Tuesday, June 10, 2014

கொற்கை நாவல் பற்றிய கட்டுரை


கட்டுரை



வீழ்ச்சியின் வரலாறு


 பரந்து விரிஞ்ச கடல்ல பயணம் பண்ணும்போது ஆண்டவா. . . ஒன்னட கடல் எவ்வளவு பெருசு, நாங்க எவ்வளவு சிறுசுன்னு நெனைக்க வைக்குது” (பக்.767)

                                             தமிழில் கவிதைக்கு மிக நீண்ட மரபும் அது அளித்த பெருங்கொடைபோல இதிகாசங்களும் காப்பியங்களும் சங்கப்பாக்களுமாக நம் மொழி நிகரற்ற செல்வத்தைக் கொண்டுள்ளது. அது இன்றைய கவிஞனுக்குக் கடும் சவாலையும் அதே சமயம் அதிலுள்ள சொற்களின் வளமை தன் கவிதையியலைச் சாதகமான திசையை நோக்கி நகர்த்தும் ஆற்றலையும் அவனுக்கு வழங்குகிறது. ஆனால் எப்போதும் கவிஞனின் மனம் நவீனமானது. அதனால்தான் உலகக் கவிதைகளோடு ஒரு உரையாடலை எத்தருணத்திலும் அவனது கவிதைகளால் நிகழ்த்த முடிகிறது. ஆனால் மிகச் சமீபத்தில் மேற்கிலிருந்து இங்கு வந்துசேர்ந்துள்ள கலைவடிவங்கள் நாவலும் சிறுகதையும். ஆச்சரியமாக நவீனக் கவிதைச் சாதனைகளுக்குச் சற்றும் குறையாத அல்லது நிகரான சாதனைகள் தமிழ்ச் சிறுகதைகளில் உள்ளன. ஆனால் நாவலில் அது குறைவாகவே நிகழ்ந்துள்ளது. எனினும் கடந்த பத்தாண்டுக் கால நாவல்கள் இந்த எண்ணத்தைத் தகர்த்துக்கொண்டிருக்கின்றன. இக்காலகட்டத்தை நாவல்களின் காலம் எனக் கூறுமளவிற்கு அவ்வடிவத்தை நுட்பமாகக் கையாளும் படைப்பாளிகள் தோன்றியிருக்கிறார்கள்.

                                                   ஏற்கனவே ஊன்றப்பட்டுவிட்ட மதிப்பீடுகளுக்கு ஒத்து ஊதுபவனோ ஒழுக்க நியதிகளுக்குச் சாமரம் வீசுபவனோ அல்ல படைப்பாளி. தூசிபடிந்த அதன் இருப்பைத் தன் ஓயாத கேள்விகளால் காலிசெய்யப் பெரும் மன எழுச்சியும் ஆவேசமுமாக அவன் புரவியின் மீதேறி வருகிறான். கண்பட்டைகள் கட்டப்படாத குதிரையோட்டியால் கட்டுப்படுத்த முடியாத எழுத்து என்னும் புரவி அது. லௌகீக ஞானம் கூடாத ஒருவனையே அது ஆசையுடன் எப்போதும் தன் முதுகிலேற்றிக்கொள்கிறது. அதற்காக அவன் இழப்பவை பற்றிக் கூறப்படும் தீராத பராதிகள், இகழ்ச்சிகள், எளிய லோகாதய வெற்றியைச் சுட்டிக்காட்டி அவனை மடக்கும் தந்திரங்கள், சூழயிருப்பவர்களின் குத்தல்கள் போன்றவற்றால் அவன் சுருங்கிப்போவது உண்மைதான் என்றாலும் அதற்குப் பணிய மறுப்பவன் அவன். அவர்கள் இறந்த பின்னும் தான் வாழப்போகும் காலம் பற்றி அவன் கொண்டிருக்கும் கனவு, அவன் கண்களில் மின்ன, அவன் செய்யக் கூடுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உள்ளே கொதிக்கும் குருதியின் சூடு ஆறுவதற்குள், தன்னை ஓய்வுகொள்ள விடாது துரத்தும் அந்தக் கனவிற்குத் தன்னை இரையாகத் தர முன்வருவதுதான் அது. இதற்கு அஞ்சிப் பின்வாங்கித் தயங்கி நிற்பவர்கள் தேங்கிப்போக, வெல்ல வேண்டிய சமர் என எண்ணுபவனே மகத்தான கலைஞனாகக் காலத்தின் முன் நிற்கிறான்.


