் அக்கவித்துவத்தை அவர் விட்டுவிடவேயில்லை. ஒரு இசை ஆல்பத்தைக் கேட்ட பிறகு அது குறித்து தன் நண்பரிடம் சொல்லும் போது ‘அது மனதைப் பிடுங்கி ஆகாயத்தில் எறிந்தது’ என்று சொல்லியிருக்கிறார்.  

நான் போய் சந்தித்த ஆண்டுகளில் அவருக்கு நேரம் என்பது குறைவானதாக போதுமானதாக இருக்கவில்லை. ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இருப்பார். அவருடைய பழைய நண்பர்கள் அவரை விட்டு விலகியிருந்த நாட்கள் அவை. அப்போது அவருடன் தொடர்ச்சியான கடித தொடர்பில் மூவர் மட்டுமேயிருப்பதாக ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார்.  மூவரில் மற்ற இருவரும் நல்ல வாசகர்களே. ’பொள்ளாச்சி’ கோபாலகிருஷ்ணன், ’தடா’ சிறைக்கைதி ஏழுமலை. இவர்களில் கோபாலையும் என்னையும் அறிமுகப்படுத்தி வைத்து கடிதத்தொடர்புக்கு வழிகோலினார். நாங்கள் இருவரும் கடிதங்கள் எழுதிக் கொண்டோம். அந்த வயதில் ஒன்று நினைவுக்கு வந்தது. சு.ராவைக் க.நா.சுவின் பாத்திரத்திலும் எங்கள் இருவரையும் சு.ரா கிருஷ்ணன் நம்பி பாத்திரத்திலும் இருப்பதாக கருதினேன். என்னை விட வயதில் மூத்தவர் என்பதால் நான் கிருஷ்ணன் நம்பியாக இருந்து கொள்கிறேன், கோபால் சு.ராவின் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளட்டும் என நினைத்தேன். ஆனால் தலைகீழாக சு,ரா நம்பியைப் பார்க்க அவிநாசிக்கு வந்திருந்தார். கையில் க.நா.சு எழுதிய கடிதம் இருந்தது. பேசிய பிறகு கடிதத்தை கோபால் தந்தார். அதில் சு.ரா ‘உங்களுக்குள் நட்பு மலர்ந்தது சந்தோஷத்தைத் தந்தது. நேரம் இருக்குமென்றால் இருவருக்கும் மத்தியில் இருக்கும் ஊரில் பத்து நாட்கள் தங்கி இருந்து உங்களுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்னும் பொருளில் அவருக்கு எழுதியிருந்தார். அவரது பணிகளுக்கு இடையே அது சாத்தியமேயில்லை தான். ஆனால் அப்படியொன்று அவருக்குத் தோன்றியதே..! முடியுமென்றால் அதை செய்துமிருப்பார். ’அவராகவெல்லாம் ஆக முடியாது’ என்று இருவரும் பேசிக் கொண்டோம். ’ஆகாமல் போனால் தான் என்ன?’ என்று தோன்றுவதற்கு மேலும் சில ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் அது வேறு தலைமுறை. கசப்புகள் எல்லா காலகட்டங்களிலும் இலக்கியத்திற்குள் இருந்து கொண்டு தான் இருந்தன. அதைக் கடந்து அவர் பாஷையில் சொல்வதென்றால் அப்போது ‘கொஞ்சம் சொரணை இருந்தது’.   



’வழவழப்பு மட்டும் இல்லாம பாத்துக்கணும்’ என்று எழுத்து பற்றிய வேறொரு உரையாடலில் சொன்னார். ‘கச்சிதம் பத்தி சொல்றீங்களா’ என்றேன். ‘அதுவெல்லாம் எழுதி முடிச்ச பிறகு..ரைட்டிங்குள்ளயே அது வராம இருக்கிறது நல்லது. அதுவும் ஆரம்பத்துலயே அதுல கவனமா இருந்தா பின்னால சிரம படவேண்டியதேயில்லை’ என்றார். அவருக்கு எழுதும் கடிதங்களில் வாசித்த நூல்கள் அது பற்றிய என் கருத்துக்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதில் தவறாமல் சென்று வந்த இலக்கிய கூட்டங்களைக் குறிப்பிடுவேன். ஒரு பதிலில்  ’அதையெல்லாம் தெரிவு செய்து தான் செல்ல வேண்டும். அது தான் ஆரோக்கியத்துக்கு நல்லது’. என்றிருந்தார். அன்று அவ்வரிகள் புரிந்த  உதவி மிகப் பெரிது.

