நட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது
பச்சையிலிருந்து சிவப்புக்கு
மாறுகிறது - பதிமூன்றாவது சுற்றில்
வென்றுவர அறுபது வினாடிகள்
அவருக்கு ஒதுக்கப்படுகிறது. 
துழாவி நகர்ந்து எரிச்சல் முகங்களின் 
இடையே
அந்த பார்வையற்றவர் வான் நோக்கி 
குழிந்திருந்த துண்டை ஏந்தியபடி 
வறண்ட சாரீரத்தில் 
“காணா இன்பம்
கனிந்ததேனோ...” 
பாடுகிறார் – வரிகளினிடையே  நட்சத்திரங்கள்
குட்டிக்கரணம் அடித்து விழுகையில் 
கூப்பிய கரங்களுடன் ஹாரன்களுக்கு வழிவிட்டு 
மரத்தடிக்கு நகர்கிறார் - கடவுள்
கிளைகளை அசைக்க பழுப்பு
இலைகளும் 
பூக்களும் உதிர்கின்றன அந்த நட்சத்திரங்களின் மீது.
பதினான்காவது சுற்றுக்குள் நுழையும் முன் - வினாடிகள்
அறுபதிலிருந்து தொண்ணூறுக்கு மாறியிருக்கிறது.
கடவுளால் செய்யக்கூடியதெல்லாம்
அவ்வளவுதான். 
நன்றி : விகடன் தடம் இதழ் -1 

 
No comments:
Post a Comment