                                                      விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டு நோக்கினால் தமிழ் வாழ்க்கை என்பது உறவுகளின் வலைப் பின்னல்களால் ஆனது என்பதை உணரலாம். அதனால் இங்கு உருவான பெரும்பான்மையான படைப்புகள் அவற்றில் ஊடாடும் மனிதர்களின் மனப்புதிர்களை, நானாவிதக் கோணங்களை, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத முடிச்சுகளைக் கூற முற்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இதையே வெவ்வேறு தலைமுறைகளில் பல்வேறுபட்ட வாழ்க்கைக்குள்ளிருந்து வெளிப்பட்ட படைப்பாளிகள் வெகு நுட்பமாக, தீவிரம் குன்றாமல் எழுதி வந்திருக்கின்றனர். இத்தகு போக்கின் காரணமாகவே பெரிய நாவல்கள் சார்ந்த கனவு போதிய ஊட்டம் பெறவில்லை எனத் தோன்றுகிறது. ஆனால் இப்போது அது சார்ந்த பிரக்ஞை உருவாகியிருப்பதுடன் அதைச் சாத்தியமாக்கும் நாவல்கள் தொடர்ந்து தமிழில் வெளிவந்தபடியிருக்கின்றன. ஆனால் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரிய நாவல்களின் அணிவகுப்புக்கு இடையில் நூறு பக்கங்களுக்குள் தீவிரமான மன நிலைக்கு நம்மை அழைத்துச் சென்ற நாவல்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. சம்பத்தின் இடைவெளி, நகுலனின் நிழல்கள், அசோகமித்திரனின் தண்ணீர், வண்ண நிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு போன்றவை படைப்பின் ஆதார குணமான நிம்மதியிழப்பையும் மேல் நோக்கிய பயணத்தையும் வாசகனுக்குத் தந்ததை நினைவுபடுத்திக்கொள்ளலாம். இச்சிறிய நாவல்களின் போதாமையை உணர்ந்த படைப்பாளிகள்தாம் பெரிய நாவல் சார்ந்த சவாலைத் தமிழில் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

                                                        தமிழில் பெரிய நாவல் சார்ந்த கனவைத் தூண்டிய முதல் நூல் என ஜானகிராமனின் மோகமுள்ளைக் கூறலாம். இந்நாவல் அளித்த வாசிப் பனுபவத்திற்குச் சற்றும் கூடுதல் குறைவின்றித் தந்த அவரது அம்மா வந்தாள் அளவில் சிறிய நாவலே. பெரிய நாவலுக்கான நீண்டகாலத் தேக்கத்தை உடைத்துத் தன்னை நிறுவிக்கொண்ட நாவல் ஜெயமோகனின் விஷ்ணுபுரம். இந்த ஒப்பீடு நிகழ்த்தப்படுவதன் நோக்கம் பெரிய நாவல் என்னும் லேபிளில் படைப்பை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு சாரு நிவேதிதாவின் ராஸ லீலா போன்ற இம்சைகள் தமிழில் வெளியாகி வருவதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. நாவலின் தரம் அதன் தடிமனால் அல்ல, அதிலுள்ள கலைவெளிப்பாட்டிற்காகவே தீர்மானிக்கப்படுகிறது. இச்சூழலில் தன் முதல் நாவல் மூலம் பெரும் வாசகக் கவனம் பெற்ற ஜோ டி குருஸ் கொற்கை என்னும் பெருநாவலின் வழியாக நம்மைச் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பு மனநிறைவளிப்பதாக இருக்கிறது என்றும் படைப்பாளியாக அவரது இடம் பற்றிய எண்ணங்கள் உறுதிப்பட்டன என்றும் கூறலாம். ஒரு கலையை விளக்குவதல்ல மாறாக அப்பிரதியிலுள்ள மௌன இடை வெளிகளை, குறிப்புணர்த்தலைத் தன் வாசிப்பு சார்ந்து மதிப்பிடுவதே விமர்சகனின் பணியாக இருக்க முடியும். படைப்பை விளக்க முயல்பவன் அந்தப் படைப்பாளியையும் வாசகனையும் ஒரு சேர அவமானப்படுத்துகிறான் என்னும் புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