சுந்தர ராமசாமியிடம் பேசும் போதும் கடிதத்திலும் முதலில் எப்போதும்  அவர் கேட்கும் கேள்விகள்  ’சமீபத்தில் என்ன புத்தகம் வாசித்தேன்?’ ’ஏதேனும் புத்தகம் வேண்டுமா? தேவையெனில் நூலகத்திலிருந்து அனுப்பச் சொல்கிறேன்.’ என்பதாகவும் தான் இருந்திருக்கிறது. அவர் மறைவுக்கு ஒரு மாதத்திற்கு முன் அவருக்கு எழுதிய கடிதத்தில் அதே கேள்வியைக் கேட்டிருந்தேன். ’நேரம் குறைவு. பல மரத்தைக் கண்ட தச்சன் ஒன்றையுமே வெட்ட மாட்டான்’ என்பது போல போய்க் கொண்டிருக்கிறது’ என அமெரிக்காவில் இருந்து பதில் எழுதினார். ஆனால் அவர் முன்னர் வெட்டிச் சீராக்கி வைத்திருக்கும் மரங்கள் கண் முன்னே ஆயிரக்கணக்கான பக்கங்களாக விரிந்திருக்கின்றன. நாம் ஆசைப்பட்டு ஆனால் வெட்டப்படாமல் இருக்கும் மரங்கள் நம் நினைவை ஊடறுக்கின்றன. இவையே இந்த நினைவுக் கட்டுரையின் செய்தியாக இறுதியில் எஞ்சி இருப்பதாகக் கருதுகிறேன்.   

நன்றி : தி இந்து நாளிதழ்

16.10.2016 அன்று நாளிதழில் இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்.
--------------------------------------------------------------------------------------------------------------------

முதல் சந்திப்பு

சுந்தர ராமசாமி மறைவுக்குப் பின் அவர் குறித்து எழுதப்பட்ட நினைவுக் கட்டுரைகளில் அவரை முதன் முதலில் சந்திக்கச் சென்றது பற்றிய குறிப்பு பெரும்பாலும் இடம்பெற்றிருந்தது. அவற்றில் ஏழோ எட்டோ கட்டுரைகளில் ஒரு பகுதி ஒன்று போலவே இருந்ததைக் கண்டிருக்கிறேன். நேராக நாகர்கோவில் கிளம்பிச் செல்வார்கள். பிறகு சுதர்சன் கடையைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் பலரும் உள்ளே போக மாட்டார்கள். கடையின் முன் கொஞ்ச நேரம் அப்படியே நடப்பார்கள். வந்து பார்த்தால் கண்ணாடி ரேக்கிற்குப் பின் சு.ரா அமர்ந்திருப்பதைக் காண்பார்கள். பிறகும் நடந்து பார்த்து விட்டு வந்தால் அப்போதும் உள்ளே உட்கார்ந்திருப்பார். ‘என்ன இது?’ என்னும் தயக்கத்துடன் திரும்பி சென்று விடுவார்கள். பிறகொரு நாள் தான் அச்சந்திப்பு நிகழ்ந்ததாக எழுதியிருப்பார்கள். மலையாள எழுத்தாளர் சி.ஜே.தாமஸை காணச் சென்றதை ‘என் கடவுள் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்துத்’ திரும்பி வந்து விட்டதாக சு.ரா எழுதியிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. அது போலவே எம். கோவிந்தனைப் பார்க்கப் போய் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த போது காகத்தின் எச்சம் மேலே விழுந்ததை சாக்காக வைத்துக் கொண்டு திரும்பி விட்டதாக சு.ரா எழுதியிருப்பார். மேற்கண்ட கட்டுரைகளில் ஒன்றிரண்டு பேர் உண்மையைத் தவிர எழுத்தில் வேறெதுவும் பேசாதவர்கள். அவர்களைத் தவிர பிறர், கட்டுரை ‘அப்படியே ஸ்டைலாக’ வர வேண்டும் என்பதற்காக ’அப்படி’ எழுதியிருப்பார்களோ என்னும் ஐயம் எனக்கிருக்கிறது. அது ஐயம் தான் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