                                                முப்பத்தியிரண்டு குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதைகளை ஆயிரத்து நூற்றுப் பக்கம் விரித்துக் கொற்கையை மையமாகக் கொண்டு நுட்பமாகவும் சரளமாகவும் குருஸ் படைத்தளித்திருக்கிறார். நாவலில் இடம்பெறும் சகல குடும்பங்களின் வரைபடமும் நம் குழப்பம் நீங்கத் தனித்தனியாகப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமி தன் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலுக்குத் தலைமுறைகளின் வரை படத்தைத் தந்திருந்தமை நினைவில் தோன்றி மறைந்தது. இந்நாவலில் குருஸின் அனுபவ உலகத்திற்கு வெளியேயிருக்கும் ஒரு வஸ்துகூட இடம்பெறவில்லை என்பதை அவர் அளிக்கும் தகவல்களின் துல்லியத்தால் யூகித்துவிட முடிகிறது. வசதி கருதிக் கொற்கையை எதார்த்தவாத நாவலுக்குள் சேர்க்கலாம். மண்ணோடு மக்கிப்போயிற்று என எண்ணியிருந்த எதார்த்தவாதம் தொண்ணூறுகளுக்குப் பின் அலையென எழுந்த தலித் படைப்புகளின் வாயிலாக மறுமலர்ச்சி கண்டது. இசங்கள் சார்ந்து கோட்பாடுகளின் பின்னணியோடு வெளியான படைப்புகள் சூழலில் தம் கொடியைப் பறக்கவிட்டு அதைக் கொண்டாடும் முகமாக இனிப்புகளும் வழங்கப்பட்ட சில மணிநேரங்களுக்குள்ளாக அக் கொடியை அரைக் கம்பத்தில் இறக்கிக் கட்ட வேண்டிய அவல நிலைக்கு ஆளானதற்கு உதாரணங்கள் தமிழில் நிறைய உண்டு. கொற்கை எதார்த்த வகையைச் சார்ந்திருந்தும்கூட அதில் மரபான நாவல் வடிவம் மீறப்பட்டிருக்கிறது. பிரதான பாத்திரம் என்ற ஒன்றே இந்நாவலில் இல்லை. அனுபவத்திலிருந்து கிளைத்துப் பரவும் எழுத்துதான் எதார்த்தத்தின் ஆக முக்கியமான கூறு என்றாலும் அதைக் கலையாக மாற்றுவதில்தான் படைப்பாளியின் ஆளுமை அடங்கியுள்ளது. அன்றாட உலக நடப்புகளில் ஒரு கொலைகாரன் விபச்சாரியைச் சந்திப்பது கீழானதாக, கேலிக்குரியதாகப் பரிகசிக்கப்படும். ஆனால் உளவியலாளர்களின் ஆசானும் நாவல் கலையில் சிகரம் தொட்டவருமான தாஸ்தாயேவ்ஸ்கி, ரஸ்கோல்னிகவ் சோனியாவைச் சந்திக்கும்(குற்றமும் தண்டனையும்)போது அத்தருணத்தைக் கடந்து செல்ல முடியாத, அத்துக்கத்திலிருந்து மீள முடியாத நெருக்கடியை வாசகனுக்கு தாஸ்தாயேவ்ஸ்கி அளிக்கிறார். சோனியாவின் கண்ணீரின் வழியாக நாம் அடைவது மனச் சுத்திகரிப்பையே. பேரிலக்கியங்கள் ஏன் படைக்கப்பட வேண்டும், ஏன் படிக்கப்பட வேண்டும் என்ற வினாக்களை இங்கு எழுப்பிக்கொள்ளலாம்.


                                                  கொற்கையில் எண்ணற்ற பார்த்துச் சலிக்காத முகங்கள் நாவலின் பக்கங்கள் தோறும் வந்து சென்றபடியேயிருந்தாலும் அவர்கள் வெறும் நிமித்தங்களே. இவ்வளவு பாத்திரங்களையும் உறவுகளாக இணைத்த குருஸை எண்ணி வியப்பே ஓங்குகிறது. வரலாற்றின் முன்பின்னாகக் கொற்கையின் வளர்சிதை மாற்றங்களில் கொற்கையும் அம்மனிதர்களும் எவ்விதம் பரஸ்பரம் பாதிப்படைகிறார்கள் என்ற விசாரமும் அவ் விசாரத்தினூடாக மனித வாழ்க்கை ஒழுங்கமைவைக் கொண்டதல்ல, அது எதிர்பாராமைகளையும் நிலையற்ற கோலத்தையும் கொண்டதுதான் எனக் குருஸ் பல இடங்களில் வெளிப்படையாகவும் சில இடங்களில் சூசகமாகவும் உணர்த்துகிறார். கணக்கற்ற நபர்களின் உறவு நிலைகளையொட்டிச் செல்லும் சம்பவங்களைப் பின்தொடர்ந்து செல்ல, இந்நாவலின் முதல் வாசிப்பு சிறிது அயர்ச்சியைத் தருகிறது. கத்தோலிக்கப் பரதவச் சமூகத்தைப் பற்றி அதன் நீண்டகாலப் பின்னணியோடு பேசுவதாலும் அவர்களின் மொழியைத் தமிழ் நாவல்களில் இவ்வளவு விரிவாகக் கேட்கப் பெறுவதாலும்கூட அந்த அயர்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இரண்டாம் கட்ட வாசிப்பு முன்பிருந்த புகைமூட்டத்தைத் துலங்கச் செய்து தவறவிட்ட பல சிறந்த தருணங்களை நமக்குக் காட்டித்தருகிறது.

                                                             கொற்கையும் கொழும்பும் தோணிகளின் வழியாகக் கொள்ளும் வியாபார உறவுகளையும் அவ்வுறவுகளுக்கு மூலாதாரமான மனிதர்களின் அகங்காரம், குறுக்குப்புத்தி, அன்பு, கோணல்கள், வீழ்ச்சி, கண்ணீர் ஆகியவற்றையும் குறித்து விரிவாகக் கூறும் நாவல் இது. நல்ல நாவலுக்குப் போதுமானதாக இருக்கும் இது போன்ற விவரணைகள் சிறந்த நாவலுக்குப் போதாது. கொற்கையில் வீழ்ந்தவர்கள் பற்றிய சித்திரம் நுட்பமாகக் குருஸால் விவரிக்கப்படும்போது கையறுநிலையின் பொருளுக்குள் நாம் போய்ச் சேர்கிறோம். வாழ்வின் அர்த்தமின்மையைக் குருஸ் பல இடங்களில் தொட்டுக்காட்டிச் செல்கிறார். இந் நாவலில் பெரியதுறை, பாம்பன் போன்ற பிற தோணி நடை செல்லும் ஆட்களின் வாழ்க்கையும் கொற்கையினூடாக இடைகலந்து சொல்லப்பட்டுள்ளது.

பரதவச் சமூகத் தலைவனின் மரணத்தோடு தொடங்கும் இந்நாவல் ஏறக்குறைய நூற்றாண்டுக் கால (86 ஆண்டுகள்) வெள்ளத்தில் கணக்கிலடங்காக் காட்சிகளை நம்முன் விரித்தபடி சென்று பிலிப் என்னும் பாத்திரத்தின் மரணத்தோடு முடிகிறது. நாவலில் வேறு எவருமே பிலிப் அளவிற்கு வளர்த்தெடுக்கப்படவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்துடன் இடது மூலையில் பொறிக்கப்பட்டிருக்கும் கிளிஞ்சல் நாவலில் இடம்பெறும் மனிதர்களின் ஸ்திதி பற்றிய குறியீடு போல உள்ளது. ஆம்! அவர்கள் அலைகளால் கரையொதுக்கப்பட்ட கிளிஞ்சல்கள்தாம். அதுபோலவே அந்தந்த அத்தியாயத்தைத் தொடங்கும் முன் அது நிகழும் ஆண்டு தரப்படும் உத்தியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தண்டல் (தோணியின் கேப்டன்) ஆவதுதான் கொற்கையில் தோணியோட்டிப் பிழைக்க நேர்ந்திருக்கும் பலருக்கும் கனவாக இருக்கிறது. தோணியை வைத்துத் தொழில் செய்வது பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.



                                                         தோணிதான் - அரவிந்தன் முன்னுரையில் கூறுவதுபோல - இந் நாவலின் நாயகன். அந்த அளவிற்கு மிக நெருக்கமாக நாமே அத்தோணிக்குள் இருப்பதுபோலக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார். தோணியின் எண்ணற்ற தகவல்களைக் குருஸ் விலாவாரியாகச் சொல்கிறார். தோணி கட்டுதல் பற்றி ஒரு அத்தியாயமே புகைப்படத்துடன் தரப்பட்டுள்ளது. எனினும் அது நாவலின் ஓட்டத்தைத் தடுக்கவில்லை. நாவலின் பக்கங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, அது நாவலில் நுழையத் திறந்துவைக்கப்பட்ட வாசல் என நமக்குப் புலனாகிறது. உதாரணமாக தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலில் முதல் நூற்றைம்பது பக்கங்கள் உயர்குடிகளின் விருந்து வைபவங்கள் மாறி மாறிக் காட்டப்படுகின்றன. அதில் ரஷ்யச் சக்கரவர்த்தியின் வீரமும் புகழும் போனபர்ட் (நெப்போலியன்) பற்றிய எரிச்சலும் (சிலருக்குப் பாராட்டுணர்வும் உண்டு) உரையாடல்களின் மூலம் நமக்குச் சொல்லப்படுகின்றன. அந்த விருந்துகளில் அவர்களின் மனங்களில் வெளிப்படும் கூறுதான் அந்த நாவலைக் கொண்டுசெல்லும் பல காரணிகளில் ஒன்றாக அமைவதை நம்மால் உணர முடியும்.