கடிதம் எழுதிக் கேட்ட பின்பு, சுமார் ஆறு மாதக் கடிதத் தொடர்புக்கு பின்(வாரத்துக்கு இரண்டு கடிதங்கள் வீதம்) அவரைக் காண என் இருபத்தியொன்றாவது வயதில் கிளம்பினேன். அப்போது கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு இரவு இரயில் கிடையாது. ’பகல்நேர பாசஞ்சரில்’ தான் போக வேண்டும். சுமார் 12 மணிநேரப் பயணம். போய் இறங்கியதும் அழைக்கச் சொல்லி எழுதியிருந்தார். குரல் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன் ரயிலடியிலிருந்து தொலைபேசினேன். மென்மையான குரலில் அவர் பெயரைச் சொல்லாமல்  பக்கத்து வீட்டு டாக்டர் பெர்யரையும் எதிர்புற அடையாளத்தையும் சொல்லி முகவரி சொன்னார்.  ஆட்டோக்காரர் இறக்கி விட்ட போது இரவு ஒன்பது இருக்கும். நானும் உள்ளே எட்டிப்பார்த்து அந்த ரோட்டில் ’கேட் வாக்’ செய்திருக்கலாம் தான். ஆனால் அது போல இந்த கே.பி.சாலை இருக்கவில்லை. ‘உன்னப்புடி..என்னப்புடி’ வேகத்தில் வாகனங்கள் குறுக்கு மறுக்காக பாய்ந்து கொண்டிருக்கும். நானும் போகலாமா வேண்டாமா என்னும் யோசனையில் அங்கு முன்னும் பின்னும் நடந்திருந்தால் என் உயிரை அவர் வீட்டின் எதிரேயிருக்கும் வேட்டாளி அம்மனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது.

’சாப்பிட்டேனா’, ‘பாத்ரூம் போகிறீர்களா’ என்றெல்லாம் கேட்டுவிட்டு ’பயணமெல்லாம் எப்படி இருந்திச்சு..ரொம்ப நேர உட்கார்ந்துக்கிட்டே வரணுமே’ என்றார்.

’ஆமா சார்..ஆனா டிக்கெட் விலை ரொம்ப கம்மி சார். திருப்பூர்ல இருந்து இங்க வர வரைக்கும் முப்பத்தி மூணு ரூபா தான் சார்” (முப்பத்தி மூணா அறுபத்தி ஆறா எனக் குழப்பமாக இருக்கிறது)

”ஓ..அதனால் தான் இதுல வந்தீங்களா..”

‘அதுவும் ஒரு காரணம் தான் சார்..ஆனா சார்..”

”யென்ன?”

”நாகர்கோவில் வர்றதுக்கு முப்பத்து மூணு ரூபா..ஆனா ஸ்டேசன்ல இருந்து இங்க வர்றதுக்கு ஆட்டோக்கு இருபது ரூபா சார்”

’கொடுத்துட்டீங்க இல்லயா..’