                                                               தோணியையும் கடலையும் பற்றிக் குருஸ் கூறத் தொடங்கினால் தகவல்களின் அடர்த்தி கூடிக்கொண்டேபோகிறது. கடலையும் காற்றையும் நேரடியாகவே அனுபவித்து அறிந்த ஒருவரால்தான் தோணியை ஆளுமை செய்ய முடியும். அதை எழுத்தில் கொண்டுவரவும் முடியும். புயலில் சிக்கித் தவித்து அலைவுறும் தோணியைக் காத்துக் கரையேற்றுவதை ஒரு சாகசமாகக் குருஸ் ஆக்கிக் காட்டுகிறார். இதை வாசிக்கையில் புயலிலே ஒரு தோணியில் அதன் நாயகன் பாண்டியன் புயலிலிருந்து கப்பலை மீட்கும் பகுதி நினைவில் பறந்து மறைந்தது. அது போலவே ஸ்டீம் என்ஜீன் கப்பலிலிருந்து தோணிக்குள் இறக்கப்பட்டு நூற்பாலைக்குள் ஆட்களால் கொண்டுசெல்லப்படும் பகுதி அக்கப்பலின் கேப்டன்போலவே நாமும் வியந்து மனத்தின் இமை மூடாமல் பார்த்து நிற்குமளவிற்கு வெகு சாமர்த்தியமாக எழுதப்பட்டுள்ளது. முத்துச்சிப்பியும் வலம்புரிச்சங்கும் எடுக்கும் பரதவர்கள் கடலுக்குள் மூச்சடக்கி மூழ்கிச் செல்லும் பயணங்கள் வாசகனைத் திகைக்கவைத்தாலும் அவை வயிற்றுப்பாட்டுக்காக எனத் தஸ்நேவிஸால் அறிய நேரும்போது அத்திகைப்பு மெல்லக் கரைந்து எஞ்சுவது பெருமூச்சு மட்டுமே. மிக நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் தண்டல்கள் தொழில் கற்க வரும் சிறுவர்களைத் தம் இச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் எனினும் அவர்களின் நினைவு முழுவதும் கரையிலுள்ள குடும்பங்களிலேயே கட்டப்பட்டுள்ளது. பரதவர்கள் சில விதிவிலக்குகள் நீங்கலாக மீண்டும் மீண்டும் கூலியாட்களாகவே தோணியில் நடைசெய்யச் செல்கிறார்கள். அதற்குச் சாதி சார்ந்த முரண்களும் மிதமிஞ்சிய குடியுமே இரு பெரும் காரணிகளாக இருப்பதைக் குருஸ் நாவலின் போக்கில் குறிப்புணர்த்திச் சொல்கிறார். (கிறிஸ்துவத்தைச் சாதியின் கரங்கள் நெரிப்பதை ஆ. சிவசுப்பிரமணியன் தன் கிறித்தவமும் சாதியும் நூலில் தக்க ஆவணங்களுடன் பதிவுசெய்திருக்கிறார்.)