அது கிண்டல் எனத் தெரியாமல் ‘ஆமா சார். கொடுத்துட்டு தான் கீழே இறங்கினேன். ஆனா அவர் கிட்ட நீங்க சொன்ன அட்ரஸ சொல்லல. ராமவர்மபுரத்துல சுந்தர ராமசாமி வீடுன்னு தான் கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டார் சார். இவ்வளவு வருஷமா எழுதிக்கிட்டு இருக்கீங்க..” சட்டென இடைமறித்து அதில் அக்கறை காட்டாதவராக மீண்டும்

”சாப்பிட்டீங்களா..” என்றார். அப்போது ஒல்லியும் உயரமுமாக குச்சி மாதிரி இருப்பேன். எனக்கு முன்னரே பொள்ளாச்சியிலிருந்து கோபாலகிருஷ்னன் என்னும் என்னை விட ஆறேழு வயது மூத்தவர் அவருக்கு அறிமுகமாகி நட்புடனும் கடிதத் தொடர்புடனும் இருந்தார். கோபாலுக்கு திக்குவாய் இருந்தது. அதற்கு சில ஆண்டுகள் கழித்து சு.ரா எழுதிய ’ஒரு ஸ்டோரியின் கதை’யில் வரும் இரு வரிகள் எங்களுக்கானது என நம்புகிறேன். ‘மூங்கில் கழி போல வளர்ந்திருந்த அந்த வயசாளி’ என்பது எனக்கானதாகவும் ‘பிறவியிலிருந்தே திக்கத் தொடங்கியிருந்த வயசாளி’ என்னும் வரி (வரிகளை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன்) கோபாலுக்கானதாகவும் கருதினேன். இதை கோபாலிடம் சொன்னேன். சு.ராவிடம் ’சரி தானா சார்? எனக் கேட்க கூச்சமாக இருந்தது. எனவே கேட்கவேயில்லை.


அதுவரை இருந்து கொண்டிருந்த கூச்சம் புதிய இடம் பற்றிய தயக்கம் எல்லாம் சிறிது சிறிதாக அகன்று கொண்டிருந்தது.

”திருநெல்வேலில டிரெயின் அரைமணி நேரம் நின்னுச்சு சார். அந்த ஸ்டேசன்ல புரோட்டா சாப்பிட்டேன்.”

’ஆனா அவருக்கு உங்க பேரு தெரியாதது வருத்தமாக இருந்துச்சு சார்…’ என்றேன் மீண்டும்.

சட்டென தலையை நேர் தூக்கிப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்து தானாக தலையை அசைத்த பிறகு ”காலேஜ் ப்ரோபசர்களுக்கே என் பேர் தெரியாது. என்னையும் தெரியாது..” என் முகத்தைப் பார்த்த பின் ”அதிர்ச்சியா இருக்கா.. போக போக இதெல்லாம் உங்களுக்கே தெரியவரும்” என்றார்.

உள்ளே இருந்து கமலாம்மா வந்தார். அறிமுகப் படுத்தினார். எழுந்து நின்று வணக்கம் சொன்னேன். சுரா பற்கள் தெரியாமல் சிரிக்க கமலாம்மா ‘மோர் குடிக்கறேளா’ என்றார்.

‘என்னது மோரா..! நைட் ஒன்பது மணிக்கா..! வெயிலுக்குத் தானே மோர் குடிப்பாங்க.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் அப்படி ஒரு அம்மா வந்து கேட்டால் எப்படி வேண்டாமென்பது? தலையாட்டினேன்.

அதிர்ச்சியாகும் விதமாக சு.ரா கேட்டார் ‘வீட்ல சொல்லீட்டுத் தானே வந்தீங்க’

பயந்த முகத்துடன் ’ஆமா.. ஏன் சார்?”

’இல்ல. அவ்வளவு தூரத்துல இருந்து என்னப் பார்க்க மட்டும் தான் வந்தீங்களா? வீட்ல எதுவும் சொல்லலயா’  என அடுத்த கேள்வியைக் கேட்டார்.