                                                            குருஸ் காலத்தைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாண்டிருக்கிறார். அதனாலேயே வாசிப்பில் சலிப்பு ஏற்படுவதில்லை. நாவல் வளர்ந்து செல்லச் செல்லப் பாத்திரங்களும் சிறு வயதிலிருந்து படிப்படியாக வளர்ந்து சென்றபடியேயிருக்கின்றன. இதற்கு நேர்மாறாகப் பெருமாள்முருகனின் நாவல்களில் (முதல் மூன்று நாவல்கள்) வரும் சிறுவர்கள் அந்நாவல் முடியும்போதும் சிறுவர்களாகவேயிருக்கிறார்கள். பெருமாள்முருகனுக்கு காலம் என்பது இன்றிலிருந்து நாளையை நோக்கிச் செல்வது அல்லது அதற்கும் மறுநாளை நோக்கி. அவரது நாவல்களில் காலம் சில ஆண்டுகளுக்குள் உறைந்துபோய்விடுகிறது. மாறாக சா. கந்தசாமியின் பெரும்பாலான நாவல்களில் (தொலைந்துபோனவர்கள், அவன் ஆனது, சூர்யவம்சம்) சிறுவர்கள் வருகிறார்கள். அவர்கள் அதனதன் போக்கில் வளர்ந்து அந்தந்த வயதுகளுக்குரிய காலத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். காலம் நகராமல் நின்றும் நம்மை உலுக்கிய நாவலான யூமா. வாசுகியின் ரத்த உறவை இதற்கு விதிவிலக்காகச் சொல்லலாம். காலத்தைத் தன் வரலாற்றறிவு மூலம் நுட்பமாகக் கையாண்டு வாசகனைத் தத்தளிப்பும் நெருக்கடியும் சூழச் செய்த அற்புதமான படைப்பு குர் அதுல்ஜன் ஹைதரின் அக்னி நதி. குருஸின் பலமாக அவர் காலத்தை வெள்ளம்போல் பார்ப்பதையே கூற வேண்டும். அதில் அடித்துச் செல்லப்பட்டவை போக எஞ்சியது என்ன? என்ற அடிப்படையான வினாவிலிருந்து தன் படைப்பாக்கத்தின் பயணத்தைத் தொடங்குகிறார். அதனால்தான் குருஸால் எந்த உணர்ச்சிகளுக்கும் ஆட்படாமல் நிகழ்வுகளைத் தாண்டிச் செல்ல முடிகிறது. நாவலில் வரும் எவ்வளவோ மரணங்கள், இழப்புகள், வீழ்ச்சிகள் எதிலுமே அவர் மனம் ஊன்றாமல் அனாயசமாகத் தாண்டிச் சென்றுவிடுகிறார். சுதந்திரம் பெற்ற செய்திகூட ஒற்றை வரியில் முடிந்துபோகிறது. நல்ல தண்ணீர்த் தீவுப் பக்கம் பல பிணங்கள் மிதந்துவருவதை, அதை அவர் அலட்சியம் செய்வதை, ஒரு தகவல் போல் தருவதை, எண்ணிக்கொண்ட போது ஏமாற்றமாக இருந்தது.


                                                       வெவ்வேறு காலகட்டங்களின் ஊடாக நாவல் செல்லும்போது அக்காலத்தின் சுவடுகளைக் குருஸ் பதிவுசெய்திருக்கிறார். கொள்ளையனாக அரசால் முத்திரை குத்தப்பட்ட செம்புலிங்கம் சுடப்பட்டது, துணி ஆலைகள் கொற்கைக்கு வந்து அது நிலைபெற்ற வரலாறு, கொழும்பு நடை செல்லும் ஆட்களின் வழியாக இலங்கையில் சிறுகச் சிறுகத் தலை தூக்கும் இனவெறி பின் பூதாகரமாக வளர்ந்து தமிழர்களின் கடைகள் நொறுக்கப்படுதல் என அந்த நாட்களின் நிகழ்வுகளை ஆவணமாக அல்லாமல் நாவலுடன் இடைகலந்து சொல்கிறார். பல்வேறு மாற்றங்கள் உருவானதற்கான நம்பகத்தன்மைக்குக் குருஸ் நாவலுக்குள்ளேயே புகைப்படங்களை வழங்கியிருக்கிறார்.

                                              ஒரு அனாதையைப் போல ரயிலேறி கொற்கைவந்திறங்கும் பிலிப், தான் தங்கியிருக்கும் சித்தியின் வீட்டிலிருந்து அவளது நடத்தையால் விலகி ஓடி ஆண்டாமணியால் அடைக்கலம் தரப்பட்டுப் பின் தோணிக்குள் நுழைந்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டு போராடி முதலாளியாக ஆகும் சித்திரம் நாவலில் நன்றாக வந்துள்ளது. தன்னைக் காத்த ஆண்டாமணியாரிடம், கணவனை இழந்து நிற்கும் அவரது மகளை மணக்கச் சம்மதம் பெறும் பிலிப் காலச் சுழற்சியில் தன் மகள் தனியாளாக ஆகும்போது தன் தோணியில் தண்டலாக நடைக்குச் செல்லும் நிக்கோலசுக்கு, மகள் பூங்கோதையைத் தர மறுக்கிறார். எளிதில் விடை தேட முடியாத இது போன்ற புதிர்கள்தாம் வாசகனைப் பிரதியிடம் ஈடுபாடுகொள்ளச் செய்யக் கூடியவை. வெறுமையும் கசப்புமாகப் பிலிப் தன் தள்ளாத வயதில் கொற்கையிலிருந்து நீங்கி, பின் கொற்கைக்குத் திரும்புகையில் உட்கார்ந்த நிலையிலேயே உயிர் நீங்கியவராக வந்து சேரும்போது நாவல் முடிகிறது. இதனூடாகக் கொற்கையைச் சார்ந்து வாழும் பல நூறு குடும்பங்களின் கதைகள் ஒன்றுக்கொன்று இணைந்தும் விலகியும் வந்துபோய்க்கொண்டிருக்கின்றன. பிலிப்புக்குப் பிறகு சில பக்கங்களுக்குள் வந்துபோகும் காசியை அவன் செய்கையால் மறக்க முடியாமல்போகிறது. பிரிட்டிஷ் காலம் தொடங்கி நாவல் முடியும் ஆண்டுவரை (2000) நாவலுக்குள் நிறைவேறாத காதல்கள் ஒரு சாபம்போல, துடைத்தழிக்க முடியாத கண்ணீர்போலப் பின்தொடர்ந்து வந்தபடியுள்ளன. விதிவிலக்கு சில்வெஸ்டர் மார்க்ரெட். இதில் மனதின் அடிவைப்புகளை நுட்பமாகவும் இரண்டே பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் குருஸ் கூறிவிடுகிறார்.

                    முறை தவறிய பாலியல் உறவுகள் குருஸின் முதல் நாவலைப் போலவே இதிலும் இடம்பெறுகின்றன. நாவலில் வசவுகளை உதிர்க்காத ஆண் பாத்திரங்களே இல்லை எனக் கூறிவிடலாம். அந்த வசவுகள் எப்போதும் பெண்களின் பிறப்புறுப்பைக் குறிப்பதாகவே வெளிப்படுகின்றன. அதன்மீது ஆண்களுக்குள்ளது வன்மமா? அல்லது அதைக் கூறுவதன் வழி ஒருவிதத் திருப்தியை அடைகிறார்களா? எவ்வாறு எல்லாச் சமூகங்களுக்குள்ளும் இவ்வசவுகள் ஊடுறுவின? என்பன போன்ற கேள்விகள் உளவியலாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டியவை அல்லது ஒரு நுட்பமான படைப்பாளியால் அணுகப்பட வேண்டியவை.

                                                   வலுவான பெண் பாத்திரங்களே நாவலில் இல்லை என்பதை முக்கியமான குறையாகச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கடலைத் தன் ஜீவாதார மார்க்கமாகக் கொண்டுள்ள பரதவச் சமூகத்தில் வீட்டை ஆள்பவர்களாகப் பெண்களே இருக்கக்கூடும். அப்படியிருந்தும் அதிலிருந்து ஒருவரும் மேலெழுந்து வரவில்லை. ஆனால் தீமையின் உருவங்களாகக் குருஸால் எழுதப்பட்டிருக்கும் ரஞ்சிதம், அருள்மொழி, திரேஸா, சலேட்டம்மாள் போன்றவர்கள் மனதில் பதியுமளவிற்கு மென்மையானவர்களான சலோமி, மதலேன், விர்ஜீத், பூங்கோதை ஆகியோர் மனதில் ஊன்றவில்லை. மதலேன் தற்கொலைசெய்துகொள்ளும் காட்சி நாடகத்தனமாக உள்ளது. அதுபோல ரேவதி, ரோனால்ட்மேல் காதல் கொள்வதற்குக் கூறப்படும் காரணங்கள் அபத்தத் தமிழ் சினிமாவை விஞ்சக்கூடியவையாக இருக்கின்றன. ஒரு தேர்ந்த எடிட்டர் நாவலைச் செப்பனிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக நாவல் வந்திருக்கும்.

                                                  பரதவர்களின் தெய்வமாக அவர்களைக் கட்டுப்படுத்தும் சக்தியாகப் பெண் தெய்வங்களே உள்ளன. சந்தனமாரியும் குமரியன்னையும் பரதவக் குடியினரின் முதன்மைக் கடவுளர்களாக வணங்கப்படுகின்றனர். அவர்கள் கத்தோலிக்கத்தைத் தழுவிய பின் தொழும் மேரி மாதாவைக்கூடச் சந்தனமாரியின் மாற்றுவடிவமாகவே எண்ணிக்கொள்கிறார்கள்.

                                                       பரதவர்களைப் போலவே கொற்கையில் பல்வேறு சாதியினர் தங்களுக்குள் கொண்டும் கொடுத்தும் வஞ்சம் செய்தும் அவரவர்களின் படிநிலைகளை உயர்த்திக்கொள்கிறார்கள். சிங்கராயர்கள், பல்டோனாக்கள், தல்மெய்தாகள், ரிபேரோக்கள், நாடார்கள், பிள்ளைகள், தலித்துகள் என விரிவு கொள்ளும் இந்நாவல் அவர்களின் பரந்துபட்ட வாழ்க்கையை நெருங்கிச் சென்று கூறியுள்ளது. முற்பகுதி முழுக்கத் தோணித் தொழிலில், கொற்கையில் செல்வாக்குப் பெற்று விளங்கும் ரிபேரோ, தல்மெஸ்தா, சிங்கராயர் குடும்பம் அதன் முதல் தலைமுறையில் உச்சம் பெற்று, நிலைத்து நின்று, பின் அடுத்தடுத்த சரிவுகளில் கீழிறங்கி வீழ்ச்சியுறுவதைக் கலைப்பாங்கோடு கூறுவதே இந்நாவல் முக்கியத்துவமடைவதற்குக் காரணமாக அமைகிறது. நாவலில் ஆசிரியர் குறுக்கீடு நிகழாததாலேயே இது சாத்தியமாகியுள்ளது.