மேலும் பயமாகி ’உங்க லெட்டர் எல்லாம் வருதே சார். அவங்களுக்குத் தெரியும். போற வர்ற இடமெல்லாம் சொல்லீட்டு தான் வருவேன். உங்களப் பத்தியெல்லாம் அவங்க கிட்ட சொல்லியிருக்கேன் சார்’ என்றேன். ஆனா ஏனோ அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்டார். அப்போது புரியாமலும் குழப்பமாகவும் இருந்தது. மேலும் சில ஆண்டுகள் கழித்து பிற எழுத்தாளர்கள் எழுதியிருந்ததை வாசித்த பின்பே தெளிவு பிறந்தது. இரண்டாவது முறையும் ’என்னைப் பார்க்கத் தான் இந்த வயசுல அங்க இருந்து வந்தீங்களா?’ எனக் கேட்ட போது ’ஆமாம்’ என்று சொன்னதில் இருந்த உறுதி இன்றும் நினைவில் அசைகிறது.

என்னை ஒரு மாதிரி சகஜநிலைக்கு கொண்டு வந்துவிட்டிருந்தார். நானும் பயணத்திலும் வீட்டிலும் ”அவரிடம் என்ன பேச வேண்டும்?” ”என்ன கேட்க வேண்டும்” என்பதையெல்லாம் யோசித்தபடியே இருந்ததை நினைவுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தேன். யாரும் அவரிடம் அவர் படைப்பைப் பற்றிக் கூறாத ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் துடிப்புடனும் உற்சாகத்துடன் அந்த வயதிற்கேயுரிய முதிர்ச்சியில்லாத உடல் அசைவுகளுடன் தயார் ஆகிக் கொண்டிந்தேன். இலக்கியம் பேசுவதென்றால் அவர் படைப்பைப் பற்றித் தானே இருக்க முடியும் என்னும் நம்பிக்கையில் மூளையில் திரட்டிக் கொண்டிருந்தேன். இலக்கியம் சம்பந்தமாக முதல் கேள்வியை, நேரடியான உரையாடலைத் தொடரும் பொருட்டான முதல் கேள்வியாக

‘புதுமைப்பித்தனைப் படிச்சிருக்கேளா?’ என்றார்.

Wednesday, July 13, 2016

விழித்திருப்பவனின் கனவு நூல் - மதிப்புரை



புனைவின் ரகசியக் கதவுகளைத் திறக்கும் பணி


-த.ராஜன், அர்ஜுன்





பிறகு மீண்டும் தொடரும்… ஒரு
தமிழின் நவீன விமர்சனத்தில் ஏற்கனவே உருவாகிவிட்ட தராசுத்தட்டுகளில் படைப்பை நிறுத்தி, அவற்றைப் பழைய எடைக்கற்களால் அளவிடுவதல்ல விமர்சகனின் பணி. அதற்கு படைப்பு, பண்டமோ சரக்கோ அல்ல. புதிய வெளிச்சங்களைப் படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் வழங்குவதோடல்லாமல் பின்தங்கிய படைப்புகளை நிர்த்தாட்சண்யமாக ஒதுக்கிவிடுவதுமே அவன் செய்யக்கூடிய முதன்மையான, தலையாய காரியமாக இருக்கும். 
                                    – கே.என்.செந்தில்.

இக்கூற்றிலிருந்து கடுகளவும் விலகாமல்,தன்னைப்பாதித்த முன்னோடிகளின் படைப்புகள் மற்றும் தன்மனதிற்கு நெருக்கமான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனநூல் குறித்த தனது விமர்சனங்களும் மதிப்புரைகளும் அடங்கிய விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதுபோன்ற விமர்சனக்கட்டுரைகள் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் வெவ்வேறுவகையில் தனது பங்களிப்பை ஆற்றுகின்றன. ஒருபடைப்பாளி தன்படைப்பின் பல்வேறு வாசக பரிமாணங்களை அறிவதற்கும் அதன்மூலம் தன்னெழுத்தை மெருகேற்றிக்கொள்ளவும் இம்மாதிரியான கட்டுரைகள் உதவுகின்றன.
                                                                      த.ராஜன்

                                                                         அர்ஜுன்

மேலும் இம்மாதிரியான சார்பற்ற சுயபிரக்ஞையோடு எழுதப்பட்ட விமர்சனங்கள், படைப்பாளிகள் தங்களின் அடுத்தடுத்த படைப்புகளில் தங்களை சுயமதிப்பீடு செய்வதற்கும் வாசகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து தம் படைப்புகளை சீர்படுத்தவும் கூட நிர்பந்திக்கலாம். வாசகபருவத்தினருக்கு இம்மாதிரியான கட்டுரைகள் பல புதிய நூல்களையும் ஆசிரியர்களையும் அடையாளம் காட்டுகின்றன. அவர்களுக்கான சாளரங்களின் திறவுகோலாக இவை இருக்கின்றன. புரிதலைத்தாண்டி ஒவ்வொரு படைப்பையும் உள்வாங்கிக்கொள்ளவும், வாசிப்புத்தன்மையை மெருகேற்றிக்கொள்ளவும் இம்மாதிரியான மதிப்பீடுகள் அவசியமாகின்றன.
தமிழிலக்கியத்தில் முன்னோடிகளான மௌனி, சுந்தரராமசாமி, சி.மணி, வைக்கம் முகம்மதுபஷீர் மற்றும் அம்பை ஆகியோரின் படைப்புகள் குறித்தும் அவர்களின் ஆளுமைகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. இக்கட்டுரைகளுள் பஷீரைப்பற்றியும் அவரின் படைப்புலகைப்பற்றியும் எழுதியிருப்பது குறிப்பிடத்தகுந்த கட்டுரை. மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டுரையாக ‘அனர்க்கநிமிஷங்கள்’ நிச்சயம் இருக்கும். பஷீரை மீள்வாசிப்பு செய்ய விரும்பும் வாசகன் அதற்குப் பதிலாக இக்கட்டுரையை வாசித்தாலே போதுமானது எனும் அளவிற்கு அவரது படைப்புகளிலிருக்கும் உச்சங்கள் அனைத்தையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பஷீர் கையாளும் அவருக்கே உரிய பிரத்யேகமான வார்த்தைகளைப் பொருத்தமான இடங்களில் தனது கட்டுரையிலும் பயன்படுத்தியிருப்பது கூடுதல் நெருக்கத்தைத் தருகின்றது. ஒருபெருங்காதலனின் பழுத்த அனுபவங்களை எள்ளலுடன் கூடிய ஒருமொழியில் சாத்தியப்படுத்தியவர் பஷீர். இந்தக்கட்டுரை பஷீரின் எழுத்துகளில் இருக்கும் பலப்பல அடுக்குகளை நமக்கு விவரிக்கின்றன. நாராயணியையும் சுகறாவையும் நினைவுகளால் மீட்டெடுக்கச் செய்வதாயும் காதலினால் பஷீர் கடந்துவந்தபாதையை நமக்குக்காட்டுவதாயும் இருக்கின்றன. உண்மையில் இந்த நீண்ட கட்டுரை பஷீரின் எழுத்துகளுக்கான மதிப்புரை என்பதைவிட அவருக்கான தட்சணை என்றுசொல்வதே பொருத்தமாக இருக்கும்.