                                                    ஒரு காலத்தில் துறைமுகத்தில் கோலோச்சிய பிரான்சிஸ் தல்மெய்தாவின் குடும்பம் படோடோபங்களில் சிக்கிச் சீரழிந்துபோக அவருடைய பேரன் அதே கொற்கையில் கஞ்சா விற்ற வழக்கில் கைதாகிறான். பிரிட்டிஷ் அரசிக்கு பியோனோ கற்றுத்தந்த அவரது மகள் நிறைவேறாத காதலும் அண்ணனின் அவமதிப்புமாகக் காலத்தைக் கழித்து ஒரு சிறிய வீட்டினுள் கிழவியாகக் கண்டெடுக்கப்படுகிறார். தோணி முதலாளியாக முறுக்கித் திரிந்த சிங்கராயரின் தலைமுறையோ மூன்று மிதியடிகளை ஒன்றாகத் தைத்துப் போடும் நிலைக்குக் கீழிறங்குகிறது. ரிபேரோக்களின் செல்வாக்கு குறைந்துகொண்டே வந்து பின் பொம்மைகளைப் போல ஆகிறார்கள். பல்டோனாக்களும் காலத்தின் கதியில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றுகொண்டேயிருக்கிறார்கள்.

                                                    பரதவக்குடித் தலைவன் பாண்டியபதியின் அனுமதியின்றே தங்கத் தேர் பவனி தொடங்கிவிட, அவர் மதிப்பு குறைந்துவிட்டதை உணர்ந்து தன் மணிமுடியை இறக்கிவைத்துவிட்டுக் கண்ணீருடன் அரண்மனை சேர்கிறார். வெகுகாலத்துக்குப் பின் அந்த அரண்மனை ஸ்டுடியோவாக வாடகைக்கு விடப்படும் அவலத்தைச் சந்திக்கிறது. இத்தகு வீழ்ச்சிக்குப் பின்னுள்ள மனிதர்களின் அபிலாஷைகள், கனவுகள், ஏக்கங்களைக் காலம் தன் பின்னங்காலால் தட்டிவிட்டு முன்னேறுவதைக் குருஸ் கொற்கையில் சிறப்பாகப் படைத்திருக்கிறார். பிலிப்கூட மனதளவில் வீழ்ச்சியையே எதிர்கொள்கிறார். பெருந்தனக்காரராக வாழ்ந்த தாணுமாலயப் பிள்ளையின் மகன் ஓட்டலில் மேசை துடைக்க, மருமகளோ சித்தாள் வேலைக்குச் சென்று சோரம் போகிறாள். ஒரு காலத்தில் மேசைக்காரர்களோடு (பரதவ வியாபாரிகளில் உயர்குடியினர்) உறவு வைத்துக்கொள்ளக் கொற்கையே ஏங்குகிறது. அந்தக் குடும்பத்திலிருந்து வந்த மரியசீலி, தன் மகனாலேயே குரூரமாகக் கொலைசெய்யப்படுகிறாள். மாறாக, நாடார்கள் தனிவங்கி அளவிற்குப் பொருளாதார மேன்மையை அடைகிறார்கள். தற்கொலை எண்ணத்துடன் சுற்றும் ஆண்டி நாடார் பின் தோணி முதலாளியாகிறார். முத்துலிங்க நாடாரின் வாரிசுகள் வீழ்ச்சியுறாமல் பிசிறுதட்டாமலும் ஒரு நதிபோல இரு கரைகளையும் தழுவியபடி சென்றுகொண்டேயிருக்கிறார்கள். விதிவிலக்கு சுந்தர கிருஷ்ணன் மற்றும் ராஜாமணி.


                                                        
                                              ஜோ டி குருஸ் தன் இரண்டாம் நாவலான கொற்கையைக் கலை வெளிப்பாட்டுடன் படைத்தளித்திருக்கிறார். அவருடைய நாவல் கனவுகள் மேலும் நகர்ந்து முன்னேறும் என உறுதியாகக் கூறுமளவிற்குப் பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறார். பிழைகள் அற்ற பதிப்பாகக் கொற்கையைக் காலச்சுவடு சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.


No comments:

Post a Comment