எழுத்தில் சமகாலத் தன்மை இல்லாதது வாசகனுக்கு அயர்ச்சியைத் தரக்கூடியது. மெளனி போன்ற தமிழின் இலக்கிய கர்த்தாக்களை இளம் வாசகன் ஒருவன் தவிர்த்து விட இதுவே போதுமான காரணமாக இருக்கலாம். இம்மாதிரியான சமகாலச் சூழலில் மெளனியின் படைப்புகளைக் குறித்த இவரது கட்டுரை இந்த வாசக மனநிலையை மாற்றியமைக்கலாம். மௌனி அணுகுவதற்கும் உணர்ந்துகொள்வதற்கும் எளிதானவர். மௌனியை அகவுலகின் முதல் பயணியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மேலும் மௌனியை ஒரு ஞாநியாகக் காண்கிறார். எந்த ஒரு எழுத்தும் வாசகனுக்கு பரந்துபட்ட வெளியைத் திறந்து வைத்து அவ்வெழுத்துகளில் தனக்கான புரிதலைத் தேடவைக்கும். ஆனால் மெளனியின் படைப்புகள் பூட்டப்பட்ட மனக்கதவுகளுக்கு அப்பால் உள்ள நிகழ்வுகளை நமக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கின்றன.இந்தக்கட்டுரையை வாசிக்கும்போது சுசீலாவின் பழைய பழுப்பேறிய கருப்பு வெள்ளைப் புகைப்படமொன்று விழித்திரைகளுக்குள் நிழலாடுகிறது. மௌனியின் அதே பிரக்ஞையோடே அவரின் படைப்புகளின் விமர்சனத்தை முன் வைக்கிறார் கே.என்.செந்தில்.
சுந்தரராமசாமி எனும் பெயரைக் கேட்டவுடன் சட்டென அனைவருக்கும் நினைவிற்கு வருவது ‘ஜேஜே சில குறிப்புகள்’ நாவலாகத்தான் இருக்கும். பலரும் அதை வாசிக்க முயன்று தோற்றிருக்கும் கதையைக்கேட்டிருக்கிறேன். ஜேஜேவைப் பற்றிய விமர்சனங்கள் அவரைப் புரிந்துகொள்ள கடினமானவர் என்ற ஒரு மாயையை பல வாசகர்களுக்கும் தோற்றுவித்திருக்கக்கூடும். கே.என்.செந்திலின் சுந்தரராமசாமி பற்றிய கட்டுரையும் அழகியலும் தீவிரத்தன்மையும் கொண்ட ஒருவராகத்தான் சுராவைச் சுட்டுகிறது. இருந்தாலும் சுராவின் கதைகளைப் பற்றி இவர் கொடுத்திருக்கும் அறிமுகங்கள் சுராவின் மீது படிந்திருக்கும் புரிந்துகொள்ளக் கடினமானவர் என்கிற மென்திரையை விலக்கியிருக்கிறது. இந்தக் கட்டுரை சுராவை அணுகுவதற்கான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பிட்ட படைப்புகளையும் படைப்பாளிகளையும் மட்டுமே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சூழலில் அதிகம் கவனம் பெறாத அற்புதமான படைப்பான ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ நாவலுக்காக இவர் எழுதிய மதிப்புரை பாராட்டுதலுக்குரியது. எண்ணற்ற ஆட்கள் காதலை, சாலைபோலக் கடந்து செல்லும்போது பாண்டி மட்டும் ஏன் மனப்பிறழ்வுக்கு ஆளாகிறான் எனும் கேள்வியைப் பின்தொடர்ந்து செல்கின்றன கே.என்.செந்திலின் வரிகள். நாவலில் சூசகமாகச் சொல்லப்பட்ட, சொல்லாமல் விடப்பட்ட இடைவெளிகளை வாசகனின் மனதில் நிரப்ப முயற்சி செய்கின்றன. ஆனால் மிகச்சிறிய அளவிலேயே இக்கட்டுரையில் அது நிகழ்ந்திருக்கின்றது. இந்நாவல் குறித்து இன்னும் விரிவான பார்வையை கே.என்.செந்திலால் முன்வைக்க முடியும்.

ரேமண்ட்கார்வரின் மொழி எளிமையானது. மேலோட்டமான வாசிப்பில் அவரது கதைகளை வாசகனால் எளிதாகக் கடந்துவிடமுடியும். கதைகளின் ரகசியக்கதவுகளைத் திறந்துவைக்கும் பணியைச் செய்கின்றன இவரது கட்டுரை .’கதீட்ரல்’ கதையின் முடிவினை இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘அவ்விருவருக்குமான சிறுசிறு உரையாடல்மூலம் மேலும் அவர்கள் நெருக்கமாகி எழுப்பும் ‘கதீட்ர’லை காணும் வாசகன் சில கணநேர மௌனத்திற்குப் பின்னர் தன் மனதிற்குள்ளாக எழுப்பும் கதீட்ரல் அதற்கு நிகராக மேலெழுவதை அவனே வியப்புடன் உணரக்கூடும்’. கதீட்ரல் கதையினை வாசித்து முடிக்கையில் சில உணர்வுகளுக்கு நம் மனம் ஆட்படும். இக்கதையில் மட்டுமென்றில்லை, பொதுவாகவே இதுபோன்ற உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டு வருவதென்பது பெரும் சாகசம்தான். அந்த வித்தை கே.என்.செந்திலுக்கு லாவகமாக வெகுஇயல்பாக கைகூடி வந்திருக்கின்றது.
விமர்சனம் என்னும் பெயரில் படைப்புகளின் உன்னதத்தைச் சிதைக்காமல், அதில் ஒளிந்திருக்கும் நுட்பமான தருணங்களைச் சுட்டிக்காட்டிய அதேவேளையில், அதிலிருக்கும் குறைகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சித்திருக்கிறார். ஒரு படைப்பைப் பற்றிய தனது கருத்துகளை ரசனைசார்ந்து முன்வைப்பதைத் தாண்டி அது விமர்சனமாவதற்கு பரந்த நுட்பமான வாசிப்பு அவசியமாகின்றது. ரசனைக்கும் இங்கே முக்கிய பங்குண்டு. இக்கட்டுரைகளில் ஆங்காங்கே கதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் வாசிப்பு குறித்தும் முன்வைக்கும் கோட்பாடுகள் கே.என்.செந்திலினது வாசிப்புலகின் பரந்துபட்ட பரப்புகளைக் காட்டுகின்றன. ஒரு வாசகனாக விமர்சனமாக படைப்புகளின்மீது அவருக்கிருக்கும் பார்வை நமது தமிழ் இலக்கியச்சூழலுக்கு மிகவும் அத்யாவசியமானது. இந்நூலில் படைப்புகளை முன்வைத்து அவர்களின் எழுத்துலக ஜீவிதத்தை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அறிமுகம் என்பதில் இவை யாவும் இவர்களை வாசித்தே இராத சிலருக்கான கட்டுரைகள் மட்டுமல்ல. நாம் வாசித்துக் கிறங்கிப்போன பல படைப்புகளின் நுட்பமான அந்தரங்கங்களைத் தொட்டும் ஒரு நினைவுகூறலையும், வாசிப்பில் நாம் தவறவிட்ட சில அற்புதத் தருணங்களையும் நினைவுபடுத்திச் செல்கின்றன.
நன்றி : புத்தகம் பேசுது  ( ஜுலை 2016 இதழ்)

Friday, June 10, 2016

கவிதை- நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது




நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது




பச்சையிலிருந்து சிவப்புக்கு
மாறுகிறது - பதிமூன்றாவது சுற்றில்
வென்றுவர அறுபது வினாடிகள்
அவருக்கு ஒதுக்கப்படுகிறது.
துழாவி நகர்ந்து எரிச்சல் முகங்களின்
இடையே
அந்த பார்வையற்றவர் வான் நோக்கி
குழிந்திருந்த துண்டை ஏந்தியபடி
வறண்ட சாரீரத்தில்
காணா இன்பம் கனிந்ததேனோ...”
பாடுகிறார்வரிகளினிடையே  நட்சத்திரங்கள்
குட்டிக்கரணம் அடித்து விழுகையில்
கூப்பிய கரங்களுடன் ஹாரன்களுக்கு வழிவிட்டு
மரத்தடிக்கு நகர்கிறார் - கடவுள்
கிளைகளை அசைக்க பழுப்பு இலைகளும்
பூக்களும் உதிர்கின்றன அந்த நட்சத்திரங்களின் மீது.
பதினான்காவது சுற்றுக்குள் நுழையும் முன் - வினாடிகள்
அறுபதிலிருந்து தொண்ணூறுக்கு மாறியிருக்கிறது.
கடவுளால் செய்யக்கூடியதெல்லாம்
அவ்வளவுதான்

நன்றி : விகடன் தடம் இதழ் -1